செவ்வாய், 27 செப்டம்பர், 2016

காவேரி .. கர்நாடகாவுக்கு காங்கிரஸ் மேலிடம் ஆதரவு? தஞ்சை விவசாயிகள் அதிர்ச்சி!

Congress extends its support to Karnataka in Cauvery issueடெல்லி: காவிரி விவகாரத்தில் தற்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக கர்நாடக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திக்விஜய் சிங் இப்படி கர்நாடகத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த 8ம் தேதியும் கூட இதே போலத்தான் கர்நாடகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் திக்விஜய் சிங்.


இப்போது மீண்டும் கர்நாடகவுக்கு ஆதரவாக பேசியுள்ளார் திக்விஜய் சிங். இதன் மூலம் காங்கிரஸ் மேலிடமே, கர்நாடகத்திற்கு தனது ஆதரவு முழுமையாக தெரிவித்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
இன்றைய சுப்ரீம் கோர்ட் விசாரணைக்குப் பின்னர் அதுகுறித்து திக்விஜய் சிங் கருத்து தெரிவிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் சித்தராமையா கூட்டியுள்ளார். கர்நாடக அரசு எடுக்கும் முடிவுகளை காங்கிரஸ் கட்சி ஆதரவுக்கும், உறுதுணையாக இருக்கும்.
கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுப்ரீம் கோர்ட் நிராகரித்திருக்க கூடாது. ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கர்நாடக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக உள்ளது. குடிநீருக்குதான் முதல் முக்கியத்துவம் தர வேண்டும் என்பது சர்வதேச சட்டம் என்று கூறியுள்ளார் திக்விஜய் சிங்.
தமிழகத்தின் சட்டப் போராட்டம் குறித்து வாயையே திறக்காமல் உள்ளன காங்கிரஸ் மற்றும் பாஜக மேலிடங்கள். ஆனால் காங்கிரஸ் மேலிடத்தைச் சேர்ந்த திக்விஜய் சிங் கர்நாடகத்திற்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து கட்சியின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தி விட்டார்.
தேசியக் கட்சியான காங்கிரஸ் இப்படி ஒருதலைபட்சமான முடிவெடுத்திருப்பது தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: