செவ்வாய், 13 செப்டம்பர், 2016

வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது தாக்குதல்!


முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் மீது சக கைதி ஒருவர் தாக்குதல் நடத்தினார். இதில் பேரறிவாளன் தலையில் காயம் ஏற்பட்டது. “வேலூர் சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் பேரறிவாளன் உட்பட எட்டு கைதிகள் உள்ளனர். இத்தொகுதியில் இருக்கும் ராஜேஷ் கண்ணா என்ற கைதியால் சில பிரச்னைகள் இருந்துள்ளது. இதனையடுத்து ராஜேஷ் கண்ணாவை வேறு தொகுதிக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை ராஜேஷ் கண்ணாவை வேறு தொகுதிக்கு அழைத்துச் செல்ல காவலர்கள் வந்தபோது அருகில் இருந்த பேரறிவாளன் மீது ராஜேஷ் எதிர்பாராத தாக்குதல் நடத்தியுள்ளார். இரும்புக் கம்பியைக் கொண்டு தலையில் தாக்கியுள்ளார்.
இதில் பேரறிவாளனுக்குக் காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு மருத்துவர்கள் தலையில் நான்கு தையல் போட்டனர். தற்போது அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார் சிறை அதிகாரி ஒருவர்.
பேரறிவாளனைத் தாக்கிய ராஜேஷ் கண்ணா என்ற ராஜேஷ் குமார் (41) மதுரையைச் சேர்ந்தவர். கடந்த 2001ஆம் ஆண்டு செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கடத்தல் மற்றும் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றவராவார். இதற்கிடையில் பேரறிவாளன் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி முகமது ஹனீபா, எஸ்.பி. சண்முக சுந்தரம் ஆகியோர் சிறையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேலூர் சிறைக்குச் சென்று தன் மகன் பேரறிவானனை சந்தித்துள்ளார்.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: