செவ்வாய், 13 செப்டம்பர், 2016

கனிமொழி :முதல்வர் ஜெயலலிதா கர்நாடக பிரச்சனைகளின் நிலவரம் தெரியாமல் உள்ளார்

கர்நாடகாவில் இவ்வளவு பிரச்னைகள் இருந்தும், பிரச்னைகளின் நிலவரம்
உணராமல் உள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. நேற்று மாலைதான் கடிதமே எழுதுகிறார்," என கனிமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நடக்கும் கட்சி நிகழ்வுக்காக விமானம் மூலம் திருச்சி வந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, செய்தியாளர்களிடம் கூறியதாவது.
கர்நாடகாவில் நடைபெற்று வரும் வன்முறை முதலில் தவிர்க்கப்படவேண்டும். தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வளவு பிரச்னைகள் இருந்தும், பிரச்னைகளின் நிலவரம் உணராமல் தமிழக முதல்வர் நேற்று மாலைதான் கடிதம் எழுதுகிறார். மத்திய அரசாங்கம் அங்கு அமைதியை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி தீர்வு காண வேண்டும்.
பொதுவாக நதிநீர் பிரச்சனைகளை மக்களுக்கு எதிரான பிரச்னைகளாக மாறி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவிரிக்கு நிரந்தர தீர்வு ஏற்படவேண்டும். திமுக எம்பிக்கள் பிரதமரை சந்திப்பார்களா என கேட்கிறீர்கள். நிச்சயம் தலைவர் கலைஞர் என்ன முடிவெடுக்கிறாரோ அதன்படி செயல்படுவோம்.
திமுக தலைவர் கருணாநிதி இந்த விவகாரம் தொடர்பாக பேசி வருகிறார். மத்திய அரசு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரி வருகிறார். அதுதான் திமுகவின் நிலைப்பாடு. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணவும், நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். >இதைத்தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற எதிர்கட்சி துணை  தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "கர்நாடகாவில் ஏராளமான தமிழர்கள் வாழ்கிறார்கள்.  இங்கும் ஏராளமான கர்நாடக மக்கள் வசிக்கிறார்கள். இந்நிலையில்  காவிரி பிரச்னையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதும், தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் கன்னடர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் விரும்பத்தகுந்ததல்ல. இரு மாநில மக்களின் நலனில் அக்கறையோடு இருக்க வேண்டும்.  இது இருமாநில மக்களுக்கும் உணர்ச்சி பூர்வமான பிரச்னை.  
என்னை பொறுத்தவரையில் மத்திய அரசு காவிரி நீர் பிரச்னையில் மெத்தனமாக செயல்படுகிறது.. உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம் அமல்படுத்த வேண்டியது யார்? இதை மத்திய அரசு செய்ய தவறி விட்டது. காவிரி மேலாண்மை வாரியம்தான் இரு மாநிலங்களையும் அழைத்து பேசும் அதிகாரம் உள்ளது,  மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுபடி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், இந்த பிரச்னையில்  கர்நாடக சட்ட அமைச்சர் இந்த போராட்டத்தை ஆதரிப்பதுபோல் பேசியிருப்பது கண்டிக்கதக்கது.  என்றும் இந்த வாரியம் அமைத்தால் மட்டுமே காவிரி பிரச்னையில் தீர்வு எட்டப்படும். வேலூர் சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது," என்றார்.

கருத்துகள் இல்லை: