திங்கள், 12 செப்டம்பர், 2016

ஆர்ப்பாட்டம் கண்டன பேரணிக்கு சீமான் அழைப்பு !

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கண்டன
ஆர்பாட்டமும் பேரணியும் நடத்த அழைப்புவிடுத்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:'வான் பொய்ப்பினும், தான் பொய்யாக் காவிரி' என்று நெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்துவரும் முதுமொழியே, காவிரி நதியுடன் நமக்கிருக்கும் பந்தத்துக்கான எடுத்துக்காட்டு. காவிரி நதிநீர் உரிமையானது கன்னடர்களுக்கு மட்டுமானது என்ற உளவியலைச் சித்தரித்த அரசியல் சக்திகள், மாநிலம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் போராட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது.
அதன் உச்சகட்டமாக தமிழகப் பேருந்துகளை சிறைப்பிடித்தல், தமிழக வாகனங்களைத் தாக்குதல், தமிழர்களைத் தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை குப்பையில் கிடத்தி, உச்சநீதிமன்ற இடைக்கால ஆணைகளை மதிக்காமல் மீறி இப்படியான அடாவடித்தனம் செய்வது மிகவும் கன்டிக்கத்தக்கது. காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் கர்நாடகாவுக்கு எந்தளவுக்கு உரிமையுள்ளதோ, அதேயளவுக்கு தமிழகத்துக்கும், புதுவைக்கும், கேரளத்துக்கும் உரிமை இருக்கிறது என்பதே காவிரி நடுவர் மன்றத்தின் நிலைப்பாடு. ‘எந்த ஒரு நதிக்கும் எவரும் தனி உரிமை கோரமுடியாது என்றும், அதன் தோற்றம் தொடங்கி முடியும் இடம்வரை உள்ள அனைவருக்கும் பொதுவானது என்பதுமே உலக ஒப்பந்த (RIPARIAN RIGHTS) விதிகளின் நடைமுறை’. மேலும் கீழ்ப்பகுதியில் இருப்பவர்கள் நதியைப் பயன்படுத்தும் உரிமையை தலைப்பகுதியில் இருப்பவர்கள் தடுக்கக்கூடாது என்றும் பயன்பாட்டு உரிமையை பெரியண்ணன் மனோநிலையில் மறுக்கக்கூடாது என்றும் வரையறுக்கிறது.
'உனக்கு மேலே இருக்கிறேன், நான் போடும் பிச்சைதான் காவிரி நீர்' என்று தான்தோன்றித்தனமாக கர்நாடக அரசு செயல்படுவதே அதன் மக்களுக்கு ஊக்கமாகி, 'காவிரி நீருக்குப் பதில் மூத்திரம் தருகிறோம்' என்று கேவலமான முழக்கங்களை முன்வைக்க, தமிழர்கள்மீது தாக்குதல் நடத்த காரணமாகிறது. இந்நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும், 'தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது என உச்சநீதிமன்றத்தில் கூறும்படி கர்நாடக அரசுக்கு ஆலோசனை வழங்கினேன்' என, இந்திய பெருநாட்டின் நடுவண் அமைச்சர் அனந்தகுமார் வெளிப்படையாகக் கூறுமளவுக்கு கேவலமான நிலையில் இருக்கிறது.
'அந்தந்த மாநிலங்களின் வளங்கள், அந்தந்த மாநிலங்களுக்கே என்றால், தமிழகத்தின் நெய்வேலி மின்சாரம் யாருக்குச் சொந்தம்? நெய்வேலி நிலக்கரி எப்படி நாட்டுடமையானது? நதிகளின் நீர்ப்பங்கீட்டில் தமிழகத்தைச் சுற்றியுள்ள எல்லா மாநிலங்களும் வஞ்சகம் செய்கிறதே ஏன்? காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, சிறுவாணி என எல்லா உரிமைகளுக்கும் நீதிமன்றத்தை அணுகி, தமிழர்களின் உரிமையை நிலைநாட்டவேண்டிய அவல நிலையில் இருக்கும் நாங்கள் எதனடிப்படையில் 'இந்தியர்'கள் என்ற ஒற்றை அடையாளத்தில் உள்ளடக்கிக் கொள்வது? எல்லாவற்றுக்கும் நீதிமன்றம்தான் தீர்வு என்றால், நாட்டையாள்வது? நீதிமன்றமா? பாராளுமன்றமா? போதுமான நீர்வள மேலாண்மையும், நீர்வளத்தில் தன்னிறைவு அடைவதற்கான திட்டங்களும் இல்லாததன் விளைவை இன்று இந்த தமிழ்த்தேசிய இன மக்கள் எதிர்கொண்டுள்ளோம். தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவேரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து, வரும் 15- செப்- 2016 வியாழக்கிழமை அன்று சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திலிருந்து மாலை 2 மணிக்கு, ‘காவிரி உரிமை மீட்புப் பேரணி ஆர்ப்பாட்டம்’ தொடங்குகிறது . இன உணர்வும் மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம்! என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். minnambalam.com

கருத்துகள் இல்லை: