சனி, 17 செப்டம்பர், 2016

மாறன் சகோதரர்கள் கோரிக்கை நிராகரிப்பு - டெல்லி சிபிஐ கோர்ட் உத்தரவு

கடந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தயாநிதிமாறன் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டியதாகவும், ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியதாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு வலுக்கட்டாயமாக விற்கச் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதற்கு பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டைரக் நிறுவனத்திற்கு 742.58 கோடி ரூபாய் சட்டவிரோதமாக அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த பெருமளவு தொகை மொரிசீயசைச் சேர்ந்த கலாநிதி மாறனின் கட்டுப்பாட்டில் செயல்படும் சன் குழுமத்தைச் சேர்ந்த சன் டைரக்ட் டிவி மற்றும் சவுத் ஏரியா எப்எம் நிறுவனங்கள் மூலம் பரிமாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கப் பிரிவு விசாரித்து வருகின்றன.

கடந்த 27ஆம் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆனந்த் குரோவர் ஆஜராகி வாதிட்டடார். சன் டைரக்ட் நிறுவனத்திற்கு முறைகேடாக பணப் பரிவர்த்தனை நடைபெற்றது தொடர்பான ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் 2ஜி வழக்குடன் தொடர்பு கொண்டது என்பதால், 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க முகாந்திரம் உள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது மாறன் சகோதரர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தனிப்பட்ட வழக்கு என்றும், இதனை இருதரப்பு வர்த்தக நிறுவனங்களும் தீர்த்துக்கொள்ளும் என்றும் தெரிவித்தார். எனவே ஏர்செல் மேக்சிஸ் வழக்கினை 2ஜி வழக்குடன் சேர்த்து விசாரிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
கடந்த 6ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு வழக்குகளையும் ஒன்றாக கருத முடியாது என்று மாறன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து ஏர்செல் மேக்சிஸ் வழக்கை 2ஜி வழக்குடன் சேர்ந்து விசாரிப்பதா வேண்டாமா என்பது குறித்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஷைனி இன்று அறிவித்தார். அதில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் மாறன் சகோதரர்களின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை: