செவ்வாய், 19 ஜனவரி, 2016

மத்திய அமைச்சர் மீது வழக்கு...ஹைதராபாத் தலித் மாணவன் தற்கொலைக்கு அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் ஜாதி வன்கொடுமை


Dalit Student Suicide : Case Filed Against Union Minister Bandaru Dattatreya ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மத்திய இணை அமைச்சர்  பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாணவர்கள் போராட்டம்  காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஆந்திரா, தெலங்கானாவின் பொது தலைநகரான ஐதராபாத்தில் மத்திய  பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த குண்டூரைச் சேர்ந்த ரோகித் வெமுலா (25) உட்பட 5 மாணவர்கள்  கடந்த மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள். கடந்த ஆகஸ்ட் மாதம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்களுக்கும், பாஜவின் ஆதரவு பெற்ற அகில பாரதிய வித்யார்தி பரிஷத்  அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ரோகித் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்களை சஸ்பெண்ட்  செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.
இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள், கல்லூரி விடுதியில் தங்கவும்  தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு,  மாணவர் ரோகித் வெமுலா விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ரோகித் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்  கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், ரோகித்தின் சடலம் கிடந்த அறையை பூட்டி, போலீசாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. மத்திய  தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சரும், செகந்திராபாத் தொகுதி பாஜ எம்பியுமான பண்டாரு தத்தாத்ரேயா தூண்டுதலின் பேரில்தான் ரோகித்  மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தத்தாத்ரேயா, மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகருக்கு  கடிதம் எழுதிய பிறகுதான் ரோகித் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, தத்தாத்ரேயா மீதும், பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் நேற்று பெரும்  போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பலனளிக்காததால், கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். பின்னர்,  ரோகித்தின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பந்த் உள்ளிட்ட போராட்டங்களை  மாணவர்கள் அறிவித்துள்ளதால், பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவும் பிறக்கப்பட்டுள்ளது. அங்கு போலீசார் பெருமளவு  குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையே, தலித் மாணவர் தற்கொலை தொடர்பாக, அமைச்சர் தத்தாத்ரேயா மீதும், பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் மீதும் எஸ்சி,  எஸ்டி பிரிவினருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை  நடத்தி அறிக்கை தர மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் 2 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. அக்குழு ஐதராபாத் விரைந்து விசாரித்து  வருகின்றனர். dinakaran.com

கருத்துகள் இல்லை: