வெள்ளி, 22 ஜனவரி, 2016

ஏர் டெல் இரண்டாயிரம் ரூபாய்க்கு....16,420 ரூபாய் கட்டணமாக...ரசீதுகள் கவனம் .

Arun Mo முகநூல் : ஏர்டெல் – உண்மையைச் சொல்
Arun Mo's photo.கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஏர்டெல் அலைபேசி சேவையைத்தான் பயன்படுத்திவருகிறேன். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பாக இரண்டாயிரம் வரவேண்டிய கட்டணத்தொகை, 16,420 ரூபாய் கட்டணமாக வந்தது. அதிர்ந்துபோனேன்.
காரணம், என்னுடைய பேக்கேஜ் 1800 அழைப்புகள், 1800 குறுந்தகவல்கள், 4GB இணைய சேவை ஆகிய இலவச வசதிகளை உள்ளடக்கியது. இந்த இலவச சேவைகளைத் தாண்டினால் கூட கட்டணம் இரண்டாயிரத்தைத்தாண்ட வாய்ப்பில்லை. ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி இதுபற்றி புகார் தெரிவித்த போது. கட்டணத்தொகையில் குறை இருப்பதாகவும் சரி செய்து அனுப்புவதாகவும் கூறியிருந்தார்கள். ஆனால், மீண்டும் மூன்று நாட்களில் உங்கள் பில் தொகை சரியானதே என்று குறுந்தகவல் வந்தது.
மீண்டும் மறுமுறை வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியும் பயனில்லை. தொடர்ச்சியாக சென்னை சேவை மைய மேலதிகாரி, மும்பை சேவை மைய மேலதிகாரி, என அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பியாயிற்று. பலனில்லை. இணையத்தில் ஏர்டெல் பிரச்சனைகளை சரிசெய்து வைக்கும், நண்பர்கள் சரவணன் சவடமுத்து, சுரேகா, ரமேஷ் மாயவரத்தான் ஆகியோரிடம் ஆலோசனை கேட்டேன். அவர்கள் சொன்னவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியாயிற்று. ஆனாலும், மீண்டும் ஏர்டெல் தரப்பிலிருந்து கட்டணத்தொகை சரியானதே என்று பதில் வந்தது.

பின்னர் நண்பர் வழக்கறிஞர் அய்யனாரிடம் சொல்லி, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதியச்செய்து ஏர்டெல் நிர்வாகத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பச் சொன்னேன். இதற்கிடையில் மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு லாஜிக்கலாக இந்தக் கட்டணத்தொகையை விளக்குங்கள் என்று சொன்னேன். எதிர்முனையில் ஏர்டெல் தரப்பிலிருந்து பேசிய பெண் “இந்தக் கட்டணத்தொகை தவறானதுதான், பில்லிங்க் குழுவில் தவறு நடந்திருக்கிறது. “ என்று சொன்னார். இதேபோல பலமுறை புகார் தெரிவித்தும், அலைபேசியில் பேசும்பொழுது தவறு நடந்திருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் சில நாட்களில் உங்கள் பில் தொகை சரியானதே என்று குறுந்தகவல் அனுப்புகிறார்கள் என்று அந்தப்பெண்ணிடமே முறையிட்டேன்.

அதற்கு அந்தப் பெண் ஒரு மேலதிகாரியின் தொடர்பு எண்ணைக் கொடுத்தார். அவரைத் தொடர்புகொண்டு மீண்டும் கட்டணத்தொகை பற்றி புகார் கூறியதும், இதை நாங்கள் ஐந்து நாட்களில் சரி செய்துவிடுகிறோம், என்று உறுதியளித்தார். இதற்கிடையில் கட்டணத்தொகை சரியானதே என்று உங்களுக்கு குறுந்தகவல் வந்தாலும், அதனைப் பொருட்படுத்தாதீர்கள், உங்கள் குறையை ஐந்து நாட்களில் சரிசெய்து விடுகிறோம். உறுதியாக நம்புங்கள் என்றார். சொன்னதுபோலவே ஐந்து நாட்கள் கழித்து 16, 420 என்று இருந்த பில்தொகை, இரண்டாயிரத்து 409 ரூபாயாக குறைந்தது.

இரண்டு மாத பெரும் போராட்டத்திற்குப் பிறகு, பெரும் மன உளைச்சலுக்குப் பிறகு ஏர்டெல் நிர்வாகம் இந்தப் பில்தொகையை குறைத்தது. ஆனால் அதற்காக சின்ன வருத்தத்தைக் கூட ஏர்டெல் நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இருக்கிற அயோக்கர்களில், இந்த அயோக்கியனின் சேவைதான் சென்னையில் சிறப்பாக இருக்கிறது என்பதற்காகவே, இதே சேவையில் தொடரவேண்டியிருக்கிறது என்பதற்காக நான் தான் வருந்துகிறேன். ஏர்டெல் கட்டணத்தொகையில் பிரச்சனை இருக்கும் நண்பர்கள், எங்கு முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், என்னைத் தொடர்புகொள்ளுங்கள். அந்த மேலதிகாரியின் தொடர்பு எண்ணைக் கொடுக்கிறேன். காரணம், எங்கு முறையிட்டும் கிடைக்காத தீர்வு அவரிடம் முறையிட்ட ஐந்து நாட்களில் கிடைத்தது.<

கருத்துகள் இல்லை: