வியாழன், 6 நவம்பர், 2014

Pakistan கிறிஸ்தவ தம்பதி உயிருடன் எரித்து கொலை.இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

லண்டன் : 'பாகிஸ்தானில், முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை அவமதித்ததாக கூறி, கிறிஸ்தவ தம்பதியை உயிருடன் எரித்து கொன்ற முஸ்லிம் பழமைவாதிகள் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சிறுபான்மையின மக்களை பாதுகாக்க போதிய சட்டங்கள் இயற்ற வேண்டும்' என, 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' எனப்படும் சர்வதேச பொது மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது. இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில், பிற மதத்தினருக்கு சம உரிமைகள், அதிகாரங்கள் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்கள், அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம்களால் பல விதங்களில் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். வெளிப்படையான மத சுதந்திரம் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் அங்கு தாக்குதலுக்கு ஆளாகி
வருகின்றனர். அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில், கோட் ராதா கிஷன் என்ற கிராமத்தில், கிறிஸ்தவ தம்பதி, வன்முறை கும்பலால் நேற்று முன்தினம் எரித்து கொல்லப்பட்டனர்.
திரு குரான் புனித நூலை, அந்த கிறிஸ்தவ தம்பதி அவமதித்ததாக தகவல் பரவியதை அடுத்து, கும்பலாக புறப்பட்ட ஏராளமானோர், அவர்களை அடித்து நொறுக்கி, உயிருடன் தீவைத்து எரித்து கொன்றார்கள். அவர்கள் குடியிருந்த வீடும், அதிலிருந்த பொருட்களும் சூறையாடப்பட்டன. இது போல், கடந்த சில ஆண்டுகளில், ஷியா பிரிவு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், சீக்கியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன;
ஏராளமான அப்பாவிகள் உயிர் பறிபோய்உள்ளது.

சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? : கோட் ராதாகிஷன் கிராமத்தில், கிறிஸ்தவ தம்பதி உயிருடன் எரித்து கொல்லப்பட்டதற்கு, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின், ஆசியா - பசிபிக் பகுதிக்கான பொறுப்பாளர் டேவிட் கிரிபித் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் சட்டத்தின் ஆட்சி இல்லை என்பதை உணர்த்தும் வகையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 'தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்பது போல, தவறான வதந்தியின் படி, கிறிஸ்தவ தம்பதி எரித்து கொல்லப்பட்டுள்ளனர். மத அவதூறு பரப்புபவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதை தங்களுக்கு பாதுகாப்பாக கருதும் வன்முறை கும்பல், சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அத்தகைய கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இனிமேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். சிறுபான்மை சமுதாயங்களை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்

தோற்றம்: 1961
நிறுவியவர்: பீட்டர் பெனான்சன்
அமைவிடம்: லண்டன், பிரிட்டன்
நோக்கம்: சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காக பாடுபடுவது
உறுப்பினர்கள்: உலகம் முழுவதும், 30 லட்சம்
தலைமை செயலர்: ஷலில் ஷெட்டி ( இந்தியர் )

கருத்துகள் இல்லை: