சனி, 25 அக்டோபர், 2014

மதுரை: Facebook கில் அறிவித்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவன் ! லைக்’ போட்ட 28 பேர் !

மதுரை: தற்கொலை செய்யப்போவதாக ஃபேஸ்புக்கில் தகவல் சொல்லிவிட்டு தூக்குப் போட்டுக்கொண்டார் மதுரையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர். இதை உண்மை என்று உணராமல் 28 பேர் வரை லைக் போட்டுள்ள கொடுமையும் நடந்துள்ளது. மதுரை தெற்குமாசி வீதி மஞ்சனக்காரத் தெருவைச் சேர்ந் தவர் அபுதாகிர். தகரப் பட்டறை கூலித்தொழிலாளி. இவரது மகன் ஷேக்முகமது (18). பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.இ. தகவல் தொழில்நுட்பம் படித்து வந்தார். சக மாணவர்களிடமும், வீட்டருகே உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகும் குணமுடைய இவர், தீபாவளியன்று அதிகாலை 2.10 மணிக்கு தனது பேஸ்புக் முகவரியில் ‘ஸ்வீட் எடு.. கொண்டாடு.' என குறிப்பிட்டு நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்து அனுப்பியுள்ளார். பேஸ்புக்கில் தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்த பொறியியல் மாணவர்: ‘லைக்’ போட்ட 28 பேர்
இந்நிலையில், தீபாவளியன்று ஷேக்முகமது தந்தை அபுதாகிர், தாய் ஷகிலா பேகம், 8-ம் வகுப்பு படிக்கும் தங்கை ஹாஜிராபானு ஆகியோர் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். அன்றைய பொழுதை நண்பர்களுடன் கழித்த ஷேக்முகமது இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, ரத்தக் கறைகளுடன் கூடிய ஒரு இளைஞர் ‘மன்னிக்கவும். நான் சாக விரும்புகிறேன்' என்ற சுவரில் ரத்தத்தால் எழுதிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை தனது பேஸ்புக் புரபைல் படமாக இரவு 10.12 மணிக்கு மாற்றம் செய்தார். மேலும் தன்னுடைய பெயருக்கு கீழே அதிர்ஷ்டமில்லாத நபர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை நண்பர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 28 பேர் ‘லைக்' கொடுத்துள்ளனர். அதன்பின் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் ஷேக்முகமது வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. செல்போன் அழைப்புக்கும் பதில் அளிக்கவில்லை. சந்தேகமடைந்த நண்பர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, சேலையால் தூக்கிட்ட நிலையில் ஷேக்முகமது தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. கல்லூரிக்கு கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் ஷேக்முகமது தற்கொலை செய்துகொண்டதாக கூறி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: