திங்கள், 20 அக்டோபர், 2014

தனியார் மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு நீதிமன்ற நல்லாசி !

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முறைகேடுகளையும் நன்கொடை கொள்ளையையும் கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது எனத் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.
ட்டாய நன்கொடை வசூலித்தது மற்றும் மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக தில்லுமுல்லுகள் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் சிக்கிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த நான்கு வழக்குகளையும் ஒன்றன்பின் ஒன்றாக ஊத்தி மூடிவிட்டது, சென்னை உயர்நீதிமன்றம். தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்கள்தான் நடத்திவருகின்றன என்ற நிலையில், இத்தீர்ப்பு அக்கும்பலின் அட்டூழியங்கள், முறைகேடுகள் அனைத்தையும் ஏறத்தாழ சட்டப்பூர்வமாக்கிவிட்டது.
கேத்தன் தேசாய்
கோடிகோடியாய் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை வாரி வழங்கிய இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேத்தன் தேசாய் (கோப்புப் படம்)
கடந்த 2009-ம் ஆண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுவது தொடர்பாக “டைம்ஸ் நௌ” தொலைக்காட்சியும் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேடும் இணைந்து நடத்திய இரகசிய புலனாய்வு நடவடிக்கையில், சென்னை போரூரிலுள்ள சீறீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பதிவாளர் சுப்பிரமணியன், தம்மிடம் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்காக அணுகிய மாணவர் ஒருவரிடம் கட்டாய நன்கொடை ரூ 40 இலட்சம் கேட்டதும்; சென்னை குரோம்பேட்டையிலுள்ள சீறீ பாலாஜி மருத்துவக் கல்லூரியின் நிர்வாக அதிகாரியான ஜான்சன் ரூ 20 இலட்சம் கேட்டதும் வீடியோ ஆதாரத்துடன் அம்பலமாகின.

மருத்துவக் கல்லூரிகள் சட்டவிரோதமான முறையில் கட்டாய நன்கொடை வாங்கிக்கொண்டு சீட்டை விற்கின்றன; பகற்கொள்ளையடிக்கின்றன என்ற உலகறிந்த உண்மைக்கு மேலும் ஒரு ஆதாரம் இது. குற்றச்சாட்டில் சிக்கிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கட்டாய நன்கொடைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது, தமிழக அரசின் கடமை; அவ்வாறு செய்யவில்லை. மாறாக, வழக்கை சி.பி.ஐ. வசம் தள்ளிவிட்டது.
ரேட்டு பேசி சீட்டை விற்ற கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யாத அதேசமயம், தனியார் மருத்துவக் கல்லூரியின் இணைப் பதிவாளர் மீது, அரசு ஊழியருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சட்டப்பிரிவான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்தது, சி.பி.ஐ.
தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கண்காணித்து அவற்றை முறைப்படுத்த வேண்டிய இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தலைவராக இருந்த கேத்தன் தேசாய், சம்பவம் நடந்த சமயத்தில் குற்றச்சாட்டில் சிக்கிய ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் இயக்குநர்களுள் ஒருவராகவும் இருந்தார். கேத்தன் தேசாய்க்கு தெரியாமல் அக்கல்லூரி கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபட்டிருக்க முடியாது. இதன்படி, எம்.சி.ஐ.யின் தலைவராக இருந்துகொண்டே, கட்டாய நன்கொடை வசூலிப்பதற்கு உடந்தையாகச் செயல்பட்டதற்காக கேத்தன் தேசாயையும் இவ்வழக்கில் இணைத்திருக்க வேண்டும். சி.பி.ஐ. அவ்வாறு செய்யவில்லை.
வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பொருத்தமற்ற குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டே பதியப்படவில்லை என்பதையும் நீதிபதி அருணா ஜெகதீசன் சொந்த மூளையைப் பயன்படுத்திக் கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டும். மாறாக, சி.பி.ஐ. ஏற்படுத்தித் தந்த இந்த ஓட்டையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, “தனியார் மருத்துவக் கல்லூரியின் இணைப் பதிவாளர் என்பவர் பொது ஊழியர் அல்ல; எனவே, அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது செல்லாது” என்றும், “மாணவர் சேர்க்கைக்காகத்தான் அவர் 40 இலட்சம் பேரம் பேசினார் என்பதற்கும் போதுமான ஆதாரம் இல்லை” என்றும் கூறி வழக்கை ஊத்தி மூடினார், அவர்.
மற்ற வழக்குகள், மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்காக முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பானவை. இந்திய மருத்துவ கவுன்சிலின் அப்போதைய தலைவர் கேத்தன் தேசாய் கோடிகளில் பணத்தை வாங்கிக்கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பொறுப்பில் அவர் இருந்த காலகட்டத்தில் அவரால் அனுமதியளிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.சி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவு மறு ஆய்வை மேற்கொண்டது. தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, சீறீபாலாஜி கல்வி அறக்கட்டளை நடத்தும் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரியில் உள்ள சிறீ இலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை நடத்தும் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வின் பொழுது முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததோடு, தினக்கூலித் தொழிலாளர்களை நோயாளிகளைப் போல நடிக்க வைத்தும், வெளியிலிருந்து மருத்துவர்களை அழைத்து வந்து அவர்களுக்குப் போலியாக அடையாள அட்டை வழங்கிப் பேராசிரியர்களாக நடிக்க வைத்தும் அங்கீகாரத்தை பெற்றிருப்பது அம்பலமானது.
எம்.சி.ஐ. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக அக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்து புதிய மாணவர் சேர்க்கையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். எம்.சி.ஐ.யின் கடமை அது என்ற போதிலும், மோசடியில் ஈடுபட்ட அம்மூன்று கல்லூரியின் நிர்வாகிகளுக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சிலோ, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அருணா ஜெகதீசன்

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முறைகேடுகளையும் நன்கொடை கொள்ளையையும் கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது எனத் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.
மாறாக, வழக்கை சி.பி.ஐ.யின் தலையில் கட்டிவிட்டு கைகழுவிச் சென்றது. சி.பி.ஐ. தன் பங்குக்கு இவ்வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு தோதாக, போலியாக கொண்டுவந்து நிறுத்தப்பட்ட மருத்துவர்களின் பெயர்களைக்கூடப் பதிவு செய்யாமலும்; எம்.சி.ஐ.யின் நேரடி ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்ட குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்களை வழக்கில் இணைக்காமலும் பல ஓட்டைகளுடன் வழக்கைப் பதிவு செய்தது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், முக்கியக் குற்றவாளியான எம்.சி.ஐ.யின் முன்னாள் தலைவர் கேத்தன் தேசாயின் பெயர் குற்றப்பத்திரிக்கையிலிருந்தும் முதல் தகவல் அறிக்கையிலிருந்தும் சதித்தனமான முறையில் நீக்கப்பட்டன.
சி.பி.ஐ. இவ்வாறு மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்குச் சாதகமாக நடந்து கொண்டதென்றால், சென்னை உயர் நீதிமன்றமோ தன் பங்குக்கு, “எம்.சி.ஐ.யின் ஆய்வில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தது; தினக்கூலித் தொழிலாளர்களை நோயாளிகளாகவும், உள்ளூர் மருத்துவர்களைப் பேராசிரியர்களாகவும் நடிக்க வைத்ததெல்லாம் தவறுகள்தானே தவிர, கிரிமினல் சட்டத்தின் கீழ் தண்டிக்கும் அளவிற்கு குற்றமில்லை” என்றும் “விதிமீறல்களில் ஈடுபடும் மருத்துவக்கல்லூரிகள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவோ, இத்தவறுகளை விசாரணை செய்யவோ சி.பி.ஐ.க்கு அதிகாரம் இல்லை” என்றும் சொல்லி கேசை மூடியது.
இதனைவிடவும் இழிவான முறையில் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்க முடியும் என்பதை உணர்த்தியிருக்கிறது, சமீபத்தில் வெளிவந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பு. போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத காரணங்களினால் மாதா மருத்துவக் கல்லூரி, முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட நான்கு மருத்துவக் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மறுத்திருந்தது எம்.சி.ஐ. இவற்றுக்கெதிராக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடுத்த வழக்கில் கடந்த வாரத்தில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், “அடிப்படை வசதிகள் இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக எம்.சி.ஐ.யின் விதியைக் காட்டி மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மறுப்பது தவறு. நாட்டுக்கு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். முந்தைய ஆய்வில் எம்.சி.ஐ. சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்துவிட்டதாகக் கூறும் மருத்துவக் கல்லூரிகளில் மறு ஆய்வை உடனே நடத்தி, இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதியை வழங்குமாறு” எம்.சி.ஐ.க்கு உத்திரவிட்டிருக்கிறது.
எனவே, இதன்மூலம் பெறப்படும் நீதி என்னவெனில், கல்லூரியின் தாளாளரே சிறப்பு சேர்க்கை முகாமிற்கு ஏற்பாடு செய்து கல்லூரி வளாகத்திலேயே கோடிக்கணக்கில் நன்கொடை வசூலிக்கலாம். எம்.சி.ஐ. கல்லூரியை ஆய்வு செய்ய வரும் பொழுது வெள்ளுடையில் கால்டாக்சி டிரைவர்களைக் கூட நிறுத்தி வைத்து இவர்தான் மருத்துவப் பேராசிரியர் என்று புளுகலாம். கீற்றுக் கொட்டகையைப் போட்டுக்கொண்டு, சமையல் கத்திகளை கையில் வைத்துக்கொண்டு மருத்துவக் கல்லூரிதான் நடத்துகிறோம் என்று அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியை மட்டுமே ஏற்றுக்கொண்டு அங்கீகாரத்தை எம்.சி.ஐ. புதுப்பிக்கலாம். உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புகளின் அடிப்படியில் இவை எவையும் இனி சட்டவிரோதம் கிடையாது. ஏனெனில் நமக்கு ‘மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்’!
- இளங்கதிர்vinavu.com 

கருத்துகள் இல்லை: