மிழக ஊடகங்களில் பெரும்பாலனவை அதிமுக, பாஜகவை ஆதரித்து செய்தியா, கருத்தா என்று இனம் காணா முடியாத வகையில் எழுதி வருகின்றன. அம்மாவுக்கு வாக்கப்பட்ட குமுதம் தேர்தல் கணிப்பின் முதல் பகுதியை வெளியிட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் அதிமுக வெல்லுமாம். அதே போல துக்ளக்கும் அதன் நிருபர்களின் வைத்து தொகுதி நிலவரத்தை அதிமுகவிற்கு ஆதரவாக வெளியிடுகிறது.
வைகோ, விஜயகாந்த், மோடி, ராமதாஸ்
இன்று வந்த ஜூவியில் தமிழருவி மணியன் ஐந்து பக்கத்தில் காங்கிரசுக்கு நீதி உபதேசம் செய்கிறார். அடுத்த ஜூவியில் பெண்கள் சர்வேயாம். கண்டிப்பாக மோடியும், பாஜகவும் முதல் இடத்தில் இருக்கும் என்பதை வரும் சனியன்று தெரிந்து கொள்ளலாம். மோடியை கைவிடாத துக்ளக், அம்மாவைதான் முதன்மைப்படுத்துகிறது. கிராமங்களில் மோடி அலை இல்லை என துக்ளக் செய்தியாளர்கள் எழுதுகிறார்கள். அப்படி மோடி அலை வீசுவதாக எழுதிய ஜூவியை விட சோ-தான் மோடியை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய முதல் பிரபலம் என்பது உண்மை.

“மக்கழே, மக்கழே” என்று எங்கே ஆரம்பித்தோம், எதில் முடிப்போம் என்று யாரும் ஊகித்தறியாதபடி விஜயகாந்த் த்ரில்லர் அரசியல் பேசுகிறார். வேட்பாளரை அறிமுகப்படுத்தும் போது “ஏம்பா உன் பேரென்ன” என்று எதார்த்தமாக மூன்று மைக்குகளை வைத்துக் கொண்டே கேட்கிறார். இரவில் யாரும் ஆதித்யா சேனலை பார்க்காமல் கேப்டன் டிவியை பார்த்து சிரிக்கிறார்களாம். கேப்டனை காமடியானாக அழகு பார்க்கும் ஊடகங்கள் எழுதி வைத்து ரம்பம் போல அறுக்கும் ஜெயாவை அப்படி காமடி செய்வதில்லை. அம்மா பயம் என்றால் சும்மாவா?
மதுரை ஆதீனம் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தை செய்து வருகிறார். அம்மா பிரதமராக ஆன பிறகு ஓபி முதலமைச்சராகவும் பிறகு ஓபியின் மகன் முதலமைச்சராக வருவார் எனவும் பேசுகிறாராம். இது உளவுத் துறை மூலம் அம்மா வசம் போனால் என்ன செய்வது என்று ஓபி மகன் திகிலில் இருக்கிறாராம். பிரச்சினைகள் ஆண்டைகள் மூலம்தான் வரவேண்டுமென்பதல்ல, அது மதுரை ஆதினம் போன்ற அடிமைகளின் மூலமும் வரலாம். ஆதீனத்தின் வளர்ப்பு வாரிசு நித்தியானந்தா ஏன் இன்னும் அம்மா புகழ் பாட வரவில்லை, தெரியவில்லை.
எனினும் நக்கீரன் இதழ் மட்டும் திமுக ஆதரவு கொண்ட ஒரே பத்திரிகையாக ‘உறுதி’யுடன் வெளிவருகிறது. அந்த வகையில் அந்த நிலையில் இருந்து பத்திரிகையை சமநிலை குன்றாமல் இருப்பது போல காட்டிக் கொண்டு நடத்துவது ‘பெரிய’ விசயம்தான். அதிமுக, பாஜக ஊடகங்கள் தமிழகத்தின் தேர்தல் வெற்றி குறித்து அவரவர் கட்சி சார்பில் மட்டையடியாக சொல்லும் போது நக்கீரன் 50-50 என்று சொல்ல வேண்டியிருக்கிறது. கூடவே அதன் நியாயங்களையும் தேடி யோசித்து எழுத வேண்டியிருக்கிறது. இதனாலேயே நக்கீரனது தேர்தல் செய்திகள் மற்ற ஊடகங்களை விட கொஞ்சம் யதார்த்தமாக இருக்கிறது.
வைகோ
பம்பரம் தாத்தா வைகோ
“பம்பரத் தாத்தா வர்றாருடோய்..- சிறுவர்களைக் கவரும் வைகோ” என்று இன்றைய நக்கீரன் இதழில் வந்திருக்கும் விருதுநகர் தேர்தல் செய்திகள் உண்மையில் ஒரு காவியத்தின் சுவை குன்றாத கலைத் தகுதியைக் கொண்டிருக்கிறது. இந்தத் தலைப்பை பார்த்தால் வைகோவே மகிழ்ச்சியடைவார். வருங்கால இளைய சமூகத்தின் மனதில் ஒரு தலைவர் அதுவும் அவர்களது விளையாட்டு பொருளால் நினைவு கூறப்படுவது யாருக்கும் கிடைக்காத பேறுதான்.
ஆனாலும் பம்பரம் சின்னம் பட்டியலிலேயே இல்லை, ஒரே சின்னத்தில் போட்டியிடும் அங்கீகாரமும் இல்லை என்ற ஒளியில் இத்தலைப்பு கொஞ்சம் சோகம் பெறுகிறது. வைகோவின் சந்தர்ப்பவாதமும், துரோகமும் கம்பீரமாக இல்லாமல் சோகத்துடனும், அவலத்துடனும்தான் வெளிப்பட வேண்டுமா என்பது இதுவரை தத்துவஞானம் விடை அறியாத கேள்வி.
விருதுநகர் தொகுதியின் எல்லா பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திப்பது என்று வைகோ முடிவு செய்திருப்பது ஏதோ மக்கள் பால் உள்ள அன்பினால் மட்டுமல்ல. அப்படியாவது ஒரு சோக சிம்பதியை கிளப்பி வாக்குகள் ஏதும் தேறுமா என்ற வரலாற்றுக் கட்டாயத்தில் வைகோ இருக்கிறார். ‘மாவீரன்’ பிரபாகரனுடன் வன்னிக்காட்டில் புலிக் குட்டிகளுடன் விளையாடிய இந்த புயல் இன்று கரிசல் காட்டில் முள்ளுக் காட்டில் எல்லாம் சென்றாவது தினசரி ஓரிரு வாக்குகளை சேகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதைப் பார்த்தால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கண்ணீர் விடுவார்கள். வைகோவை இப்படி அனாதாரவாய் சுற்ற விட்ட தமிழ்நாட்டு மக்களை திட்டி தீர்ப்பார்கள்.
அவரது வேனில் படுக்கை வசதிகளோடு டாய்லெட் வசதியும் இல்லை. இயற்கை உபாதைகளுக்கு கூட அவர் மக்களைப் போல முள்ளுக்காட்டு பக்கம்தான் ஒதுங்குகிறார். ஒரு தொகுதிக்குள்ளேயே சுற்றி வருவதால் அவர் வீடு போன்ற வசதிகள் கொண்ட வேன் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். மேலும் குண்டும் குழியுமாக உள்ள விருதுநகர் நாட்டுப்புறத் தடங்களில் செல்லும் ஆடம்பர வேன்கள், கரகாட்டக்காரனில் வரும் கவுண்டமணி கார் போல உட்கார்ந்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து மோடி அலையில் அடுக்கு மாடிகளை கட்ட வேண்டிய வைகோ இங்கே ஆளில்லாத கரிசல் காட்டு கிராமங்களில் அம்போவென சுற்ற வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வியும் அடுத்து வருகிறது.
ஏன் இப்படி வசதிக் குறைவுகளோடு பிரச்சாரம் செய்கிறீர்கள் என்று கேட்டால், மதிமுகவை ஏழைகளின் கட்சி என்கிறார் வைகோ. இதனால் மதிமுக பணக்காரர்கள் மற்றும் முதலாளிகளிடம் பணம் வாங்காது என்பதல்ல. யார் கொடுப்பார்கள்? விருதுநகரிலிருந்து இந்தியாவிற்கே வணிகம் செய்யும் நாடர், ரெட்டியார் முதலாளிகள் பலரும் திமுக, அதிமுக என்று கனமாக கவனித்தாலும், பாஜகவும் அவர்களது குட்புக்கில் உள்ள கட்சி என்றாலும் மோடியை முதன்முதலில் தோளில் தூக்கிச் சுமந்த இந்த மறத்தமிழனை தோற்றுப் போகும் ஓய்ந்து போன குதிரையாகவே அவர்கள் பார்க்கிறார்கள். எனில் இங்கே ஏழைகள் கட்சி என்பது விரும்பிப் பெற்ற சிறப்பல்ல. சோகமாக இருந்தாலும் வைகோவே இதை மனமொப்பி ஒப்புக் கொள்வார். பண விசயத்தில் யாரும் பொய் பேச முடியாதே?
வைகோ பிரச்சாரம்
ஒவ்வொரு இடத்திலும் டிரம்ஸ் வாசிக்கிறார்கள். 500 வாலா பட்டாசு வெடிக்கிறார்கள்.
இதனால் வைகோவின் அன்றாட பிரச்சார தினங்கள் அழுது வடிவதாக அர்த்தமல்ல. அவர் பேசும் ஒவ்வொரு இடத்திலும் டிரம்ஸ் வாசிக்கிறார்கள். 500 வாலா பட்டாசு வெடிக்கிறார்கள். இரண்டும் வைகோ உலாவில் ஏற்பாடு செய்யப்பட்டு உடன் வருகின்றன. அருகில் சிவகாசி இருப்பதாலும், நமத்துப் போன பட்டாசுகளை நன்கொடையாக வாங்குமளவு அவருக்கு செல்வாக்கு இருப்பதாலும் வெடிகளுக்கு குறைவில்லை. ஆனாலும் அம்மா கட்சி போல 1000, 10,000 வாலாக்களுக்கு வழியில்லை. டிரம்ஸ் வாசிக்கும் தொழிலாளிகளும் பட்ஜெட் குறைவினால் மாதம் முழுவதும் அதே சாயம் போன கோட்டு சூட்டுகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் வைகோவின் உற்சாகத்தை இவை குறைத்து விடவில்லை. உற்சாகம் என்ற ஒன்று இருந்தால் அல்லவா குறைவதற்கு?
செல்லுமிடங்களில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களோ இல்லை யாராவது வேலை இல்லாத ஊர்த் தலைவரோ வைகோவை பாராட்டி சால்வை போடுகிறார்கள்.  கூட்டணி பொறுப்பாளர்களில் பலர் பிளக்ஸ் பேனரில் கூட இடம்பிடிக்காத அளவுக்கு செல்வாக்கு கொண்டிருந்தாலும் வைகோ அவர்களது பாராட்டை மனம் நிறைந்து ஏற்கத்தான் செய்கிறார். இல்லை மறுத்துவிட்டால் என்ன சாதித்துவிட முடியும் நண்பா? இதன்றி செல்லுமிடங்களில் திரளான மக்கள் சேர்வதில்லை. சிறுவர்கள் மட்டும் பம்பரத் தாத்தா என்று ஓடி வருகின்றனர். கிரிக்கெட்டை மட்டுமே விளையாட்டாக பார்க்கத் தெரிந்த நாட்டில் பம்பரத்திற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மோடி பாணியில் சொன்னால் வளர்ச்சியா, வீழ்ச்சியா?
பத்து பேர் அல்லது இருபது பேர் நின்றாலும் அதைக் கண்டு வைகோ முகம் சிறுத்தாலும் ஒரு நிமிடம் பேசுகிறார். ஆயிரம், இலட்சங்களுக்கு ஆசைப்பட்டு ஐந்து, பத்துக்களை இழந்து விடக்கூடாது என்ற அவரது பொறுப்பு மலைக்க வைக்கிறது. ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் இரண்டு நிமிடங்கள். நூறைத் தாண்டினால் மட்டும் 8 நிமிடங்கள் பேசுகிறார். இவையெல்லாம் ஆட்களைப் பார்த்தாலே வாட்சைப் பார்க்காமலேயே கச்சிதமாக நிறைவேறி விடுகிறது. காலமும், மனிதர்களும், அரசியலும் இப்படி உயர் கணித சூத்திரங்கள் தோற்கும் அளவுக்கு கனகச்சிதமாக போடப்பட்டிருப்பது அனைவரும் வியப்படையும் ஒன்று.
விஜயகாந்த் - வைகோ
வைகோ தவிர்க்காமல் பேசுவது “எனது அருமை சகோதரர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க. ஆதரவோடு” என்பதைத்தான்
இந்த நிமிடக்கணக்கிலும் கூட அவர் தவிர்க்காமல் பேசுவது “எனது அருமை சகோதரர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க. ஆதரவோடு” என்பதைத்தான். இதிலிருந்தே பாஜக கூட்டணியில் 14 தொகுதிகள் மட்டுமல்ல அதற்கும் மேலேயே பெறுவதற்கு விஜயகாந்திற்கு அருகதை உண்டு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். புரட்சிப் புயல் இப்படி கேப்டனது ஆதரவிலாவது ஒரு சில வாக்குகளைத் தேற்ற முடியுமா என்று நினைத்திருப்பது வெறும் பணிவு மட்டுமல்ல, உயிர்த்திருப்பதின் போராட்டமும் கூட.
இந்த இலட்சணத்தில் தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது, மோடி பிரதமர் ஆவது உறுதி என்ற வழக்கமான பிரச்சாரத்தை அவர் பல கிராமங்களில் தவிர்க்கிறார். இத்தகைய கிராமப்புறங்களில்தான் மோடியே அடுத்த பிரதமர் என்று மக்கள் தெரிவித்ததாக ஜூவி எழுதியிருக்கிறது. அதை திருமாவேலனின் மனங்கவர்ந்த வைகோவே பொய் என நிரூபித்திருப்பது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.
நேர்மறையில் மோடி அலையை மட்டுமல்ல, எதிர்மறையில் எந்தக் கட்சியையும் எதிர்த்து வைகோ பேசுவதில்லை. இது நாகரீகம் என்று படித்தவர்கள் சொல்லலாம். ஆனால் மற்ற கட்சிகளைத் திட்டி, இருக்கும் இரண்டு வாக்குகளைக் கூட இழக்க விரும்பாத வைகோவின் சரணடைவு என்று நம்மைப் போன்ற பாமரர்கள் அதை கண்டுபிடிக்கலாம். மேலும் பம்பரத் தாத்தா என்று பிள்ளைகள் ஓடிவரும் போது, ‘குழந்தைகளுக்கு பிடிக்குமென்றுதான் பம்பரத்தை தேர்ந்தெடுத்தேன், அப்பா அம்மாவிடம் சொல்லி எனக்கு வாக்களிக்க செய்யுங்கள்’ என்று குழந்தைகள் சேனல்கள் மொழியில் பேசுகிறார். குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டு பொருளை வைத்துத்தான் வாக்குகளை வாங்க முடியும் என்றால் இது என்ன வகை அரசியல்?
பெண்களை பார்த்தால் மதுவுக்கு எதிராக வெயிலிலும், மழையிலும் 1500 கி.மீட்டர் நடந்ததை சொல்லி அதை டிவியில் பார்த்திருப்பீர்களே என்று இவரே கேட்டுக் கொள்கிறார். அம்மாவின் டாஸ்மாக்கையும், குடிக்கும் ஆண்களையும் இந்த பெரியவர் என்ன செய்து விட முடியும் என்று அந்த பெண்கள் அடுத்த வேலையை பெருமூச்சுடன் செய்ய திரும்பி விடுகிறார்கள். குடி எதிர்ப்பு கூட பெருமளவு வாக்குகளை திரட்டி விடுவதில்லை.
தேவர் சாதி மக்கள் வாழும் பகுதிகளில் முத்துராமலிங்கத்தை தேசியம், தெய்வீகம் இரு கண்கள் என்ற அந்த இத்துப்போன டயாலக்கை சொல்லி முடித்து விடுகிறார். அப்படிப் பார்த்தாலும் தேவருக்கு அம்மா தங்கம் கொடுத்தார், வைகோ என்ன கொடுத்தார் என்று மக்கள் ஆய்ந்தால் என்ன செய்வது? தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் காயம்பட்ட ஜெயப்பிரகாஷ் எனும் தலித் சகோதரனுக்கு அப்பல்லோவில் சிகிச்சை பார்க்க ஏற்பாடு செய்தேன் என்று என்ஜிவோ பாணியில் பேசுகிறார். பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டிக்காமல் மருந்து வாங்கி, பிளாஸ்திரி ஒட்டினேன் என்று பேசினாலே போதும் என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் அவ்வளவு இளித்தவாயர்களா என்ற கேள்வி வருகிறது. இங்கேயும் வைகோவின் சந்தர்ப்பவாதம் இயல்பாகவே சொதப்புகிறது.
“பெரிய கட்சிகளோடு கூட்டணி வைக்காமல் கிராம்த்தில் ஆட்கள் எப்படி வருவார்கள், பட்டிக்காட்டுல பிரச்சாரம் பண்ணி, உடம்பை கெடுத்துக்கிட்டு, டயத்தை வேஸ்ட்டு பண்ணுறாரு” என்று நந்திரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் அக்கறையுடன் கேட்கிறார். ஓகோ வைகோவை அரசியலில் இருந்து ஓய்வெடுக்கச் சொல்கிறாரோ? வைகோவை கேட்டால் இது ராஜபக்சேவின் சதி என்பார். வைகோவை தோற்கடிக்க ராஜபக்சே ஏதாவது செய்ய வேண்டிய அவசியம் வைகோ எனும் ஆளுமையிலும் இல்லை, விருதுநகநர் தொகுதியிலும் இல்லை. இனி சிஐஏ சதி என்று சொல்லாததுதான் பாக்கி. இருப்பினும் ஓரிரு கிராமத்து பெண்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்ட வைகோவிற்குத்தான் எனது ஓட்டு என்று காதில் தேன் பாய்ச்சாமல் இல்லை.
வைகோ
சாதனைகளை விட வேதனைகளையே அதிகம் முன்வைக்கிறார்.
தேவர், தலித் பகுதிகளில் பேசுபவர் நாயக்கர், ரெட்டியார் சாதி மக்கள் பகுதிகளில் என்ன பேசுவார் என்று நக்கீரன் எழுதவில்லை. மற்ற சாதி வேட்பாளர்களால் சாதி வாக்குகள் பிரிந்து தெலுங்கு பேசும் மக்கள் வாக்குகள் நம்மை காப்பாற்றிவிடாதா என்று வைகோவிற்கு ஒரு கணக்கு உண்டு. இதன்றி அவர் விருதுநகரை தெரிவு செய்ய வேறு காரணங்கள் இல்லை. ஆனாலும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்ற பெரிய கட்சி பிரமுகர்கள் சொன்னால் கேட்கும் இந்த பிரிவு மக்கள் வைகோவிற்கு அனுதாபத்தை தருவார்களே அன்றி வாக்குகளை தருவார்களா என்பது கேள்விக்குறி. அந்த வகையில் சுயசாதிப் பெருமையும் இங்கே காப்பாற்றிவிடும் என்று உறுதியளிக்க முடியாது.
சின்னமூப்பன்பட்டி என்ற ஊரில் இரவு நேரத்திலும் மக்கள் ஓரளவுக்கு கூடியிருந்தார்கள். வைகோவின் உற்சாகத்திற்கு சொல்ல வேண்டுமா என்ன? வேறு எங்கும் இப்படி ஒரு கூட்டத்தை பார்க்கவில்லை என்று மனதாரா பாராட்டிவிட்டு தான் வெளிப்படையாக பேசுபவன் என்றும் பாராட்டிக் கொள்கிறார். பிறகு என்னைப் பற்றி நானே சொல்லிக் கொள்வதா என்று வெட்கத்துடன் அடுத்த கருத்துக்கு போகிறார். இந்த கூட்டத்திலும் அவர் மோடி அலை, ஆளும் கட்சி, ஊழல், மக்கள் பிரச்சினைகள் என்று எதுவும் பேசவில்லை. பிறகு என்ன பேசினார்?
“வெளிநாட்டில் யாரும் விபத்தில் மாட்டிக்கிட்டா, உடனே வைகோவுக்கு போனப்போடுன்னு சொல்றாங்க. நான் எந்தப் பதவியிலும் இல்லை. ஆனா எப்படியோ பிரதமர்ட்டயோ யார்ட்டயோ சொல்லி அவங்கள காப்பாத்த முயற்சி பண்ணுறேன்” என்று உலகத் தமிழர்கள் அனைவரும் நமக்கு ஒருத்தன் இருக்கிறான் என்று நினைப்பதை பெருமையுடன் பேசுகிறார். கடைசியில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மொழியில், “ஆபத்து வந்தால் உதவும் வைகோ” என்று சிறுத்துப் போய்விட்டார். என்றாலும் ஈழம், முல்லைப் பெரியாறு என்று வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருப்பேன் என்று முழங்கவும் அவர் மறக்கவில்லை.
அதே நேரம் இந்த போராட்ட வீரத்தின் அளவும், தகுதியும் வைகோவே அறிந்த ஒன்றுதான். யாரும் அதைச் சொல்லி அவருக்கு புரியவைக்கத் தேவையில்லை. ஆதாரம்? அடுத்து அவர் பேசும் சோகப்பாட்டுதான்…..
கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ரணத்தை வைகோ இன்னமும் மறக்கவில்லை. மக்களுக்கு நினைவுபடுத்தாமலும் இருப்பதில்லை. சென்ற தேர்தலில் மற்ற கட்சிகள் அதிக பணம் கொடுத்து மக்கள் வாக்குகளை விலைக்கு வாங்கியதை அவர் தன்னெஞ்சு அழுகும் அணியலங்காரத்தில் செல்லுமிடங்களிலெல்லாம் மீண்டும் மீண்டும் விவரிக்கிறார். இந்த் தேர்தலிலும் அதை தடுக்க முடியாது என்று பயந்து பேசும் வைகோ, என்றாலும் அந்த பணத்தை வாங்கினாலும் நீங்க நன்றாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று முடித்துக் கொள்கிறார்.
ஊசி போட்டார், ஆபத்திற்கு குரல் கொடுத்தார் போன்ற சாதனைகளை விட இத்தகைய வேதனைகளையே அதிகம் முன்வைக்கிறார் என்று வைகோவின் சுற்றுப்பிரயாண சாரத்தை நக்கீரன் பதிவு செய்திருக்கிறது. இதனால் நக்கீரன் திமுக ஆதரவோடு வைகோவை அம்பலப்படுத்துகிறது என்று பொருளல்ல. உண்மையில் வைகோவின் வேதனையைத்தான் நக்கீரன் பகிர்ந்திருக்கிறது.
ஜேத்மாலினியைக் கூட்டி வந்து பாராட்டுக் கூட்டம் நடத்தினார். ஆனால் தமிழினவாதிகளோ அம்மாதான் எழுவர் விடுதலைக்கு காரணம் என்று பட்டம் சூட்டி விட்டார்கள். தமிழருவி மணியன் தனக்கென ஒரு தொகுதியை கேட்டு மதிமுகவிற்கு கொடுத்தார். இருப்பினும் வைகோவிற்கு ஈரிலக்க தொகுதிகள் கிடைக்கவில்லை. அழகிரியை நாணிக் கோணி சென்று பார்த்தார். விருந்தினர்களை வராதே என்று எப்படி சொல்ல முடியும் என்பதற்கு மேல் அழகிரி அருளவில்லை. மோடி கூட்டத்திற்கு சத்யாவை அனுப்பினார். மோடியை ஓட்டலில் சென்று சந்தித்தார். ராஜ்நாத் சிங்கை விமான நிலையம் சென்று வரவேற்றினார். இருப்பினும் பாஜக பிரஸ் மீட்டில் அவர் அருகே அமர கூட வைகோவிற்கு வழியில்லை. தமிழக முன்னேற்ற முன்னணி ஆரம்பித்த சிவாஜி கணேசனின் இடம் இன்றளவும் வைகோவால் பிடிக்கப்பட்டிருக்கிறதோ?
சோகம் மேல் சோகம் வந்தாலும் இந்த மனிதனை வாழ வைப்பது எது? சந்தர்ப்பவாதம் இவ்வளவு பலமான ஒன்றா?
இப்படி அன்றாடம் தேர்தல் பரப்புரையில் பேசி முடித்த பின் வைகோ இரவு தங்கலுக்கு சென்று விட்டு என்ன செய்வார்? உணர்ச்சிகளின் தொடர் விளைவு மற்றும் மனித உளவியிலின் அடிப்படை விதிகளின்படி அவர் விடியும் வரை கதறி கதறி அழுதிருக்க வேண்டும். அதை பதிவு செய்ய நமக்கு ஊடகங்கள் இல்லை என்பதால் வினவு அதை உரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்து தருகிறது.
மோடி அலையில் ஒரு சந்தர்ப்பவாதியின் மூச்சு திணறல் எந்த அளவு சித்திரவதை தரும் என்பதை உணர வேண்டுமானால் நீங்கள் வைகோவா பிறந்து வைகோவாக வாழ்ந்து பார்க்க வேண்டும். vinavu.com