சனி, 29 மார்ச், 2014

ஆம் ஆத்மி : வாரணாசியில் கேஜ்ரிவாலின் புதிய அரிதாரம்

அரவிந்த் கெஜ்ரிவால் புனித கங்கையில் நீராடிய காட்சிகள் இன்றைய செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளன. சந்தனப் பட்டை, குங்குமத்துடன் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார். தரிசனத்துடன் சேர்த்து இங்க் அபிஷேகமும் கிடைத்திருக்கிறது. எத்தனையோ கறைகளைப் போக்கியுள்ள கங்கை இதையும் இந்நேரம் போக்கியிருக்கும் என்று நம்பலாம்.
இங்கே பிரச்னை தாக்குதல் அல்ல. அதைச் செய்தவர்கள் யார் என்பதும் அல்ல. அரவிந்த் கெஜ்ரிவால் எதற்காக இந்தப் புனித நீராடலை காமிரா சகிதம் நிகழ்த்தியிருக்கிறார்? நரேந்திர மோடியை வாரனாசியில் எதிர்கொண்டு வீழ்த்தவேண்டுமானால் இந்துக்களின் வாக்குகளைக் கவரவேண்டும்; அதற்குப் புனித கங்கையில் நீராடவேண்டும் என்று அவர் நம்புகிறாரா?

இந்துக்களைக் கவர கங்கை. முஸ்லிம்களைக் கவர மசூதி விசிட் (இதையும் கெஜ்ரிவால் கையோடு முடித்துவிட்டார்). இனி சீக்கியர்களைக் கவர பொற்கோயிலையும் இன்னப்பிற சமூகத்தினரைக் கவர இன்னப்பிற வழிபாட்டு இடங்களையும் ஒரு வலம் வந்துவிட்டால் முடிந்தது கதை.  மொத்தத்தில், ஒரு வண்ணமயமான ஃபேன்ஸி டிரஸ் ஷோவை நடத்திமுடித்துவிட்டால், பல பிரிவுகளில் இருந்தும் கணிசமான வாக்குகளை உருவி எடுத்துவிடலாம். (இதில் பழங்குடியினரும்கூட விதிவிலக்கல்ல. வில், அம்பு, இறகு தொப்பி சகிதம் நின்று போஸ் கொடுக்காத தலைவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்!)
இதுநாள்வரை காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் பிற தேசிய, மாநிலக் கட்சிகளும் மக்களைக் கவர இவற்றைத்தான் செய்து வந்திருக்கின்றன. மாற்று அரசியல், மாற்று சிந்தனை என்று முழங்கிவந்த ஆம் ஆத்மியும் இப்போது அதே குட்டையில் முங்கி எழுந்துள்ளது.
இது பற்றி வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் தனது கருத்தை இன்று ட்வீட் செய்துள்ளார் :
If @ArvindKejriwal claims he is different from BJP n Congress than (sic) he should have stayed away from usual mandir/masjid ritual visit.
ஓர் அரசியல்வாதி தன் மத அடையாளங்களை வெளிப்படுத்தி வாக்கு கேட்பது தவறா? ஆம் என்கிறார் இர்ஃபான் ஹபீப்.
Becoz religion is a private matter while election should be a festival of democracy beyond caste/religion @ArvindKejriwal
ஆனால், இர்ஃபான் ஹபீபின் இந்த லட்சிய வார்த்தைகளை இந்திய அரசியல்வாதிகள் என்றுமே பொருட்படுத்தப்போவதில்லை. அரசியல்வாதிகளுக்கு மதம் என்பது தனிப்பட்ட விவகாரமாக பெரும்பாலும் இருந்ததில்லை. மாறாக, மதம் அவர்களுக்கு ஒரு தூண்டில். அதைவிட்டால் ஓட்டு கேட்க வேறு மார்க்கம் இல்லை அவர்களிடம். அதைவிட்டால் மக்களை நெருங்க வேறு உபாயம் இல்லை அவர்களிடம். நிச்சயமாக மதத்தை நீக்கிவிட்டுதான் இனி கட்சி நடத்தவேண்டும் என்று சொன்னால் பலர் தங்கள் அலுவலகங்களை இழுத்து மூடவேண்டிவரும். இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என்று மதத்தின் அடிப்படையில் மட்டுமே மனிதர்களைத் தொகுக்கவும் கையாளவும் இவர்கள் கற்றிருக்கிறார்கள். அது மட்டுமே அவர்களுக்கு லாபகரமானதாக இதுவரை இருந்து வந்துள்ளது. இதைவிடவும் லாபகரமான வேறொரு வழி கிடைக்கும்வரை மதமே அவர்களுக்கு ஒரே வரப்பிரசாதம்.
The Argumentative Indian புத்தகத்தில் அமர்த்தியா சென் ஓரிடத்தில் இது பற்றி விவாதிக்கிறார். மக்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் இருக்கிறார்கள். ஏழைகள், பணக்காரர்கள் இருக்கிறார்கள். உழைப்பாளிகள்,  முதலாளிகள், எழுத்தாளர்கள், விவசாயிகள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், தச்சு வேலை செய்பவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என்று பல பிரிவினர் இருக்கின்றனர். இடதுசாரிகள், வலதுசாரிகள் இருக்கின்றனர். கிரிக்கெட் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் இருக்கின்றனர். காதலித்தவர்கள், தோற்றவர்கள், வென்றவர்கள் இருக்கின்றனர். திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் இருக்கின்றனர். நல்லவர்கள், கெட்டவர்கள், தீங்கு விளைவிப்பவர்கள், தீவிரவாதிகள் ஆகியோரும் இருக்கின்றனர். இவர்களில் சிலர் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பார்சிகள், ஜைனர்கள், பௌத்தர்கள்.
இவை அனைத்தையுமே ஒருவருடைய அடையாளமாகக் கொள்ளமுடியும். அந்த அடையாளத்தின் அடிப்படையில் அவர்களைத் தொகுக்கவும் வகைப்படுத்தவும் முடியும். அனைத்தையும் விட்டுவிட்டு மதத்தை மட்டும் cherry picking செய்யவேண்டிய அவசியம் என்ன? அதையே ஒருவருடைய பிரதானமான அடையாளமாக முன்னிறுத்தவேண்டிய அவசியம் என்ன?
காரணம் அவர்களிடம் சமூகவியல் பார்வை இல்லை. வளமான, அறிவுபூர்வமான, அறிவியல்பூர்வமான சிந்தனை முறை இல்லை.  எல்லாவற்றையும்விட முக்கியமாக, அரசியல் சித்தாந்தம் இல்லை. மதத்தைத் தவிர, சாதியைத் தவிர வேறொரு கருவியை அவர்கள் இதுவரை கையாண்டதில்லை. எனவே அவர்களுக்கு சாதியும் மதமும் இருந்தாகவேண்டும்.
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஹசன் சுரூரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், ‘முஸ்லிம் அடிப்படைவாதம் நீடிக்கவேண்டும் என்றே இந்து அடிப்படைவாதிகள் விரும்புவார்கள்.’ (India’s Muslim Spring : Why is Nobody Talking about it? Hasan Suroor). முஸ்லிம் அடிப்படைவாதம் ஒழிந்துவிட்டால் பாஜக தடுமாறவேண்டியிருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் இது பொருந்தும்.
அரசியலில் இருந்து மதத்தையும், மதத்தில் இருந்து அரசியலையும் பிரிக்காமல் அப்படியே வைத்திருப்பதே அரசியல்வாதிகளுக்குப் பலனளிக்கும். மதத்தை அரசியலின் இன்னொரு வடிவமாகவே அவர்கள் காண்கிறார்கள். அல்லது அரசியலின் நீட்சியாக.
காங்கிரஸும் பாஜகவும் மட்டுமல்ல, ஆம் ஆத்மியும்கூட அதே மதவாதப் பாதையில்தான் நடைபோடுகிறது என்பது நிச்சயம் அந்த இரு கட்சிகளுக்கு ஆறுதலையே அளிக்கும் என்று நம்புகிறேன் tamilpaper.net

கருத்துகள் இல்லை: