செவ்வாய், 25 மார்ச், 2014

கருவில் இருந்த குழந்தையின் பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு சிறை


சட்டவிரோதமாக கர்ப்பிணி பெண்ணின் கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்த குற்றத்திற்காக தானேவைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்களுக்கு தலா இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு தானே நவ்பாடா பகுதியை சேர்ந்த மகப்பேறு மருத்துவரான உமேஷ், தன்னிடம் பரிசோதனைக்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணின் வேண்டுகோளுக்கிணங்க கர்ப்பத்தில் இருந்த குழந்தையின் பாலினம் கண்டறிய முயற்சி செய்துள்ளார். இதற்காக ரூ 30 ஆயிரம் கட்டணம் வசூலித்துள்ளார் உமேஷ். இதற்காக சம்பந்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை உமேஷ் ராஜஸ்தானில் பொக்ரானுக்கு அழைத்து சென்று சோதனை நடத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உமேஷுக்கு மருத்துவர் ஜவஹர் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதற்கிடையே சட்டவிரோதமாக கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் இருந்த குழந்தையின் பாலினம் சோதனை செய்யப்பட்ட தகவலறிந்த அப்பகுதி சுகாதாரத்துறை அதிகாரி ஆர்.டி. கேந்திரே சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தானே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மருத்துவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி எல்.கவுதம் உத்தரவிட்டார். மேலும், மருத்துவர் உமேஷுக்கு ரூ 5 ஆயிரமும், ஜவஹருக்கு ரூ 10 ஆயிரமும் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

tamil.oneindia.in 

கருத்துகள் இல்லை: