திங்கள், 24 மார்ச், 2014

உட்கட்சி கோஷ்டி பூசலில் தி.மு.க.நிர்வாகிகள் ! தேர்தல் பணியில்அமைதியாக இருக்க முடிவு ?

தி.மு.க.,வில் உள்ள, சில மாவட்ட செயலர்களின், பெரியண்ணன் பாணி செயல்பாடுகளால், புறக்கணிக்கப்பட்டுள்ள தி.மு.க., நிர்வாகிகள், தேர்தல் பணியில் ஈடுபடாமல் அமைதியாக இருக்க முடிவு செய்துள்ளனர். அதனால், அக்கட்சி வேட்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அதிருப்தியில் உள்ள மாவட்ட நிர்வாகிகளை அறிவாலயத்திற்கு அழைத்து, ஸ்டாலின் தலைமையில், விரைவில், 'பஞ்சாயத்து' நடைபெறவுள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, தேர்தல் பணியில் ஈடுபடுவதில், கோஷ்டி பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது.
பரிதாபமாக: தென்சென்னையில், மாவட்ட செயலர் அன்பழகனுக்கும், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனுக்கும் இடையே நிலவும் பனிப்போரில், வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சிக்கி, பரிதாபமாக தவிக்கிறார். அதாவது, தேர்தல் பணி தொடர்பான, ஆலோசனைக் கூட்டத்திற்கு மா.சுப்பிரமணியனின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.அதனால், 'மாஜி' கவுன்சிலர் மந்தைவெளி பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.மத்திய சென்னை தி.மு.க., சார்பில், அண்ணாநகரில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் பகுதி செயலர், சோ.மா.ராமச்சந்திரன், முன்னாள் வட்ட செயலர் உமாபதி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கவில்லை. தற்போதைய பகுதி செயலர் ராமலிங்கத்திற்கு எதிராக உட்கட்சி தேர்தலில் பணியாற்றியதால், அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால், மத்திய சென்னையிலும் தேர்தல் பணி தொய்வடைந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட செயலர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்,எல்.ஏ., உக்கம்சந்த், கன்டோன்மென்ட் சண்முகம் ஆகியோர் மத்தியில் கோஷ்டி பூசல் உச்சகட்டம் அடைந்துள்ளது.மாடப்பாக்கம் பேரூராட்சி நிர்வாகி, எல்.எஸ்.மோகன், தாம்பரம் ஆதிமாறன், செம்பாக்கம் சந்திரன், அச்சரப்பாக்கம் கோகுல கண்ணன், செங்கல்பட்டு நரேந்திரன், பொழிச்சலூர் ஞானமணி, மேடவாக்கம் சித்தாலப்பாக்கம், அகரம், சித்தாமூர், திருப்போரூர் போன்ற பகுதிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

இது வெளியே தெரியாமல் இருக்க, தற்போது புது டெக்னிக் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, எதிர்கோஷ்டியினரின் பெயர்களை போஸ்டரில் இடம் பெற வைத்துவிடுவர். ஆனால், அவர்களுக்கு கூட்டம் நடப்பது பற்றிய தகவல் தெரிவிப்பதில்லை.ஆலந்தூர் தொகுதி சட்டசபை தேர்தலில் போட்டியிடும், ஆலந்தூர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ., கன்டோன்மென்ட் சண்முகத்தை சந்திக்கக் கூடாது என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தன் நீண்ட கால நண்பர் என்ற அடிப்படையில், சண்முகத்தை சந்தித்து, ஆலந்தூர் பாரதி ஆதரவு கேட்டுள்ளார். இதனால், ஆலந்தூர் பாரதிக்கு தேர்தல் பணியில் ஆர்வம் காட்டக் கூடாது என, ஒரு பிரிவினர் முடிவெடுத்துள்ளனர்.சமீபத்தில், கட்சியின் பொரு ளாளர் ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப் பயணம் சென்ற போது, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., சிறுபான்மை பிரிவு தலைவருமான உக்கம்சந்தின் சொந்த ஊரான மதுராந்தகத்துக்கு அவரை அழைத்து செல்லாமல், உக்கம்சந்த்தை எரிச்சலடைய செய்துள்ளனர். இதனால், அவர் தன் பதவியை ராஜினாமா செய்து, கட்சி தலைமையிடம் கடிதம் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. பெயர் இல்லை:


திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதனுக்கும் இடையே கோஷ்டி பூசல் நிலவுகிறது. திருவள்ளூர் லோக்சபா தொகுதியின் ஆலோசனைக் கூட்டம் பூந்த மல்லியில் நடந்தது. அக்கூட்டத்தில், தொகுதி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட, ரங்கநாதன் பெயரை போஸ்டரில் குறிப்பிடவில்லை என்ற அதிருப்தி நீடிக்கிறது. வடசென்னையிலும் கோஷ்டி பூசலுக்கு பஞ்மில்லை என்பதால், கொளத்தூரை தவிர, மற்ற சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணி விறுவிறுப்பு அடையவில்லை. இதனால், என்ன செய்வது என, தெரியாமல் வேட்பாளர் மந்தமாக உள்ளார். மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, விஸ்வநாதன் ஆகியோர் இடையே கோஷ்டி பூசல் தலை விரித்து ஆடுகிறது.வடசென்னை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி., மஸ்தானிடம் புகார் தெரிவித்தால், அவர், 'அனைவரும் இணைந்து செயல்படுங்கள்' என, கூறுகிறாரே தவிர, தலைமையிடம் புகார் சொல்வதில்லை என்ற அதிருப்தி உள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, வேலூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திற்கு 'சீட்' தரவில்லை. அதனால், அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடாமல் சுணக்கம் காட்டி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 10 பேர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர், அப்துல் ரகுமான் காரை மறித்ததற்காக, அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.ெரியண்ணன் போக்கு: இப்படி மாவட்ட வாரியாக, உட்கட்சி கோஷ்டி பூசலில், தி.மு.க., சிக்கித் தவிக்கிறது. மேலும் மாவட்ட செயலர்களின் பெரியண்ணன் போக்கினால், முன்னாள் நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இதனால், எங்களுக்கு வேலை கொடுத்தால், தேர்தல் பணி செய்வோம்; இல்லையென்றால், தி.மு.க.,விற்கு ஓட்டளித்து விட்டு, ஒதுங்கி விடுவோம் என்ற, மனப்பான்மையில் அதிருப்தியாளர்கள் உள்ளனர்.எனவே, பிரச்னைக்குரிய மாவட்டங்களில் உள்ள அதிருப்தியாளர்களை, அறிவாலயத்திற்கு வரவழைத்து, விரைவில், ஸ்டாலின் தலைமையில் பஞ்சாயத்து நடத்தவிருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: