ஞாயிறு, 26 ஜனவரி, 2014

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு வாபஸ்? : காங்கிரஸ்

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. தற்போது, போலீஸ் விவகாரத்தில் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் அதிகாரத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே திட்டவட்டமாக மறுத்து விட்டார். இது தவிர ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனத்திலும் கெஜ்ரிவாலின் கோரிக்கையை ஷிண்டே நிராகரித்து விட்டார்.

தற்போது இந்த பிரச்னையை பிரதமரின் கவனத்துக்கு கெஜ்ரிவால் கொண்டு சென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியின் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குறித்து 18க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. இதில் 11 வழக்குகள் ஆதாரம் இன்றி வாபஸ் பெறப்படுவதாக சில தினங்களுக்கு முன்பு சிபிஐ அறிவித்தது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. காமன்வெல்த் ஊழலில் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது டெல்லி அரசு விசாரணை நடத்தும் என அக்கட்சி தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

இதன் காரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை டெல்லி மாநில காங்கிரசில் வலுத்து வருகிறது. இருப்பினும் இந்த சமயத்தில் ஆதரவை வாபஸ் பெற்றால் அது நாடாளுமன்ற தேர்தலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதால், தேர்தல் முடியும் வரை காத்திருக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கு பின்னர் மக்களிடம் கருத்து கேட்டு ஆதரவு வாபஸ் குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி மக்களிடம் கருத்து கேட்டது. இதே முறையை பின்பற்றி ஆதரவை வாபஸ் பெற காங்கிரஸ் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது..dinakaran.com

கருத்துகள் இல்லை: