வியாழன், 12 டிசம்பர், 2013

கலைஞர்: கோடிக் கணக்கிலே கடன் பெற்றவர்களை வங்கிகள் கண்டு கொள்வதில்லையாமே?

கேள்வி :- ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கில் வங்கிகளிலே கடன் வாங்குபவர்களை “கிட்டி கட்டி” வசூலிக்கும் வங்கிகள், கோடிக் கணக்கிலே கடன் பெற்றவர்களைக் கண்டு கொள்வதில்லையாமே?
கலைஞர் :- மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதற்காக அவர்களின் புகைப்படங்களை வங்கியின் வாசலில் வைத்தது பற்றி நான் சில மாதங்களுக்கு முன்பு அது தவறு என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.
2008ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள வங்கிகளின் மொத்த வராக் கடன் 39 ஆயிரத்து 30 கோடி ரூபாய். 2012இல் இந்தத் தொகை 1 இலட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. 2013 மார்ச் 31ஆம் தேதியன்று பொதுத் துறை வங்கிகளுக்கான மொத்த வராக் கடன் 1 இலட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய்.
இந்தக் கடன்களை பாக்கியாக வைத்திருப்பவர்களில் முக்கியமானவர்கள், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (விஜய் மல்லையா) 2,673 கோடி ரூபாய்; விஸ்டம் டைமன்ட்ஸ் அண்ட் ஜுவல்லரி நிறுவனம் 2,660 கோடி ரூபாய்; எலெக்ட்ரோ தேர்ம் இந்தியா நிறுவனம் 2,211 கோடி ரூபாய்; ஸும் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் 1,810 கோடி ரூபாய்; ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் 1,732 கோடி ரூபாய்; எஸ். குமார்ஸ் நேஷன்வைடு லிமிட் 1,692 கோடி ரூபாய்; சூர்யா வினாயக் இண்டஸ்ட்ரீஸ் லிமிட் 1,446 கோடி ரூபாய்; கார்ப்பரேட் இஸ்பட் அலாடீநுஸ் லிமிடெட் 1,360 கோடி ரூபாய்; போரவர் பிரிசியஸ் ஜுவல்லரி அண்ட் டைமன்ட்ஸ் 1,254 கோடி ரூபாய்; ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்ஸ் லிமிட் 1,197 கோடி ரூபாய்; வருண் இண்டஸ்ட்ரீஸ் லிமிட் 1,129 கோடி ரூபாய். டெக்கான் க்ரோனிக்கல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வைத்துள்ள பாக்கி 700 கோடி ரூபாய். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்கிட் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் வைத்துள்ள கடன் பாக்கி 938 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு மத்திய அரசு அண்மையில் “பத்மஸ்ரீ” விருது வழங்கிப் பாராட்டியிருக்கிறதாம். (குடியரசுத் தலைவருக்குத்தான் வெளிச்சம்) வங்கியில் ஒருவர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வசதியிருந்தும் செலுத்தவில்லை என்றால் கிரிமினல் குற்றமாகும்.

ஆனால் இத்தனை கோடி ரூபாய் வங்கிகளிலே கடன் பெற்று பாக்கி வைத்திருப்போர் மீது நடவடிக்கை இன்றி, சலுகை காட்டப்படுவது ஏன் என்று தெரியவில்லை. இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.  nakkheeran.in

கருத்துகள் இல்லை: