மாலை நேர ஆங்கிலச் செய்தி தொலைக்காட்சி சேனல்கள் பார்ப்பவர்களைப் பொறுத்த வரை என்.டி.டி.வியும், சி.என்.என்-ஐ.பி.என்னும், டைம்ஸ் நவ்வும்தான் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்றன என்று தோன்றும். ‘நாட்டின் தலைவிதியை தம் கைவசம் வைத்திருக்கும்’ இந்தத் தொலைக்காட்சிகளின் தலைவிதிகளை கைவசம் வைத்திருப்பது யார் என்பதை, சி.என்.என்.-ஐ.பி.என் குறித்து காரவன் மேகசினில் வெளியாகியிருக்கும் ராகுல் பாட்டியாவின் கட்டுரை விளக்குகிறது.
2007 சிஎன்பிசி-டிவி 18 நிகழ்ச்சியில் ராகவ் பாலும் முகேஷ் அம்பானியும்.
2012-ம் ஆண்டு ஜனவரி மாதம், சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியை நடத்தும் டி.வி-18 நிறுவனம் ஈநாடு தொலைக்காட்சியில் (ETV) ரிலையன்சின் பங்குகளை ரூ 2,100 கோடி கொடுத்து வாங்கப் போவதாக அறிவித்தது. ஆந்திராவின் ராமோஜி ராவ் குழுமத்துக்கு சொந்தமான ஈநாடு நிறுவனத்தின் வசம் ஏழு மாநிலங்களில் 12 தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. மேலோட்டமாக பார்த்தால் ஊடகத் துறையில் ரிலையன்சுக்கு இருந்த ஆதிக்கம் டி.வி-18 கையில் வருவது போலத் தோன்றும்.

ஆனால், டிவி-18 தொடர்ந்து பொருளாதார இழப்புகளை சந்தித்துக் கொண்டிருந்தது. 2011, 2012 ஆண்டுகளில் ரூ 800 கோடிக்கும் அதிகமாக இழப்பை சந்தித்து கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஈநாடு தொலைக்காட்சியில் ரிலையன்சின் பங்குகளை வாங்குவதற்கும் டிவி-18 குவித்திருக்கும் கடன்களை அடைப்பற்கும் ரூ 1,643 கோடி மதிப்பு கொண்டிருந்த டிவி 18 நிறுவனமும் அதன் தாய் நிறுவனமான நெட்வொர்க் 18 நிறுவனமும் சந்தையிலிருந்து ரூ 5,400 கோடி கடன வாங்கவிருப்பதாக அறிவித்தன. கடன் தொகை முழுவதையும் சந்தையிலிருந்து திரட்ட முடியா விட்டால், நெட்வொர்க் 18-ன்  நிறுவன முதலாளி ராகவ் பாலுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பணத்தை இட்டுக் கட்டும்.
நெட்வொர்க்-18 கடனில் தள்ளாடும் போது, அதன் முதலாளிக்கு எங்கிருந்து பணம் வரும்? அங்குதான் டுவிஸ்டே வருகிறது. நெட்வொர்க்-18 முதலாளியின் நிறுவனங்களுக்கு  இண்டிபெண்டன்ட் மீடியா டிரஸ்ட் என்ற அறக்கட்டளை பணம் கொடுக்கும். அந்த அறக்கட்டளை ரிலையன்சின் ஊடக நலன்களை பேணுவதற்காக உருவாக்கப்பட்டது.  கடனாக கொடுக்கும் பணத்துக்கு ஈடாக அறக்கட்டளைக்கு நெட்வொர்க்-18 பங்குகளாக மாற்றிக் கொள்ளக் கூடிய பத்திரங்கள் வழங்கப்படும்.
சுருக்கமாகச் சொல்லப் போனால், சி.என்.என்-ஐ.பி.என் மற்றும் நெட்வொர்க் 18 நிறுவனத்துக்குச் சொந்தமான சி.என்.பி.சி-டிவி18, ஃபோர்ப்ஸ் இந்தியா, கலர்ஸ் தொலைக்காட்சி, ஃபர்ஸ்ட்போஸ்ட்.காம் போன்ற ஊடகங்களையும், ஈநாடு குழுமத்தின் தொலைக்காட்சிகளையும் தான் கட்டுப்படுத்தாது போல ஷோ காட்டி விட்டு தன் கட்டுக்குள் ரிலையன்ஸ் கொண்டு வருகிறது. அவ்வளவுதான்.
சரி, ஈநாடு குழுமத்தில் ரிலையன்சின் பங்குகளின் மதிப்பு ரூ 1,925 கோடி என்று எப்படி முடிவு செய்யப்பட்டது? நெட்வொர்க்-18 2012-ம் ஆண்டு பதிவு செய்த பங்குதாரர்களுக்கான அறிக்கையின் படி இதற்கு எர்ன்ஸ்ட்&யங் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் அறிக்கைதான் அடிப்படை. அந்த அறிக்கை எப்படி தயாரிக்கப்பட்டது? நெட்வொர்க்-18, மற்றும் ஈநாடு குழுமம் கொடுத்த தகவல்களின் அடிப்படையில். இந்த உள்கை வேலையை உறுதி செய்யும் விதமாக, தான் விலை கொடுத்து வாங்கிய ரிலையன்சுக்கு சொந்தமான பங்குகளின் விலை சரியானதுதானா என்பது உறுதி இல்லை என்றும் நெட்வொர்க்-18 பதிவு செய்தது.
அதாவது, ரிலையன்சுக்கு அது ஈநாடு குழுமத்தில் போட்ட காசை விட பல மடங்கு அதிக பணம் நெட்வொர்க்-18 இடமிருந்து கொடுக்கப்படுகிறது. இதற்கான கூடுதல் கடன் மூலம் நெட்வொர்க்-18 ரிலையன்சின் பிடியில் இன்னும் வலுவாக சிக்குவதற்கு இது வழி வகுக்கிறது.
இது போன்று தலையைச் சுற்ற வைக்கும் நடைமுறைகளுக்கான தேவை வரி தவிர்ப்பாக இருக்கலாம், ஊடக உரிமையை நெறிப்படுத்தும் சட்டங்களை ஏய்ப்பதற்காக இருக்கலாம், அல்லது நேரடியாக சக முதலீட்டாளர்களை மொட்டை அடிப்பதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அம்பானிகளுக்கு ஆதாயத்தை அதிகப்படுத்தும் ஏற்பாடு, சட்டத்தின் படியோ, சட்டத்தின் ஓட்டைகளின் மூலமாகவோ செய்து முடிக்கப்படும் என்பது இந்திய ‘ஜனநாயக’த்தின் அடிப்படை நிதர்சனம்.
பாவே கட்டுரை
செபி மற்றும் நிதி அமைச்சகம் குறித்த ஃபோர்ப்ஸ் இந்தியாவில் வெளியாகாத கட்டுரையின் முதல் பக்கம்
கடந்த 20 ஆண்டுகளாக வளர்ந்து வரும் தனியார் ஊடக நிறுவனங்களில் ரிலையன்ஸ் மற்றும் அதன் முதலாளிகளான அம்பானிகள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் ஒரு சுய தணிக்கை நடைமுறையில் இருக்கிறது. விளம்பரத் துறையின் ஒப்புதலுடனும், தேவைப்பட்டால் முதலாளியின் ஒப்புதலுடன்தான் வெளியிடப்படும்.
உதாரணமாக, ரிலையன்ஸ் டிவி-18 ல் முதலீடு செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு 2011-ம் ஆண்டு இறுதியில் ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் பொருளாதார ஆசிரியர் தினேஷ் நாராயணன், செபி (பங்குகள் மற்றும் பத்திரங்கள் பரிவர்த்தனை வாரியம்) தொடர்பான விபரங்களைத் திரட்டி கட்டுரை ஒன்று தயார் செய்திருந்தார். 2009-ம் ஆண்டு செபியின் அப்போதைய தலைவராக இருந்த சந்திரசேகர் பாவே கார்ப்பரேட்டுகளின் பங்குச் சந்தை முறைகேடுகளை கறாராக விசாரித்து நடவடிக்கை எடுப்பவர் என்று பெயர் பெற்றிருந்தார். அவரது பதவிக் காலத்தில் வெளிநாட்டில் திரட்டிய நிதியை மடை மாற்றியது தொடர்பாக சின்ன அம்பானி அனில் மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ரூ 50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது, அவர் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதிலிருந்து ஒரு ஆண்டு விலக்கி வைக்கப்பட்டார். பெரிய அம்பானி, முகேஷ் மீதும் பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டிருந்தது.
பாவேவுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கு நிதிச் செயலர் அசோக் சாவ்லாவும் நிதி அமைச்சரான பிரணாப் முகர்ஜியும் பரிந்துரைத்திருந்தனர். பிரணாப் முகர்ஜியின் பரிந்துரைக்கு 2 மாதங்களுக்குப் பிறகு, நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் ஓமிதா பால், பாவேயின் பதவி நீட்டிப்பு தொடர்பான கோப்பை வேண்டி பெற்று, அதை மறுபரிசீலனை செய்யுமாறு குறிப்பு எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜியும் பின் வாங்குகிறார். பாவேயின் பதவி நீட்டிப்பு சத்தமில்லாமல் கை விடப்பட்டது. இந்த நேரத்தின் அம்பானிகள் மீது செபி விசாரணை நடந்து கொண்டிருந்தது தற்செயலானதல்ல. இது தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தினேஷ் நாராயணன் குழுவினர் இதற்கு பின் இருந்த ரிலையன்சின் அதிகார சித்து விளையாட்டை அம்பலப்படுத்தி ஒரு கட்டுரையை தயாரித்திருந்தனர்.
பிப்ரவரி 2012 இறுதியில், பட்ஜெட் வாரத்தில், பாவேயின் பதவிக் காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகையில் இந்த விவகாரம் வெளியாகவிருந்தது. இந்நிலையில் நெட்வொர்க் 18 முதலாளி ராகவல் பாலுக்கு, பிரணாப் முகர்ஜியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. இதுதான் முதல் முறை பிரணாப் முகர்ஜி தன்னை அழைத்தது என்று ராகவ் பால் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரத்தை கட்டுரையாக வெளியிடுவதை தவிர்க்கும்படி பெருமளவு அழுத்தம் தரப்பட்டது. கட்டுரையின் இறுதி வடிவத்தை முடிவு செய்து அச்சுக்கு அனுப்பிய பிறகு அந்தக் கட்டுரையை வெளியிட வேண்டாம் என்று நிர்வாகத்திடமிருந்து உத்தரவு வந்தது. மாறாக, ராஜஸ்தான் கிரிக்கெட் பற்றிய ஒரு கட்டுரை அட்டைப் படக் கட்டுரையாக வெளி வந்தது. அந்த உத்தரவு வந்த ஒரு மாதத்துக்குள் நெட்வொர்க் 18 மற்றும் ரிலையன்ஸ் இடையேயான முதலீட்டு ஒப்பந்தம் போடப்பட்டது.
பல வகைகளில் தனக்கு மட்டும் ஆதாயம் வரும்படி சக முதலாளியை மொட்டை அடிப்பது ரிலையன்ஸ் அம்பானிகள் மட்டும் பயிலும் கலை இல்லை. ராகவ் பால் போன்ற சிறு முதலைகள் அவர்கள் அளவில் சக முதலீட்டாளர்களின் பணத்தை பிடுங்குவதில் வெற்றி பெற வேண்டியிருக்கிறது. அப்படி சின்ன மீனை பெரிய மீன் சாப்பிட்டுதான் கார்ப்பொரேட் உலகத்தில் தாக்குப் பிடிக்க முடியும்.
ராகவ் பால்
ராகவ் பால்
2007-ம் ஆண்டு நெட்வொர்க்-18 இந்தியன் ஃபிலிம் கம்பெனி (IFC) என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பங்குகளை வெளியிட்டது. அது வரை தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் மட்டும் செயல்பட்டு வந்த நெட்வொர்க்-18 திரைப்பட தயாரிப்பு, வினியோகத்தில் ஈடுபடுவதற்காக இந்த நிறுவனத்தை தொடங்கியதாக சொன்னது. இந்தியத் திரைப்படத் துறையில் கார்ப்பரேட் நேர்த்தியுடனான செயல்முறை லாபத்தை குவிக்கும் என்று உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால், 1 பவுண்ட் விலையிலான பங்குகள் முதல் நாள் வர்த்தகத்தில் 99 பென்ஸ் விலையில் கை மாறின. சில மாதங்களிலேயே அவற்றின் மதிப்பு 20% வீழ்ச்சியடைந்தது.
IFC பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் நிதி நிர்வாகம் குறித்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். ஜூலை 2009-ல் கேமேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட நெட்வொர்க்-18 நிறுவனத்தின் கிளை நிறுவனம் IFC பங்குகளை வாங்குவதற்கு முன் வந்தது. பங்குச் சந்தையில் அவற்றின் விலை 23 பென்ஸ் ஆக வீழ்ந்திருந்தது. 2007-ல் 1 பவுண்ட் விலைக்கு வாங்கிய பங்குதாரர்களுக்கு 40 பென்ஸ் விலையில் பங்குகளை விற்கும் வாய்ப்பு கிடைத்து. ஆனாலும் நிறுவனத்தின் கணக்குகளில் ஒரு பங்கின் மதிப்பு 113 பென்ஸ் ஆக காட்டப்பட்டிருந்தது. செப்டம்பர் 2009 வாக்கில் நெட்வொர்க் 18 குழுமம் குறைந்த விலையில் கூடுதலாக 60 சதவீத பங்குகளை வாங்கி 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை கைவசம் வைத்திருந்தது. அதாவது, இரண்டு ஆண்டுகளில் ராகவ் பால் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்த முதலீட்டாளர்களிடமிருந்து 60% ஆதாயத்தை அவருக்கு சொந்தமான நிறுவனம் கைப்பற்றியது.
இப்போது, இன்னொரு திருப்பம் ஏற்பட்டது. சைப்ரசில் பதிவு செய்யப்பட்ட ரோப்டோனல் என்ற நிறுவனம் ஐஎஃப்சி பங்குகளை 115 பென்ஸ் விலையில் வாங்கிக் கொண்டது. டிவி-18 நிறுவனம் 50% பங்குகளை வைத்திருந்த வயாகாம்18 நிறுவனத்தின் கிளை நிறுவனம் ரோப்டோனல். அதாவது, நெட்வொர்க் 18-ன் இடது கையிடமிருந்து வலது கை ஒரு பங்குக்கு சுமார் 80 பென்ஸ் அதிகமாக கொடுத்து வாங்கிக் கொண்டது. ஒரு வருடத்தில் 188% உயர்ந்த பண மதிப்பை ராகவ் பால் கும்பல் ஒதுக்கிக் கொண்டது.
கதை 2013-லும் தொடர்ந்தது. ரோப்டோனல் பங்குகளை வாங்கும் போது, கைவசம் இருக்கும் திரைப்படங்களுக்கு ரோப்டோனல் எதிர்பார்த்த அளவு வருமானம் கிடைக்கா விட்டால் பற்றாக்குறையை நெட்வொர்க் 18 ஈடு கட்டும் என்று ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டிருந்தது. அதன்படி 2013 ஆண்டில் பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ 237 கோடியை ஒதுக்கியிருக்கிறது நெட்வொர்க் 18. இது அதன் மொத்த ஆண்டு வருமானத்தில் 80% ஆகும்.
இவ்வாறாக, பணத்தை கைமாற்றி, கைமாற்றி நடுவில் விளையாட்டை நடத்துபவர் ஒதுக்கிக் கொள்வதற்கு பெயர்தான் திறமையான கார்ப்பரேட் நிதி நிர்வாகம். அதற்கு இன்னொரு உதாரணமும் இருக்கிறது.
2011-ம் ஆண்டு நெட்வொர்க் 18-ன் நிர்வாகம் ரூ 255 கோடி கடன் வாங்கி, “நெட்வொர்க் 18 குழும மூத்த ஊழியர்கள் நல அறக்கட்டளை” என்ற அமைப்புக்கு கொடுத்தது. அந்த அறக்கட்டளையை ராகவ் பால், அவரது மனைவி மற்றும் சகோதரி கட்டுப்படுத்துகின்றனர். இந்த பணத்தை பயன்படுத்தி பால் குடும்பத்தினர் சந்தையிலிருந்து நெட்வொர்க் 18 பங்குகளை வாங்கினர். அதாவது, நிறுவனத்தின் பணத்தை எடுத்து பால் குடும்பத்தினர் தமது சொந்த சொத்தை பெருக்கிக் கொண்டனர்.
இப்படி பழம் தின்று கொட்டைகளை துப்பி வந்த ராகவ் பால் 1980-களில் தூர்தர்ஷனில் நிருபராக தனது பணி வாழ்க்கையை ஆரம்பித்தவர். அடுத்து இந்தியா டுடே அருண் பூரியின் சகோதரி மது திரேகான் நடத்திய நியூஸ்டிராக் என்ற மாதாந்திர தொலைக்காட்சி செய்திப் பத்திரிகை, பிசினஸ் இந்தியா பத்திரிகையில் சேர்ந்து தி பிசினஸ் இந்தியா ஷோ என்ற நிகழ்ச்சி ஆகியவற்றை தொகுத்து வழங்கினார்.
1993-ல் ராகவ் பால்
1993-ல் ராகவ் பால்
ராகவ் பால், சவுத்ரி, அருண் குமார் மூவரும் சேர்ந்து டெலிவிஷன் 18 நிறுவனத்தை தொடங்கினர். ஹரேஷ் சாவ்லா என்ற ஊடகத் துறை பெரும்புள்ளியுடன் சேர்ந்து நிறுவனத்தின் பங்குகளை மும்பை பங்குச் சந்தையில் வெளியிட்டார். 1999-ல் நடந்த முதல் பங்கு விற்பனைக்கு 50 மடங்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. நிறுவனம் ரூ 2,511 கோடி நிதி திரட்டியது.
டிவி 18 பி.பி.சிக்காக இந்தியா பிசினஸ் ரிப்போர்ட் என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது. ஸ்டார் தொலைக்காட்சிக்காக அமுல் இந்தியா ஷோ நிகழ்ச்சியை தயாரித்தது. டௌ ஜோன்ஸ் மற்றும் ஹிந்துஜா குடும்பத்தினரின் கூட்டு நிறுவனமான ஆசியா பிசினஸ் நியூஸ் (ஏபிஎன்) தொலைக்காட்சிக்காக 3 நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியது. 2000-ம் ஆண்டில் பன்னாட்டு தொலைக்காட்சியான சிஎன்பிசியுடன் இணைந்து சிஎன்பிசி-டிவி18 என்ற புதிய சானலுக்கு 8 மணி நேரம் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியது.
டிசம்பர் 2005-ல் என்.டி.டி.வியில் வேலை செய்து கொண்டிருந்த ராஜ்தீப் சர்தேசாயை வைத்து சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி சானலை தொடங்கும் முயற்சியில் வெற்றி பெற்றனர் நெட்வொர்க் 18 முதலாளிகள்.
ஆரம்பத்தில், சானலை பிரபலப்படுத்துவதற்கு சக கார்ப்பரேட் முதலாளிகளை சங்கடப்படுத்தும் செய்திகளை வெளியிடுவதற்கு ஊடக முதலாளிகள் தயங்குவதில்லை. சி.என்.என்-ஐ.பி.என் தொழிலதிபர் பி கே மோடியுடனான ஒரு நேர்காணலில் அவர், ஹிந்துஜாக்களைப் பற்றி பல சங்கடமான உண்மைகளை சொல்லி விட்டார். அது குறித்து அறிந்த ஹிந்துஜாக்கள் மும்பையிலிருந்தும் லண்டனிலிருந்தும் அழைத்து நிகழ்ச்சியை ரத்து செய்ய வைக்க முயன்றனர். ஆனால், பால் அந்த விவகாரத்தில் தலையிடாமல் அந்த நிகழ்ச்சி எந்த மாறுதலும் செய்யப்படாமல் ஒளிபரப்பப்பட்டது. இப்படி தீரமாக இருந்த ராகவ் பால் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே அம்பானிகளுக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் ஆமாம் சாமி போட்டு ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்திய கார்ப்பொரேட்-அரசு கூட்டுச் சதி பற்றிய கட்டுரையை தூக்கி எறிந்தார்.
ராகவ் பால் - சர்தேசாய்
சிஎன்என்-ஐபிஎன் நடத்த ராஜ்தீப் சர்தேசாயுடன் கூட்டு சேர்ந்த ராகவ் பால்.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மாறி வரும் ஊடகச் சூழலும் அதிகரித்து வரும் சந்தை அழுத்தமும் பல கார்ப்பரேட் ஊடக குழுமங்களை நெருக்கடியில் தள்ளின. அவுட்லுக் குழுமம் ஜூலை மாதம் 3 பத்திரிகைகளை நிறுத்தி விட்டு 100-க்கும் அதிகமான ஊழியர்களை வேலையிலிருந்து விசிறி அடித்திருந்தது. தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்து வரும் என்.டி.டி.வியில் கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ந்து ஆட்குறைப்பு நடந்து வருகிறது. நெட்வொர்க் 18,  ரிலையன்சுக்கு தன்னை விற்றுக் கொண்டது.
ரிலையன்ஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த நெட்வொர்க் 18 நிறுவனத்துக்குள் பல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன.
ராகவ் பால் குழுமத்தின் ஊடக ஆசிரியர்களை தனித்தனியாக சந்தித்தார். ஃபோர்ப்ஸ் இந்தியாவின் தலைமை ஆசிரியர் இந்திரஜித் குப்தாவிடம், ரிலையன்ஸ் மற்றும் ஊடகங்கள் தொடர்பான செய்திகளை கையாளுவது குறித்து அவரது கருத்தை கேட்டிருக்கிறார். “ரிலையன்ஸ் மற்றும் ஊடகங்கள் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட  வேண்டும்” என்று கருத்து சொன்ன இந்திரஜித் குப்தாவிடம், “உண்மையிலேயே அது தேவைதானா” என்று கேட்டாராம் ராகவ் பால்.
ரிலையன்சும், டிவி 18-ம் இந்திய கிரிக்கெட் விளம்பர உரிமைகளுக்காக விண்ணப்பிக்கப் போவது பற்றிய செய்தி கிடைத்தது. அதை ஒளிபரப்ப வேண்டுமா என்பதை சி.என்.என்-ஐ.பி.என் தலைமை ஆசிரியர் குழு 2 நாட்கள் விவாதித்தது.  ரிலையன்ஸ் உண்மையிலேயே விண்ணப்பம் கொடுத்திருக்கிறது என்று சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் உறுதி செய்தார். இருந்தும், அது தொடர்பான செய்தி அறிக்கையில் ரிலையன்சின் பெயரை  குறிப்பிடாமலேயே விட முடிவு செய்யப்பட்டது.
குழுமத்தின் இணைய மற்றும் அச்சு ஊடகங்களின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஜகன்நாதன், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் ஆசிரியர் குழு கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். “நீங்கள் செய்வதெல்லாமே தப்பு. ஃபோர்ப்ஸ் என்பது பணக்காரர்களைப் பற்றியது. வலது சாரி அரசியலுக்கானது. நீங்க வளர்ச்சி, வறுமை என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கு புரியவில்லை என்றால் சீக்கிரம் புரிந்து கொள்ளுங்கள்” என்று ஊடகங்களை ஆளும் சக்தி எது என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.  நெட்வொர்க் 18-ன் குழும தலைமை அலுவலர், “ஃபோர்ப்ஸ் இந்தியாவின் விளம்பர வருமானத்தை காலாண்டு அடிப்படையில் மதிப்பிடப் போவதில்லை என்றும், விளம்பர் கொடுக்கும் நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுதான் வழிகாட்டல்” என்றும் அறிவித்திருக்கிறார்.
சிஎன்பிசி
வணிக செய்திகளுக்கான சிஎன்பிசியும் இப்போது அம்பானி கட்டுப்பாட்டில்
அதன்படி, அக்டோபர் இறுதியில் ஃபோர்ப்ஸ் இந்தியாவில் வெளியாகவிருந்த மைக்ரோமேக்ஸ் தொடர்பான ஒரு கட்டுரை கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஃபோர்ப்ஸ் இந்தியாவின் தலைமை செயல்பாட்டு அலுவலர் குர்மீத் சிங், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதலாளிகளில் ஒருவரை தொடர்பு கொண்டு பேரம் பேசியிருக்கிறார்.
இத்தகைய வருமான வேட்டை, வணிக நிறுவனங்களிடம் விளம்பர ஒப்பந்தம் போடுவதோடு மட்டுமில்லாமல், வளர்ந்து வரும் அரசியல்வாதிகளையும் வளைத்துப் போட்டது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான போட்டி பற்றிய “சூப்பர் பவர்” என்ற புத்தகத்தை ராகவ் பாலுடன் இணைந்து எழுதியவரும், ராகவ் பாலுடன் 18 ஆண்டுகள் பணி புரிந்தவரும் ஆன விவியன்  பெர்னாண்டஸ் சென்ற ஆண்டு குஜராத்துக்குப் போய் முதலமைச்சர் மோடியின் நேர்முகத்தை பதிவு செய்ய அனுப்பப்பட்டார். குஜராத்தில் தண்ணீர் சிக்கனம் பற்றிய சிக்கலான கேள்வி ஒன்றை பெர்னாண்டஸ்ர, மோடியிடம் கேட்டார். ஆனால், நேர்முகத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள்,  முன் கூட்டியே கேள்விகளை பார்த்து, தண்ணீர் பற்றிய கேள்வியை நீக்கி விடச் சொல்லியிருந்தனர். இருந்தும் பெர்மாண்டஸ் விடாப்பிடியாக அந்தக் கேள்வியை கேட்கவே, மோடி காமராவின் பார்வையிலிருந்து வெளியே வந்து, அறையில் இருந்த அவரது பத்திரிகைத் தொடர்பு அலுவலரை முறைத்தார், “இவன் ஏன் இப்படி பேசுறான். இந்த நேர்காணலுக்கு நாம பணம் கொடுக்கிறோமா, இல்லையா” என்று  உறுமியிருக்கிறார். அப்போதுதான், இந்த நேர்முகம் மோடிக்கான விளம்பர நேர்காணல் என்று படப்பிடிப்பு குழுவினருக்கு தெரிய வந்திருக்கிறது.
நெட்வொர்க் 18 குழுமத்த்தின் உரிமை ரிலையன்ஸ் கையில் போவதை அறிந்ததும், குறைந்த பட்சம் நிறுவனத்தின் நிதி நெருக்கடி பிரச்சனைகள் சரியாகி, பணி பாதுகாப்பு உறுதியாகும் என்று பல ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி சி.என்.என்-ஐ.பி.என் நிறுவனத்தைச் சேர்ந்த 300 தயாரிப்பாளர்கள், ஒளிப்படக் கலைஞர்கள், மற்றும் நிருபர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் நிகழ்ச்சியை முடித்த பிறகு அவர்களுக்கு அடுத்த நாளில் இருந்து வேலை இல்லை என்று சொல்லப்பட்டது. குழுமத்தின் மற்ற நிறுவனங்களையும் சேர்த்த 350 பேர் ஒரே நாளில் வேலை இழந்தனர். சிஎன்பிசியில் பல நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. சி.என்.என்-ஐ.பி.என் மும்பை அலுவலகத்தில் இருந்து 5 செய்தி நிருபர்கள் 3 ஆக குறைக்கப்பட்டனர்.
இந்தியாவில் செய்திகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த விவகாரம் ஒரு சான்று. இவை எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை விட யாருக்காக யாரால் தயார் செய்யப்படுகின்றன என்பதே முக்கியம். நெட் ஒர்க் 18 குழுமத்தின் பிடி அம்பானியின் கையில் இருக்கிறது என்பதிலிருந்தே சிஎன்என் ஐபிஎன்னின் சுதந்திரம் என்ன என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். கார்ப்பரேட் உலகின் கண்ணசைவில்தான் ஊடக நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பது விளம்பரங்களில் இருந்து மட்டுமல்ல, மூலதனம் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதோடும் தொடர்புடையது.
இத்தகைய செய்தி நிறுவனங்கள்தான் நாட்டின் பிரச்சினைகளையும், ஊழல்களையும் தார்மீக ஆவேசத்தோடு பேசுகின்றன என்று இனியும் நீங்கள் நம்பப் போகிறீர்களா?
- பண்பரசு
படங்கள், தகவல்கள் : நன்றி காரவன் மேகசின் vinavu.com