செவ்வாய், 10 டிசம்பர், 2013

டில்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.,வும், 'ஆம் ஆத்மி'யும் முன்வராததால் சிக்கல்

 புதுடில்லி: டில்லி மாநில சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில், 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற, பா.ஜ.,வும், இரண்டாவது இடத்தை பிடித்த, 'ஆம் ஆத்மி கட்சி'யும் (ஏ.ஏ.பி.,), 'ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவது இல்லை; எதிர்க்கட்சி வரிசையில் அமருவோம்' என, அறிவித்துள்ளதால், டில்லி அரசியலில், உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு, 32 இடங்களும், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏ.ஏ.பி., கட்சிக்கு, 28 தொகுதிகளும் கிடைத்தன. ஆளுங்கட்சியான, காங்கிரசுக்கு, எட்டு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. ஐக்கிய ஜனதா தளம், சுயேச்சை ஆகியவை, தலா, ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. டில்லியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால், 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். எந்த கட்சிக்கும், அந்த அளவு தொகுதிகள் கிடைக்கவில்லை. எனவே, தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளுமே எதிர்கட்சியாக துடிக்கின்றன. யாருக்கு அதிர்ஷ்டமோ ?
பா.ஜ., - ஏ.ஏ.பி., ஆகிய கட்சிகள், குதிரை பேரத்தில் ஈடுபட்டால், அடுத்து நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலில், மக்கள் மத்தியில், தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு, தேர்தலில் பாதிப்பை உருவாக்கும் என, பயப்படுகின்றன.
பா.ஜ., திட்டவட்டம்: ஆனாலும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில், ஆட்சி அமைக்க வரும்படி, பா.ஜ.,வுக்கு, டில்லி மாநில துணை நிலை கவர்னர், அழைப்பு விடுப்பார். ஆனால், 'அந்த அழைப்பை ஏற்க போவதில்லை' என, பா.ஜ., திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர், ஹர்ஷவர்த்தன் கூறியதாவது: ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை, எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளோம். ஆட்சி அமைப்பதற்காக, மற்ற கட்சிகளுடன், எந்த விதமான குதிரை பேரத்திலும் ஈடுபட மாட்டோம். போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்கவும், உரிமை கோரப்போவது இல்லை. இவ்வாறு, அவர் கூறினார். ஏ.ஏ.பி.,யின் தலைவர்களில் ஒருவரான, யோகேந்திர யாதவும், இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.அவர் கூறியதாவது: தேர்தல் முடிவு குறித்தும், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்தும், காலையில் ஆலோசித்தோம். இதில், ஆட்சி அமைப்பதற்கான, எந்த நடவடிக்கைகளிலும், ஈடுபடப் போவது இல்லை என, முடிவு செய்துள்ளோம். அதற்கு பதிலாக, எதிர்க்கட்சி வரிசையில் அமர திட்டமிட்டுள்ளோம். சட்ட விதிகளின்படி, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி தான், ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும். எங்கள் கட்சிக்கு, இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது. ஆட்சி அமைப்பதற்காக, மற்ற கட்சிகளின் ஆதரவை கேட்கும் திட்டமும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார் கவர்னர் முடிவு மீது கவனம்: b>பா.ஜ., - ஏ.ஏ.பி., ஆகிய கட்சிகளின், இந்த எதிர்பாராத முடிவால், டில்லியில், அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில், உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரின் கவனமும், டில்லி துணை நிலை கவர்னர், நஜீப் ஜங் மீது திரும்பியுள்ளது. இந்த விஷயத்தில், அடுத்தக் கட்டமாக, முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு, கவர்னரின் கைகளில் உள்ளதால், அவர் என்ன முடிவு எடுப்பார் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், 'கவர்னர், நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறார். சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, சரியான முடிவை எடுப்பார்' என்றன.

கருத்துகள் இல்லை: