ஞாயிறு, 24 நவம்பர், 2013

பாமக- தேமுதிக சமரசம்! பாஜக தலைமையில் உருவாகிறது புதிய அணி!!

பாமக- தேமுதிக சமரசம்! பாஜக தலைமையில் உருவாகிறது புதிய அணி!!சென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அணியில் பரமவைரிகளான தேமுதிகவும் பாமகவும் இடம்பெறுவதற்கு ஒப்புதல் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்கும் முயற்சிகள் பல தரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலில் பாஜக, தேமுதிக, மதிமுக ஆகியவற்றை இணைத்து ஒரு அணியை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்கெனவே பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கியிருக்கும் சமூக ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பச்சமுத்து பாஜகவுடன் நெருக்கமானவர். அவரது முன்முயற்சியில் பாட்டாளி மக்கள் கட்சியையும் பாஜக அணியில் இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் தேமுதிக இடம்பெற்றுள்ள அணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து பாமகவின் அன்புமணி ராமதாஸ், தேமுதிகவின் சுதீஷ் ஆகியோரை சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன.
இந்த சந்திப்பின் முடிவில் இருதரப்பும் மனஸ்தாபங்களை விட்டுக் கொடுத்து பாஜக அணியில் இணைய ஒப்புதல் தெரிவித்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து பாஜக தலைமையில் தேமுதிக, மதிமுக, பாமக என ஒரு கூட்டணி உருவாகத் தொடங்கியிருக்கிறது.
தற்போது இந்த கட்சிகள் தங்களுக்கான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைப் பட்டியலிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேர்தலின் போது இந்த கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன  tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: