திங்கள், 25 நவம்பர், 2013

அமெரிக்காவின் மனதில் இன்றும் இருக்கும் கென்னடி குடும்பம்

 1963ல் டல்லாஸ் நகரில் திறந்த காரில் ஊர்வலமாக வரும்போது கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டதும், முதல் சந்தேகம் கியூபா மீது எழுந்தது. ஆனால் பின்னர் நடைபெற்ற பல்வேறு விசாரணை கமிஷன்களின் அறிக்கைகள் இந்தக் கொலையில் கியூபா, சோவியத் யூனியன், சி.ஐ.ஏ ஆகியவற்றுக்கெல்லாம் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறிவிட்டன. ஆனால் கொலை நிகழ்ந்து 50 வருடங்களுக்குப் பின்னரும் கென்னடி கொலை மர்மங்கள் நீடிக்கின்றன. எதிர்ப்புற கட்டட மாடியிலிருந்து சுட்ட ஆஸ்வால்ட் தனியொருவனாக கென்னடியை சுட்டிருக்க முடியாது என்றே கருதப்படுகிறது. ஆஸ்வால்டை சில தினங்களிலேயே நீதிமன்ற வாசலில் ரூபி சுட்டுக் கொன்றது, எதை மறைக்க என்பது இன்னும் விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஹாலிவுட் எட்டு திரைப்படங்களை எடுத்திருக்கிறது.

சே, கென்னடி இருவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள். பிடல் காஸ்ட்ரோவுக்கு இப்போது 87 வயது. கென்னடி கொலைக்கும் தங்களுக்கும் எந்த சமபந்தமும் இல்லை என்று அண்மையில் கூட சொன்னார். ஆனால் சி.ஐ.ஏவும் கியூப எதிரிகளும் கென்னடியைக் கொல்ல சதி செய்திருக்கலாம் என்பது அவர் கருத்து. கியூபா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருந்தபோது அதை கென்னடி செய்யத்தவறியதால், சி.ஐ.ஏவுக்கு அவர் மீது கோபம் என்பது காஸ்ட்ரோ பார்வை. நிச்சயம் ஆஸ்வால்ட் கென்னடியைக் கொன்றிருக்க முடியாது என்று சொல்லும் காஸ்ட்ரோ , கொலை செய்யப் பயன்பட்டதாக சொல்லும் துப்பாக்கியின் மாதிரியைக் கொண்டு தாங்கள் அது போல தொலைவிலிருந்து கொல்ல முடியுமா என்று சோதித்துப் பார்த்ததாகவும், அது சாத்தியமே இல்லை என்று தெரிவதாகவும் சொன்னார். கென்னடி கொலையில் தனக்குப் பங்கு எதுவும் இல்லை என்று நிரூபிக்க காஸ்ட்ரோ, அமெரிக்க அரசு நியமித்த வாரன் கமிஷன் முன்னால் சாட்சி சொல்ல முன்வந்தார். நடுக்கடலில் ஒரு கப்பலில் காஸ்ட்ரோ, கமிஷன் அதிகாரியிடம் தன் சாட்சியத்தைப் பதிவும் செய்தார். கென்னடியின் சகோதரி மகள் மரியா தொலைக்காட்சி நிருபராக பணியாற்றுகிறார். அவருக்கு காஸ்ட்ரோ சிறப்பு பேட்டியும் அளித்திருக்கிறார்.
கென்னடிதான் அமெரிக்காவின்  முதல் இளம் அரசியல் பிம்பம். 43 வயதிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கு தேர்வானது மட்டுமல்ல கென்னடியின் சிறப்பு. கென்னடிதான் இன்று வரை அமெரிக்காவின் ஒரே கத்தோலிக்கக் கிறித்துவ ஜனாதிபதி. அவருக்கு முன்னும் பின்னும் எல்லாரும் பிராட்டஸ்டண்ட் கிறித்துவர்கள்தான் உச்சமான பதவிக்கு வந்தவர்கள். கத்தோலிக்கர்கள் அமெரிக்க அரசியலில் பாரபட்சமாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு இன்று வரை உண்டு.
புத்தகம் எழுதி புலிட்சர் விருது பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி கென்னடிதான். அதுவும் ஜனாதிபதியாவதற்கு முன்பே செனட்டராக இருக்கையில் அவர் எழுதியது.  ப்ரொஃபைல்ஸ் இன் கரேஜ் என்ற அந்த நூல் கட்சி கொள்கையா, மனசாட்சியா என்ற போராட்டத்தில் மனசாட்சியைத் தேர்வு செய்து வாக்களித்த செனட்டர்கள் சிலரைப் பற்றியது. கென்னடியின் அரசியல் வாழ்க்கையை அவருக்காக திட்டமிட்டு ஊக்குவித்து வளர்த்த அவரது அப்பாவின் செல்வாக்கால்தான் புலிட்சர் விருதுக்கு, யாராலும் நியமிக்கப்படாமலே அந்த நூல் தேர்வாகி விருது தரப்பட்டது என்ற விமர்சனமும் உண்டு.
கென்னடியின் கொலைதான் அமெரிக்காவின் முதல் டி.வி இவெண்ட். நாடு முழுவதும் மக்களிடையே ஒரு பிம்பத்தை கொண்டு போய் பதியவைப்பதில் டி.வியின் செல்வாக்கு அந்த நிகழ்ச்சியில்தான் உணரப்பட்டது. அப்போது அமெரிக்காவில் கறுப்பு வெள்ளை டி.விதான். கலர் வரவில்லை. கென்னடி இறந்த செய்தி வந்தபோது பல டிவி நிலையங்களில் கேமராவே இல்லை. ஒரே கேமரா. ரிப்பேராகியிருக்கும் அல்லது வேறு வேலைக்கு அனுப்பபட்டிருக்கும். எனவே நிலையங்கள் முதல் செய்தியை ஒரு கார்டில் எழுதிதான் டி.வியில் காட்டின. அடுத்த ஒரு மணி நேரத்தில் சுதாரித்துக் கொண்டு கேமராக்கள் சம்பவ இடங்களில் குவிந்தன. அப்போது செல்போன் கிடையாது. நேரலை ஒளிபரப்புக்கு வழியில்லை. மைக்குக்குப் பதில் டெலிபோனைப் பயன்படுத்தியெல்லாம் பேட்டியை பதிவு செய்து ஒளிபரப்பியிருக்கிறார்கள். ஆனால் கென்னடியின் இறுதிச்சடங்கின்போது அமெரிக்காவில் டெலிவிஷன் பெட்டி இருந்த ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் அதன் முன்பே இருந்தார்கள்.
இளம் வயதில் கொல்லப்பட்ட கென்னடி தொடர்பான பல பிம்பங்கள் புகைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் பல காலமாக ஆழப் பதிந்திருக்கின்றன. அவர் இளம் மனைவி ஜாக்குலின் கென்னடி ரத்தக் கறை படிந்த மேலாடையை அகற்றாமலே டி.வியில் தோன்றினார். வெள்ளை மாளிகையில் கென்னடியின் குழந்தைகள் கென்னடியின் அலுவலக மேசையின் அடியிலும் மேசை மீதும் உட்கார்ந்திருக்க அவர் ஃபைல் பார்த்தபடி இருக்கும் புகைப்படங்கள் பிரபலமானவை.
இன்று கென்னடியின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள் ? மனைவி ஜாக்குலின் சில வருடங்கள் பொது வாழ்க்கை சேவை நிகழ்வுகளில் பங்கேற்றார்.ஆனால் கென்னடியின் சகோதரர் ராபர்ட்டும் கொலை செய்யப்பட்டபின்னர், தனக்கும் குழந்தைகளுக்கும் கென்னடி என்ற பெயரில் இனி பாதுகாப்பு இல்லை என்று கருதினார்.எனவே கிரேக்க கோடீஸ்வரர் ஒனாசிசை மணம் செய்துகொண்டார். ஜாக்குலினை உலக மீடியா, அழகியாக மட்டுமே சித்திரித்திருக்கிறது. அவர் அறிவுப்பூர்வமானவர். எழுதுவதிலும் நூல்களை ஆசிரியராக இருந்து தொகுப்பதிலும் படிப்பதிலும் ஆர்வமுள்ளவர்.பதிப்பகங்களில் வேலை செய்தார். புராதன மரபான இடங்களைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டார். ஒனாசிஸ் 1975ல் இறந்ததும் இந்த பணிகளை ஜாக்குலின் இன்னும் அதிகமாகச் செய்யத் தொடங்கினார். 1994ல் ஜாக்குலின் புற்று நோயில் மரணடைந்தார்.
கென்னடி ஜாக்குலின் தம்பதிகளின்  முதல் குழந்தை பிரசவத்திலேயே இறந்து பிறந்தது. நான்காவது  குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்தது. இரண்டாவது குழந்தை கரோலினுக்கு இப்போது  வயது 56. ஜப்பானில் அமெரிக்க தூதராக இருந்தவர். பல்வேறு அமெரிக்க அரசு நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றியவர். மூன்றாவது குழந்தை ஜான் 1960ல் பிறந்தார். வழக்கறிஞராக, ‘ஜார்ஜ்’ என்ற இதழின் வெளியீட்டாளராக இருந்த ஜான் 1996ல்தான் திருமணம் செய்தார்.மூன்றாண்டுகள் கழித்து அவர் குடும்பத்துடன் சென்ற விமானம் கடலில் நொறுங்கி விழுந்து அனைவரும் பலியானார்கள்.
கென்னடி வாழ்ந்தது 46 வருடங்கள் தான். அவர் இறந்தே 50 ஆண்டுகள் இப்போது ஆகின்றன. இன்று கென்னடியின் அரசியல் மரபு என்று ஏதாவது உண்டா? கென்னடி கொல்லப்படாமல் இருந்திருந்தால் வியட்நாம் யுத்தத்தை நிறுத்தியிருப்பார் என்று சிலர் கருதுகிறார்கள்.அவர் பதவியின் கடைசி நாட்களில் வியட்நாமில் அமெரிக்க படையின் எண்ணிக்கையைக் குறைத்து திரும்பப் பெற்றார். அதனாலேயே அவர் சி.ஐ.ஏவால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. கென்னடி ஆட்சிக் காலத்தில்  அவர் பெரிதாக வரிக் குறைப்பு செய்ய ஒப்புக் கொள்ளவில்லை. நலத்திட்டங்களை வலுப்படுத்தினார். கடைசி ஆண்டுகளில் உலகப் பயணங்களின்போது போரை ஒழிப்பது, அமைதி, வளர்ச்சிக்கு பாடுபடுவது என்பதில் அழுத்தம் கொடுத்து பேச ஆரம்பித்தார்.
கென்னடியின் அரசியல் வழிமுறையை பின்னர் வந்த யாரும் பின்பற்றவில்லை. கிளிண்ட்டன்  மட்டும் தன் பிம்ப அரசியலைக் கென்னடியைப் பின்பற்றி அமைத்துக் கொண்டார். அது அவருக்கு பயன் கொடுத்தது. கிளிண்ட்டனைப் போலவே கென்னடிக்கும் பெண்ணாசை பலவீனம் இருந்தது. வெள்ளை மாளிகைக்கு வந்து செல்லும் ஹாலிவுட் பிரபலங்கள் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வெளியாகின  அவர் கொலைக்குக் காரணம் பெண்கள் தொடர்பாக மாஃபியா கும்பல்களுடன் ஏற்பட்ட உரசலாகவும் இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
இன்றைய அமெரிக்காவில் கென்னடியை அவரை அறிந்தே இராத இளம் தலைமுறை கொண்டாடுவதாக செய்திகள் வருகின்றன. எந்தக் கென்னடியைக் கொண்டாடுகிறார்கள் ? வசீகரமான சே போன்ற பிம்பத்தையா? யுத்தமானாலும் அமைதியானாலும் அரை மனதுடன் ஈடுபட்ட ஜனாதிபதி கென்னடியையா? அல்லது இரண்டாம் உலகப் போரில் கடற்படை வீரராக செயல்பட்டு, நடுக்கடலில் உடைந்த படகில் இருந்த தோழர்களைக் காப்பாற்றுவதற்காக , படகைக் கயிற்றில் கட்டி, இழுத்து நீந்தி வந்துக் காப்பாற்றிய கென்னடியையா? காலம்தான் பதில் சொல்லும்.
இந்து தமிழ் ஏடு 24.11.2013

கருத்துகள் இல்லை: