சனி, 30 நவம்பர், 2013

அன்பே வா ! MGR ஐ சோதித்து சாதனை காட்டிய AVM இன் Masterpiece ! நிரந்தர வசூல் படம்

நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1965–ல் பட உலகில் ஒரு பரபரப்பான பேச்சு! என்ன அது?
ஏவி.எம். புரொடக்ஸன்ஸ் முதல் வண்ணப்படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கப்போகிறார்!
அவருடைய சம்பளம், அதுவரையில் தென்னிந்திய கதாநாயக நடிகர்கள் வேறு யாருமே வாங்காத அதிகபட்சத் தொகையான மூன்று லட்சம் ரூபாய்!
செய்தி வெளியான சிறிது நாட்களுக்குள்ளாகவே அனைத்து ஏரியாக்களையும், அதிகபட்சத் தொகையான முப்பத்து மூன்று லட்ச ரூபாய்க்கு செட்டியார் விற்று தமிழ்ப்பட விநியோக விற்பனையில் புதிய சாதனை புரிந்திருக்கிறார்! (அந்த 33 லட்சம் இன்றைக்கு 100 கோடிக்கு சமம்!)
ஆம், இந்தச் செய்தி உண்மைதான். ஏவி.எம். பிளஸ் எம்.ஜி.ஆர். அதனால்தான் அந்த விலையும் விற்பனையும்.
1964 வாக்கில் ‘கம் செப்டம்பர்’ என்ற பெயரில் ஓர் ஆங்கிலப்படம் வந்து நன்றாக ஓடியது. அதைப்பார்த்த நண்பர், இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் அந்தத் தாக்கத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு கதை எழுதி அதற்கு ‘அன்பே வா’ என்று பெயர் வைத்திருந்தார்.

அதைக்கேட்ட முருகன் பிரதர்ஸின் மூன்றாவது சகோதரரான எம்.சரவணன், ஜெய்சங்கர் அல்லது ரவிச்சந்திரனை வைத்து கருப்பு வெள்ளைப் படமாகத் தயாரிக்கலாம் என்று சொன்னார். பிறகு இதே கதையை எம்.ஜி.ஆரை வைத்து கலர் படமாக எடுக்கலாமே என்று எண்ணி திருலோகசந்தரை தன் தந்தையிடம் அழைத்துச்சென்று ‘அன்பே வா’ கதையைச் சொல்லச் சொன்னார்.
அதைக்கேட்ட செட்டியார், ‘இதுல லேடீஸ் சென்டிமென்ட் ஒண்ணும் இல்லே. எம்.ஜி.ஆர்னா அம்மா, தங்கச்சி யாராவது ஒருத்தர் வேணும். இதுவரைக்கும் நாம பேமிலி எலிமென்ட்ஸோட தான் படம் எடுத்திருக்கோம். இந்தக்கதையில அப்படி ஒண்ணும் இல்லே. ஆனா கேக்குறதுக்கு நல்லாருக்கு. எதுக்கும் எம்.ஜி.ஆர். கிட்டே சொல்லிப்பாருங்க. அவருக்குப் பிடிச்சிருந்தா கலர்லயே எடுக்கலாம்’ என்றார்.
எம்.ஜி.ஆரிடம் சென்று திருலோகசந்தர் கதையைச் சொன்னார். அதைக்கேட்ட அவர் கூறியது:–
‘இது என்னுடைய சம்பிரதாய முறைகள்ளேருந்து மாறுபட்ட ஒரு கதை. இந்தப்படத்தோட வெற்றி டைரக்டரைப் பொறுத்தது. அவர் என்னை எப்படிக் கையாளப்போறாரோ அதை வைத்துத்தான் படம் அமையும். நான் நடிக்கிற படங்கள்ளே என்னோட டைரக்டர் இருப்பாரு. ஆனா இந்தப்படத்துல டைரக்டரோட நான் இருக்கணும். சரி. ஒங்க விருப்பப்படி நான் நடிக்கிறேன். அவ்வளவுதான்’.
அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் மூலமாக எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் பணம் அனுப்பப்பட்டது. அந்தச் சமயத்தில் ஆர்.எம்.வீ. தனது சத்யா மூவிஸ் சார்பில் எம்.ஜி.ஆரை வைத்து ‘நான் ஆணையிட்டால்’ படத்தைத்தயாரித்துக் கொண்டிருந்தார். ‘அன்பே வா’ படத்தின் கதாநாயகியாக பி.சரோஜாதேவியும், இசை அமைப்பாளராக எம்.எஸ்.விஸ்வநாதனும், பாடலாசிரியராக கவிஞர் வாலியும் ஒப்பந்தமானார்கள்.
வசனம், வழக்கம்போல நான்தான்!
ஸ்டூடியோவில் ‘அன்பே வா’ களைகட்டத் தொடங்கியது. செட்டியார் பட சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரையும் அழைத்து ஒளிவு மறைவு இன்றி ஓர் அறிவிப்பு வெளியிட்டார்.
‘இந்தப்படம் முப்பத்தி மூணு லட்ச ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கு. இதுல முப்பது லட்ச ரூபாய் தயாரிப்பு செலவு (காஸ்ட் ஆப் புரொடக்ஷன்) ஆகும். அந்தச் செலவு படத்தில தெரியணும். அந்த அளவுக்கு படம் ‘ரிச்சா’ இருக்கவேண்டும்.
உதவி டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடம்...
‘இந்தாப்பா, நீயும் நம்ம காஸ்டியூமர் ரஹ்மானும் இங்கே இருக்குற எல்லா பெண்கள் கல்லூரிக்கும் காலையிலேயே போய் வெளி            வாசல்ல நின்னு அங்கே படிக்குற பொண்ணுங்க லேட்டஸ்டா எந்தெந்த விதமான டிரஸ் போட்டுக்கிட்டுப் போறாங்கன்னு நல்லா கவனிச்சு அதே மாதிரி நம்ம ஹீரோயின் சரோஜாதேவிக்கும் மத்த லேடி ஆர்ட்டிஸ்டுகளுக்கும் டிரஸ் தயார் பண்ணுங்க’.
ஒளிப்பதிவாளர் மாருதிராவிடம்...
‘நீ என்ன பண்றே. இதுவரைக்கும் வந்திருக்குற பெஸ்ட் இங்கிலீஷ் – இந்தி கலர் படங்களை தினமும் நம்ம மாடி டீலக்ஸ் தியேட்டர்ல பார்த்து நல்லா ஸ்டடி பண்ணிக்கிட்டு, அதுக்குத் தகுந்தபடி நிறைய கலர் டெஸ்ட் எடுத்துப்பாரு’.
முருகன் பிரதர்ஸின் இரண்டாவது சகோதரரான எம்.குமரனிடம்...
‘அப்பா! நீ வழக்கம்போல மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் பக்கத்துலேருந்து கவனிச்சி ஒனக்கு திருப்தி உண்டாகுறபடி நல்ல நல்ல டியூனா போடச்சொல்லி, வாலி கிட்டே நல்ல பாட்டு எழுதி வாங்கி ‘ரிக்கார்ட்’ பண்ணு.
செட்டியார் அத்துடன் விடவில்லை. அன்றைய நாட்களில் கலை இயக்குனர்களில் (ஆர்ட் டைரக்டர்) தலை சிறந்து விளங்கியவரும், ஜெமினி ‘‘சந்திரலேகா’’ படத்திற்கு பிரமாண்டமான அரண்மனை, கோட்டை கொத்தளங்கள், ஆடை அணிமணி அலங்காரங்கள் அமைத்துப் புகழ் பெற்று, பின்நாட்களில் ஜெமினியிலிருந்து விலகி வந்து ஏவி.எம். ஸ்டூடியோவில் சேர்ந்து பணிபுரிந்தவருமான பிரபல ஏ.கே.சேகர் என்பவரை அழைத்தார். இவரது முழுப்    பெயர் ஏ.குலசேகரன் செட்டியார்.
ஏ.கே.சேகரிடம் செட்டியார் சொன்னார்:– ‘‘சார்! எம்.ஜி.ஆரோட அந்த ஊட்டி பங்களாவை, வழக்கமான சினிமா செட் மாதிரி இல்லாம, ரொம்ப ரிச்சா போடுங்க. நல்லா அழகா பர்னிஷ் பண்ணுங்க. கீழே தரையில் விரிக்கிற கார்ப்பெட்டெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா ரிச்சா இருக்கோணும். படத்துல பார்க்கும்போது பிரமிப்பா இருக்கோணும்.’’
அதைக்கேட்டு சேகர் சொன்னார்:– ‘‘நம்ம ஸ்டூடியோவுல இருக்கிற ஏழு புளோர்லேயும் இப்போ செட் போட்டு ஷூட்டிங் நடந்துகிட்டிருக்கு. புல் புளோர் எதுவும் காலியா இல்லே.’’
செட்டியார்:– அப்படின்னா எட்டாவதா பெரிசா புதுசா ஒரு புளோர் கட்டி அதுல இந்த பங்களா செட்டைப் போடுங்க. இப்போ பாட்டு பிக்சரைஸ் பண்ணுறதுக்காக டைரக்டர் யூனிட் ஊட்டிக்கும், சிம்லாவுக்கும் போகப்போறாங்க. அவுங்க திரும்பி வர்றதுக்குள்ளே இந்த புது புளோர் ரெடியாகி வந்த உடனே இதுல ஷூட் பண்ணணும். அதுக்குத் தகுந்த மாதிரி ஒரே மாசத்துல எட்டாவது புளோர் ரெடியாகோணும். கட்டி முடிக்கிற வரைக்கும் நம்ம புரொடக்ஷன் மேனேஜர் வெள்ளைச்சாமியை ராத்திரி பகலா இங்கேயே தங்கி இருந்து பாத்துக்கச் சொல்லுங்க.
அப்படியே, புது புளோருக்கு கீழ்ப் பக்கம் காலியா இருக்கிற இடத்துல எம்.ஜி.ஆருக்கும், சரோஜாதேவிக்கும் புதுசா ஏர் கண்டிஷன் வசதியோட ரெண்டு மேக்–அப் ரூம் கட்டுறதுக்கும் ஏற்பாடு பண்ணுங்க. எல்லாம் ஒரே மாசத்துல ரெடியாகோணும்.
இந்த மாசம் ஆறாந்தேதி பூஜை போட்டு படத்தை எடுத்து முடிச்சு வர்ற பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணனும். அதுக்குத் தகுந்தபடி எல்லாத்தையும் நீங்க கவனிச்சிக்கோணும்.’’
செட்டியார் உத்தரவின் பேரில் போர்க்கால வேகத்தில் வேலைகள் தொடங்கின.
புதிய எட்டாவது தளம் கட்டிக்கொண்டிருக்கும் பொழுது ‘‘அன்பே வா’’ படத்திற்கான பாடல்கள் அமைக்கும் பணியும் நடைபெற்றது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் அருகில் சொல்லி வைத்தாற்போல இருவர்! ஒருவர் கோயமுத்தூரிலிருந்து அவர் கூடவே வந்த அருமை ஆர்மோனியப் பெட்டியார். இன்னொருவர் சின்னச்செட்டியார். அதாவது ஏவி.எம். செட்டியாரின் இரண்டாவது குமாரரான எம்.குமரன்.
என் அன்பிற்கினிய அண்ணன் எம்.எஸ்.வி.யின் மூளையை முடிந்த மட்டும் குமரன் பிசைந்து மெல்ல மெல்ல நல்ல – நல்ல மெட்டுக்களை மொட்டு மொட்டாக வாங்கி அருமைக் கவிஞர் வாலியின் மூலமாக அவற்றை மனதிற்கினிய பாடல்களாக மலரச் செய்துவிடுவார்.
‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.’ என் அண்ணன் எம்.எஸ்.வி. சுடர் விளக்கு என்றால் என் சகோதரர் எம்.குமரன் தூண்டுகோல்.
‘ஊட்டி’ என்னும் நீலகிரி உதகமண்டலம் மற்றும் இமாசல      பிரதேசத்தில் உள்ள ‘சிம்லா’ ஆகிய மலை வாசஸ்தலங்களில் முதல் கட்டப் படப்பிடிப்பிற்காக மூன்று பாடல்கள் முதலில் தயாராயின. படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகப்பாடலான ‘புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது’ பாடலும், ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்’ என்ற டூயட் பாடலும், இன்னொரு எம்.ஜி.ஆரின் தனி (சோலோ) பாட்டும் அன்றைக்கு ஒலிப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
எம்.ஜி.ஆர்.தான் அந்த ஊட்டி மாளிகையின் உரிமையாளரான ஜே.பி. என்னும் பாலு என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட கீதா – சரோஜாதேவி. அவரை ‘டீஸிங்’ பண்ணியதை எண்ணி வருந்தி ஓடும்போது, அவர் பின்னாலிருந்து எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டு வரும் அந்தச் சூழலுக்கான பாட்டை அண்ணன் டி.எம்.எஸ். பாடி ஏராளமான இசைக் கருவிகளுடன் இணைந்து ஒத்திகை பார்த்து முடிந்து ‘டேக்’ எடுத்துப் பதிவாகப்போகும் தருணத்தில் செட்டியார் ‘ஆர்.ஆர்’ தியேட்டர் என்னும் வழக்கமான ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வந்து அமர்ந்து ‘பைனல் மானிட்டர்’ என்னும் கடைசி ஒத்திகையைக் கேட்டார்.
அடுத்து ‘டேக்’ என்று நாங்கள் அனைவரும் முடிவு செய்திருந்தோம். அதுதான் இல்லை.
எந்த பீடிகையும் இல்லாமல் எடுத்த எடுப்பில் செட்டியார் இப்படிக் கூறினார்:–
‘‘அப்பா! மியூசிஷியன்ஸ்க்கு (இசைக்குழுவினர்) சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க (எம்.எஸ்.வி.யிடம்) நீங்க இதுக்குப்பதிலா வேறு ஒரு டியூன் போடுங்க. (வாலியிடம்) நீங்க அதுக்குத் தகுந்தபடி சிச்சுவேஷனுக்கேத்தாப்போல வேற பாட்டு எழுதுங்க. (குமரனிடம்) நீ பக்கத்துலேருந்து பாத்துக்கப்பா. டேக்குக்கு முந்தி என்னைக் கூப்பிடுங்க’’ என்று சர்வ சாதாரணமாக – மென்மையாக சொன்னார். இருக்கையை விட்டு எழுந்தார். துண்டை எடுத்தார். தோளில்போட்டுக்கொண்டார். ஒன்றும் அறியாத நல்ல பிள்ளைபோல காரில் உட்கார்ந்தார். கார் நகர்ந்தது.
வாலி வாழைப்பூ போல தலை குனிந்து தரையைப் பார்த்தார்.
எம்.எஸ்.வி. சட்டைப்பையிலிருந்து எவர்சில்வர் பொடி டப்பியை எடுத்தார். அதன் மூடியைத் திறந்தார். பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் வைத்து ஒரு சிட்டிகை எடுத்தார். மூக்கில் வைத்தார். முடிந்த மட்டும் ஒரு இழுப்பு இழுத்து உறிஞ்சினார். அந்தப் பொடி சிவ்வென்று மூளையில் ஏறி கண்கள் சிவந்தன. கலங்கின. அதோடு குமரனை ஒரு பார்வை பார்த்தார்.
குமரன் தியேட்டருக்குள் போனார். பியானோ எதிரில் ஸ்டூலில் உட்கார்ந்தார். டியூன் பண்ணிக்கொடுத்தார். எழுந்தார். விசுக்கென்று அண்ணன் விசு அதில் அமர்ந்தார். கண்டமேனிக்கு கருப்பு வெள்ளைக் கட்டைகளை அழுத்து அழுத்தென்று அழுத்தினார். ஒலி உண்டானது. அந்த இன்னொலியில் இசையுடன் இணைந்து இனிய ‘டியூன்’ பிறந்தது.
வாலியை அழைத்தார். அவர் வந்தார். இவர் வாசித்தார். அவர் எழுதிக்காட்டினார். இவர் தன் டியூனோடு சேர்த்துப்பாடிப்பார்த்தார். சரியாக இருந்தது. குமரன் கேட்டார். ஓகே சொன்னார். ஆள் அனுப்பினார். ‘அப்பச்சி’ (செட்டியார்) வந்தார். ‘மானிட்டர்’ கேட்டார். ‘‘டேக் எடுங்கப்பா’’ என்றார்.
டி.எம்.எஸ். மைக் அருகில் சென்றார். நின்றார். வாயைத் திறந்தார். பாட்டு வந்தது. அது ஒலிப்பதிவு ஆனது. அந்தப்பாட்டுதான்:–
‘‘அன்பே வா... அன்பே வா
உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும்
அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும்
அன்பே வா.’’
இந்தப்பாட்டும் மற்றும் படத்தில் இடம் பெற்ற ‘புதிய வானம் – புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது’, ‘லவ் பேர்ட்ஸ்... லவ் பேர்ட்ஸ்’, ‘வெட்கமில்லை நாணமில்லை’, ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன், நல்ல  அழகி என்பேன்’
இன்றைக்குக் கேட்டாலும் – இனி என்றைக்குக் கேட்டாலும் இனிக்கும் இந்த இனிய கற்கண்டுப் பாடல்கள், அன்றைக்கு அண்ணன் எம்.எஸ்.வி.க்கும், என் அருமை இளவல் கவிஞர் வாலிக்கும் புகழுக்குப் புகழ் சேர்த்தன.
அனைத்துப் பாடல்களும் அடங்கிய ‘‘அன்பே வா’’ பாட்டுப்புத்தகம் வட்ட வடிவமாக ஓர் இசைத்தட்டுபோல அழகாக அச்சிடப்பெற்று அன்றைக்கு தியேட்டர்களில் விற்கப்பட்டன.
செட்டியாரின் விருப்பப்படி எட்டாவது எண் கொண்ட புதிய தளம் கட்டி முடிக்கப்பெற்றது. அதில் கலை இயக்குனர் ஏ.கே.சேகரின் கற்பனையில் தோன்றிய எம்.ஜி.ஆர். ஊட்டி மாளிகையின் கண்கவர் கூடமும், அதனைச் சார்ந்த படுக்கை அறையும் மற்றும் மேன்மாடமும் அதிகப்பொருட் செலவில் அசலாக உருவாகி இருந்தது!
8.12.1965 காலையில் ‘‘அன்பே வா’’ படத்தின் ஆரம்ப பூஜை வழக்கம்போல வாழைச்சருகு தொன்னையில் சுவையான சர்க்கரைப் பொங்கல் மற்றும் சூடான சுதேசிக் கொண்டைக்கடலைச் சுண்டலுடன் தொடங்கியது.
முதல் நாள் படப்பிடிப்பிற்கு வந்த எம்.ஜி.ஆர். தளத்தின் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் அங்கு அமைக்கப்பெற்றிருந்த அந்த அழகிய மாளிகையைப் பார்த்து மலைத்துத் திகைத்துப் போய்விட்டார்.
இதென்ன சினிமாப்பட செட்டா? அல்லது உண்மையாகக் கட்டப்பட்ட மாளிகைதானா என்று சந்தேகம் கொண்டு அங்கிருந்த ஒரு கருப்பு வண்ணக் கிரில்லை விரலால் சுண்டித் தட்டிப் பார்த்தார். அது ‘டிங் டிங்’ என்று ஓசை எழுப்பியது. ஆமாம். அது அசல் ஸ்டீலால் ஆன ஒரிஜினல் கிரில்தான் என்று அறிந்து கொண்டார். இதை நான் ஜாடையாகக் கவனித்தேன்.
தளத்தை விட்டுத் தனது புதிய தனி மேக்–அப் அறைக்குள் அடி எடுத்து வைத்த ‘மக்கள் திலகம்’ மயக்கம் போட்டு விழாத ஒரு குறைதான்! குளிர்சாதன (ஏர்கண்டிஷன்) பெட்டியிலிருந்து தவழ்ந்து வந்த இளங்காற்று, நறுமணங்கமழும் இனிய ‘ஜேஸ்மின்’ ஸ்பிரேயுடன் கலந்து எம்.ஜி.ஆரின் மனதை மகிழ்வித்தது.
ஒப்பனை இட்டுக் கொள்வதற்காக உட்காரும் சுழல் நாற்காலி. (‘ரிவால்விங் சேர்’) அதன் எதிரே இருக்கும் பெரிய பெல்ஜியம் முகம் பார்க்கும் கண்ணாடி! ஏனைய ஒப்பனைக்குரிய சாதனங்கள் அத்தனையுமே புத்தம் புதியது.
இந்திய உடம்பில் அமெரிக்க தலையையும், அதனுள்ளே பிரிட்டிஷ் மூளையையும் கொண்டிருந்த காரைக்குடி ஆவிச்சி செட்டியாரின் ஏகமகன் ஆன மெய்யப்ப செட்டியார் என்ற பிறவி மேதை – மருதூர் கோபாலமேனனின் நான்காவது புதல்வரான – பூதலம் புகழ் ராமச்சந்திரன் என்னும் எம்.ஜி.ஆரை மயங்க வைப்பதற்காக அல்ல – அவருக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பதற்காகச் செய்த இனிய ஏற்பாடுகள் இவை என்பதை ஒப்பனை அறையில் எம்.ஜி.ஆருக்கு நான் எடுத்து விளக்கினேன். அதைக்கேட்டு அவருடைய செவ்விதழ்களில் ஒரு சிறு பெருமிதப் புன்னகை நெளிந்தது.
எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் ‘‘வேட்டைக்காரன்’’ படம் 1964 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ். இந்தப்படம் 100 நாட்கள் ஓடியது.
1965 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடித்த வாகினியின் ‘‘எங்க வீட்டுப்பிள்ளை’’ ரிலீஸ். 100 நாட்கள் ஓடியது. அவற்றைத்தொடர்ந்து வரும் 1966 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடிக்கும் தங்கள் ‘‘அன்பே வா’’ படத்தை வெளியிட சகோதரர்கள் விரும்பினர்.
சரவணன் இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர். ஏற்கனவே ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் ‘‘நான் ஆணையிட்டால்’’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். அதனால் அவர்கிட்டே இதைப்பத்திப் பேசுங்க என்றார்.
அதன்படி சரவணன் ஆர்.எம்.வீ.யிடம் பேசினார். அவர் சம்மதித்து தன் படத்தை தள்ளி வைத்துக்கொண்டார்.
14.1.1966 பொங்கல் நன்னாள். சென்னை மவுண்ட் ரோடில் புகழ் பெற்ற பிரபல ‘காசினோ’ தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ஏவி.எம்.மின் ‘‘அன்பே வா’’ ரிலீஸ்.
காசினோவில் காலைக்காட்சிக்கே கட்டுக்கடங்காத கூட்டம். ஒரு வாரத்திற்கான எல்லா வகுப்பு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனாலும் தியேட்டரின் முன்னால் கூட்டம் அலைமோதியது.
வழக்கம்போல நான் காலைக்காட்சிக்கே சென்று தியேட்டரின் மேல் மாடி வாயிலுக்கு அருகில் நின்றபடி மக்களோடு சேர்ந்து மக்கள் திலகத்தின் ‘‘அன்பே வா’’வைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது மானேஜர் சங்கர் மேலே ஓடிவந்து என்னிடம், ‘‘எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்திலிருந்து உங்களுக்கு போன் வந்திருக்கு. சீக்கிரம் வாங்க’’ என்றார். நான் விரைந்து கீழே வந்து சங்கரின் அலுவலக அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த போன் ரிசீவரை எடுத்து ஹலோ சொன்னேன். எதிர் முனையில் இருந்து எம்.ஜி.ஆரின் அன்றாட உணவுக் கவனிப்பாளரான அண்ணன் ரத்தினம் பேசினார்.
‘‘அண்ணன் (எம்.ஜி.ஆர்.) ஒங்ககிட்டே பேசணுன்னாரு. ஒரு நிமிஷம் இருங்க.’’ இப்போது எம்.ஜி.ஆரின் குரல்:–
எம்.ஜி.ஆர்:– வணக்கம். பொங்கல் வாழ்த்துக்கள். வீட்டுக்குப் போன் பண்ணுனேன். நீங்க காசினோவுக்கு படம் பார்க்கப் போயிருக்கிறதா தங்கச்சி சொன்னுது. அங்கே எப்படி இருக்கு?
நான்:– கைத்தட்டல் ஒலி அதிர்ச்சியிலேயும் விசில் சத்தத்திலேயும் காசினோவே இடிஞ்சி விழுந்திடும் போலருக்கு.
எம்.ஜி.ஆர்:– (சிரித்தபடி) சரி. இன்னும் அரை மணி நேரத்துல நீங்க இங்கே வரணும். இன்னிக்கு என்னோட பொங்கல் சாப்பிடுங்க. அதோட ஒரு சந்தோஷமான செய்தி உங்களுக்கு சொல்லப்போறேன். ஒங்க கார் அங்கே இருக்கா? இல்லே நான் அனுப்பட்டுமா?
நான்:– வேண்டாண்ணே. என் காருலதான் வந்திருக்கேன். இதோ – இப்பவே புறப்படுகிறேன்.
ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லம். என்னை எதிர்பார்த்து வாசல் வராந்தாவில் அண்ணன் உலவிக்கொண்டிருந்தார். பாதம் பணிந்தேன். பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். உள்ளே டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார். சுவையும் சூடுமான சர்க்கரைப்பொங்கல். வெண் பொங்கல். அவியல். ஓலம். மெதுவடை. வகையறாக்களை அம்மா பரிமாறினார்கள். கொண்ட மட்டும் உண்டு மகிழ்ந்தேன்.
வழக்கம்போல பொங்கல் அன்பளிப்பாக நூற்றி ஒரு ரூபாய் வழங்கினார். வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஹாலில் வந்து அமர்ந்தோம்.
(சிவாஜி தீபாவளி, பொங்கல் இரண்டையுமே கொண்டாடுவார். ஆனால் எம்.ஜி.ஆர். பெரியார் – அண்ணா கொள்கையைப் பின்பற்றி பொங்கல் விழாவை மட்டும்தான் கொண்டாடுவார்.)
எம்.ஜி.ஆர். சொன்னார்:– ஒரு சந்தோஷமான சேதின்னேனே. அதைச் சொல்றேன். இப்போ நாம ராதாண்ணனுக்கு (எம்.ஆர்.ராதா) ஒரு படம் பண்றோம். அவருடைய நண்பர் வாசுன்னு ஒருத்தர் இருக்காரு. அவர்தான் புரொடியூசர். அவர் கலைவாணர் மற்றும் டி.எஸ்.பாலையாண்ணன், கே.ஏ.தங்கவேலு மாதிரி பழைய நாடக நடிகர்களுக்கெல்லாம் நண்பர். அவருக்கு உதவி செய்றதுக்காகத்தான் ராதாண்ணன் இந்த ஏற்பாட்டை பண்ணியிருக்காரு. ஆரம்ப பைனான்சே அவரோட சொந்தப்பணம் தான். முத்துக்  குமரன் பிக்சர்ஸ் கம்பெனி பேரு.
டைரக்ஷன் கிருஷ்ணன் பஞ்சு. அவுங்களும் இந்தப்    படத்துல பார்ட்னருங்க. கிருஷ்ணன் பஞ்சு டைரக்ஷன்ல ஏற்கனவே ‘‘ரத்னகுமார்’’, ‘‘பைத்தியக்காரன்’’ படங்கள்ளே நான் சின்னச் சின்ன வேடங்களில் நடிச்சிருக்கேன். ஹீரோவா நடிக்கிறது இதுதான் முதல் தடவை. அதனால ஒரு மாறுபட்ட கதையா இருக்கணும் என்று விரும்புகிறேன். ஒங்ககிட்ட இப்போ உடனே எழுதி ஷூட்டிங் ஆரம்பிக்கிறாப்போல ஏதாவது நல்ல கதை இருக்கா?
நான்:– (சற்று யோசித்து) இருக்குண்ணே. ‘அவுட்லைன்’ வச்சிருக்கேன். அதுக்கு திரைக்கதையும் வசனமும் எழுதணும்.
எம்.ஜி.ஆர்:– அதையெல்லாம் நீங்க சீக்கிரம் எழுதிடுவீங்க. எனக்குத் தெரியும். இப்போ அந்தக் கதையை சுருக்கமாக எனக்குச் சொல்லமுடியுமா?
நான்:– சொல்றேன். இது ஒங்களுக்கு ஒரு மாறுபட்ட கதையா இருக்கும்னு நினைக்கிறேன். கேளுங்க என்று நான் நினைத்து வைத்திருந்த அந்தக் கதையைச் சொன்னேன். அதைக்கேட்ட எம்.ஜி.ஆர். சொன்னார்:– கதை நல்லாயிருக்கு. நான் விரும்பின மாதிரி எனக்கு இது ஒரு மாறுபட்ட வேஷமா இருக்கும். சரி. இதுக்கு ஏதாவது டைட்டில் வச்சிருக்கீங்களா?
நான்:– நல்ல டைட்டில் இருக்குண்ணே. அதை நானே ரிஜிஸ்ட்டர் பண்ணி வச்சிருக்கேன்.
எம்.ஜி.ஆர்:– அப்படியா? சொல்லுங்க என்ன அது?
நான்:– ‘‘பெற்றால்தான் பிள்ளையா?’’
இதைக்கேட்ட மாத்திரத்திலேயே எம்.ஜி.ஆரின் முகம் மகிழ்ச்சியினால் மலர்ந்தது. அப்படியே என்னை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரு தூக்குத் தூக்கினார். ‘ஜானு’ என்று கூப்பிட்டார். அம்மா வந்தார்கள். ஆள் காட்டி விரலைக்காட்டினார். அவர் அறைக்குள் சென்றார். எம்.ஜி.ஆர். தொடர்ந்தார்.
எம்.ஜி.ஆர்:– இந்த டைட்டில் கதைக்கு மட்டுமல்லே எனக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கு. இதைவிட ஒரு நல்ல டைட்டில் கிடைக்கவே கிடைக்காது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ஜானகி அம்மா வந்து ஒரு கவரை எம்.ஜி.ஆரிடம் நீட்டினார்.
“அதை நீயே உன் கையால் ஆசிரியர்கிட்டே கொடு”. அம்மா என் கையில் கொடுத்ததை வாங்கிக்கண்களில் ஒற்றிக்கொண்டு சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்.
1964–ல் கமலாம்மா கையால் ‘‘புதிய பறவை’’க்கு முன் பணம். 1966–ல் ஜானகி அம்மா கையால் ‘‘பெற்றால்தான் பிள்ளையா’’வுக்கு டைட்டில் பணம். நான் கொடுத்து வைத்தவன்.
எம்.ஜி.ஆர். கூறினார்:– இதுல ஆயிரம் ரூபா இருக்கு. இது டைட்டிலுக்காக நான் உங்களுக்குக் கொடுக்கிற அன்பளிப்பு.
நான்:– ரொம்ப நன்றி அண்ணே! இப்படி ஆயிரம் ஆயிரமா நீங்க கொடுக்கிறதா இருந்தா, நான் ஒவ்வொரு படத்துக்கும் நல்ல நல்ல டைட்டிலா சொல்லுவேன்.’’
இதைக்கேட்டு அண்ணன் மட்டும் அல்ல. அம்மாவும் அவருடன் சேர்ந்து சிரித்தார்கள்.
எம்.ஜி.ஆர்:– என்ன பிரமாதம். நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. நான் கொடுத்துக்கிட்டே இருக்கேன். இப்போ நீங்க நேரா ராதாண்ணன் வீட்டுக்குப்போய் அவரைப்      பாருங்க. உங்களை எதிர்பார்த்து அவரும், கிருஷ்ணன் பஞ்சுவும், வாசுவும் காத்துக்கிட்டிருக்காங்க. டைரக்டருங்க கிட்டே கலந்து பேசிக்கிட்டு தற்சமயம் அவசரத்துக்கு முதல் கட்ட படப்பிடிப்புக்கான காட்சி வசனங்களை மட்டும் எழுதிக்கொடுத்திட்டிங்கன்னா மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம். புறப்படுங்க. வாழ்க.
அங்கிருந்து புறப்பட்டேன். வயிறு நிறைய சர்க்கரைப்பொங்கல். மனம் நிறைய மகிழ்ச்சி. சட்டைப்பை நிறைய பணம். கார் ஸ்டியரிங்கைப் பிடித்தேன். பரங்கிமலைச் சாலையில் ஓட்டினேன். பாட்டு வந்தது. பாடினேன்:–
‘‘நான் பார்த்ததிலே அவர் ஒருவரைத்தான் நல்ல வள்ளல் என்பேன், நல்ல வள்ளல் என்பேன்’’
இது வாலியின் அந்த பாட்டு அல்ல. என் சொந்தப்பாட்டு.dailythanthi.com

கருத்துகள் இல்லை: