வியாழன், 1 செப்டம்பர், 2011

கோண்டாவிலில் பிடிபட்டவரை படையினர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

யாழ் கோண்டாவிலில் மக்களால் பிடிக்கப்பட்டவரை படையினர் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு


யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியினில் நேற்று சந்தேகத்திற்கிடமான நிலையில் வீடொன்றினுள் அருகில் புக முற்பட்ட ஒருவர் உள்ளுர் மக்களிடம் அகப்பட்டுக் கொண்டுள்ளார். அறையொன்றினுள் அடைத்து வைக்கப்பட்ட நபரை பொறுப்பேற்ற படையினர் பின்னர் பொலிஸாரிடம் சந்தேக நபரை கையளித்துள்ளனர்.

துவிச்சக்கர வண்டியினில் வந்திருந்ததாக கூறப்படும் சந்தேக நபர்களான இருவர் பழுதடைந்த தமது வண்டியை அருகிலுள்ள திருத்தக மொன்றினில் விட்டுள்ளனர். பின்னர் சத்தமின்றி அருகாக உள்ள பொதுமக்களுக்குச்சொந்தமான வீடொன்றினுள் உட்புக முற்பட்டுள்ளனர். இதைக்கண்ட வீட்டிலிருந்தவர்களும் அயலவர்களும் அபயக்குரல் எழுப்பியுள்ளனர்.

சந்தேக நபர்களான ஒருவர் தப்பித்திருந்த நிலையில் மற்றையவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். அதையடுத்து அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான பொதுமக்கள் சந்தேக நபரை தாம் நீதிபதி முன்னிலையிலேயே ஒப்படைப்போமென போராடத் தொடங்கினர்.

பொலிஸார் பல தடவைகளாக பேச்சுக்களில் ஈடுபட்ட போதும் அவர்கள் வசம் சந்தேக நபரை கையளிக்க மக்கள் மறுத்துவிட்டனர். இந்நிலையில் அங்கு வந்த உடுவிலில் உள்ள 511 படைப்பிரிவு கட்டளையதிகாரி சந்தேக நபரை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சந்தேக நபர் நாளை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடனேயே தாம் படையதிகாரியிடம் கையளித்ததாக பொதுமக்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டது.

இதிடையே குடாநாட்டின் பலபகுதிகளிலும் கிறீஸ் மனிதன் சர்ச்சை பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

கருத்துகள் இல்லை: