செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

சட்டசபையில் ஜெ கக்கிய விஷமும், 'ஐந்து' கேள்விகளும்!

மூன்று மரணதண்டனைக் கைதிகளின் தூக்கை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என ஜெ இன்று சட்டசபையில் விதி 110ன் கீழ கூறியிருக்கிறார். அவர் பேசியது உண்மையா இல்லையா எனப் பார்ப்பதற்கு முன், விதி110ஐப் பற்றிப் பார்க்கவேண்டும். இந்த விதியின் கீழ் சட்டசபையில் முதல்வர் பேசினால் அது விவாதத்துக்கு வராது. அதைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்பதுதான் விதி110.

கேள்வி1: எதற்காக விவாதிக்க முடியாதபடி விதி110ஐ பயன்படுத்தி இந்த அறிவிப்பைச் செய்ய வேண்டும்?

முதல்வர் 'ஜெ' சொல்லியிருப்பதைப் போல யாரும் அவரை ரத்து செய்யச் சொல்லவில்லை. தூக்கை நிறுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தின் படி பரிந்துரைக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கூட செய்யவில்லை அவர். ஜெயலலிதாவின் கூற்று பச்சைப் பொய் என்றும், ஒரு மாநில முதல்வர் விதி161ன் கீழ் தன் அமைச்சரவையில் நிறைவேற்றும் தீர்மானத்தில் தலையிட பிரதமருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ கூட உரிமையில்லை என்றும், தன் கையாளாகாத்தனத்தை ஒரு பொய்யால் மறைக்கப் பார்க்கிறார் ஜெ என்றும் பிரபல வழக்குரைஞர் துரைசாமி இன்று பேட்டியளித்துள்ளார். இந்த விதி எண்161 என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு உதாரணமும் உண்டு. கேரளத்தில் சி.ஏ.பாலன் கருணை மனுவை அப்போது குடியரசுத் தலைவர் நிராகரித்தப் பின் முதலமைச்சராக இருந்த இ.எம். எஸ் நம்பூதிரிபாடுஅவர்களும் (1957) அப்போது கேரளா சட்ட அமைச்சராக இருந்த வீ.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்களும் தாங்கள் விதி 161ஐ பயன்படுத்தி சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனை நீக்கப் போவதாக அறிவித்தார்கள். அதன்பிறகு இந்திய அரசு இறங்கி வந்து சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று அவரது தூக்குத் தண்டனையை நீக்கியது.

கேள்வி2: கேரளா இந்திய மாநிலம் என்ற நிலையில், கேரள முதல்வருக்கு இருக்கும் அதிகாரம் எப்படி தமிழக முதல்வருக்கு இல்லாமல் போனது?

கேள்வி3: ஒருவேளை உண்மையிலேயே முதல்வருக்கு அதிகாரம் இல்லை என்றே வைத்துக்கொண்டாலும் கூட, எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் உட்பட அனைவரும் தூக்கு தண்டனைக்கு எதிராக ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் ஒரு சாதாரண குடிமகள் என்ற இடத்தில் இருந்து கூட எந்த ஒரு கோரிக்கையும் முதல்வர் ஜெ வைக்காததன் மர்மம் என்ன? எதிர்த்து குரல் கொடுக்க கூட அதிகாரம் வேண்டுமா என்ன?


தான் தீர்மானம் நிறைவேற்றாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் கருணாநிதி மேலும் பழி போட்டுள்ளார் முதல்வர். அதாவது ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான 3 பேர் பிரச்னையை அப்போதைய கருணாநிதி தலைமையிலான அரசு அமைச்சரவையை கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதாவது கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது .இதில் நளினி ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருப்பதால் இவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம், ஏனைய 3 பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்யலாம் என்றும், தீர்மானம் நிறைவேற்றி கடிதம் ஒன்றை கவர்னருக்கு எழுதியது என்றும் கூறியுள்ளார். அதே 2000ஆண்டில் கலைஞரின் அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு எதிராக பக்கம் பக்கமாக நமது எம்.ஜி.ஆரில் அறிக்கைகள் வெளியிட்டுள்ளார் ஜெ. அவற்றில் ஒரு பகுதி இப்படி போகிறது,
"ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? எது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. இது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

 சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.” இவ்வாறு செல்கிறது அறிக்கை. இதில் இருந்து மரணமடைந்தவரின் குடும்பமான சோனியாவும், ப்ரியங்காவும் குற்றவாளிகளை மன்னிப்பதைக் கூட ஜெயால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரிடம் எப்படி தூக்கு தண்டனை ரத்து தீர்மானத்தை எதிர்பார்க்க முடியும்.

கேள்வி3:முதல்வர் தனக்கு அதிகாரம் இல்லை என்பதால் தூக்குக்கு எதிராக தீர்மானம் போட மறுக்கிறாரா அல்லது மரண தண்டனையை எதிர்ப்பது தன் கொள்கைக்கு எதிரானது என்பதால் தீர்மானம் போட மறுக்கிறாரா?  
கேள்வி5: கருணாநிதியால் தீர்மானம் நிறைவேற்றி நளியைக் காப்பாற்ற முடியுமானால் 'ஜெ'யாவால் தீர்மானம் நிறைவேற்றி ஏன் பேரறிவாளனைக் காப்பாற்ற முடியாது? (தன் வாயாலேயே தனக்கு அதிகாரம் உண்டு ஆனால் தான் செய்யவில்லை எனவும், நளினியைக் காப்பாற்றியது கலைஞர்தான் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார் ஜெயா)

இந்திய அரசாங்கம் சட்டப்படி இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்த கச்சத்தீவை, "மீட்போம்" என இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு மாநில அரசு போர் முரசு கொட்டி தீர்மானம் போட முடியுமாம்! ஆனால் "தூக்கை கருணை அடிப்படையில் நிறுத்துங்கள்" என தீர்மானம் போட முடியாதாம்! இதான் 'சட்டத்துக்கு உட்பட்டு' நடக்கும் லட்சணம் போல! இதையும் நம்புவதற்கு நான்கு பேர் இருப்பதுதான் கொடுமை!

மலைப்பாம்பு நன்றாக உண்டுவிட்டால் மூன்று மாதங்கள் இரைதேடாது. பின் அந்த உணவு செரித்த பின் இரைவிழுங்க கிளம்பி விடும். தேர்தலில் நன்றாக உண்டுவிட்ட மலைப்பாம்பு ஒன்று மூன்று உயிரகளைக் காவு வாங்க கிளம்பியுள்ளது! ராம்ஜெத்மலானி தான் இப்போதைக்கு ஒரே வழி! கடைசியாக விஜயகாந்தும் இன்று மரண தண்டனைக்கு எதிராக தன் கருத்தைப் பதிந்திருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்....

கருத்துகள் இல்லை: