சனி, 3 செப்டம்பர், 2011

வீரபாண்டி ஆறுமுகம் 5ம் தேதி விடுதலையாகிறார்!

சேலம்: முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வரும் திங்கள்கிழமை கோவை சிறையிலிருந்து விடுதலையாகவுள்ளார்.
வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் வீரபாண்டி ஆறுமுகத்தை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க கடந்த 30ம் தேதி உத்தரவிட்டனர். ஆனால் நீதிமன்றத்துக்கு ஒரு வாரம் விடுமுறை என்பதால் வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் இருந்து உடனடியாக விடுதலையாக இயலவில்லை.
வரும் 5ம் தேதி தான் நீதிமன்றம் திறக்கப்படுகிறது. அன்று சேலம் நீதிமன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீனில் வெளியே வர அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்வர்.

இதை மாஜிஸ்திரேட் விசாரித்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீனில் செல்ல உத்தரவிடுவார். இதனால் வரும் திங்கள்கிழமை வீரபாண்டி ஆறுமுகம் விடுதலையாவார் என்று தெரிகிறது.

இதற்கிடையே ஒரு மாதமாக சிறையில் உள்ள அவருக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

மகன் நிச்சயதார்த்தத்துக்காக பரோலில் சென்ற நேரு:
இந் நிலையில் மகன் திருமண நிச்சயதார்த்தத்துக்காக பரோலில் சென்ற திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் சிறைக்குத் திரும்பினார்
நேரு நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது மகன் அருண் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்று முன்தினம் பரோலில் வெளியே சென்றார்.
நேற்று குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற அருணின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுவிட்டு, மாலையே சிறைக்குத் திரும்பினார்.

கருத்துகள் இல்லை: