சனி, 3 செப்டம்பர், 2011

தூக்குத் தண்டனை 11 வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருந்ததற்கு தி.மு.க.வே காரணம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு 11 ஆண்டுகளாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்குத் தி.மு.கதான் காரணம் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒரு குற்றவாளியான நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்றும் மற்ற மூவரின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் 2000ம் ஆண்டில் தி.மு.க ஆட்சியில் தான் முடிவெடுக்கப்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு கருணாநிதி அளித்துள்ள பதில்: நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததற்குத் தி.மு.க தான் காரணம் என்பதை முதல்வர் ஜெயலலிதா தன்னை அறியாமலேயே ஒப்புக் கொண்டிருக்கிறார். மற்ற மூவரின் கருணை மனுக்களையும் 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசுக்குத் தமிழக அரசு அனுப்பி வைத்தது என்றும் சொல்லியிருக்கிறார். மத்திய அரசுக்கு அந்தக் கருணை மனுக்களை அனுப்பி வைத்ததன் காரணமாகத்தான் 11 ஆண்டுகளாக அவர்களது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதை இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா வெளிப்படுத்தியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: