புதன், 31 ஆகஸ்ட், 2011

பொன்முடி கைது- ஆயிரக்கணக்கான திமுகவினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை அதிரடி சோதனை நடத்திய போலீஸார் அவரைப் பின்னர் கைது செய்து திண்டிவனம் கொண்டு சென்றனர்.
இந்தக் கைதை எதிர்த்து ஆயிரக்கணக்கான திமுகவினர் பொன்முடி வீட்டில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த திமுக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. விழுப்புரத்தில் அவரது வீடு உள்ளது. இன்று காலை திடீரென அங்கு வந்த போலீஸார் வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர். எதற்காக இந்த சோதனை என்று முதலில் தெரியவில்லை. இந்த திடீர் சோதனையால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஆயிரக்கணக்கில் திமுகவினர் பொன்முடி வீட்டின் முன்பு திரண்டனர். பொன்முடி கைது செய்யப்படுவதாக தகவல் பரவியதால் அவர்கள் குவிந்தனர். வீட்டின் முன்பு கூடியிருந்த போலீஸாரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர். வாரண்ட் இல்லாமல் பொன்முடியைக் கைது செய்ய போலீஸார் வந்திருப்பதாக கூறி அவர்களுடன் வாதிட்டனர்.
பொன்முடியின் வக்கீல்கள், போலீஸாரிடம் எதற்காக கைது நடவடிக்கை என்று கேட்டு நீண்ட நேரம் வாதாடினர். இறுதியல் பொன்முடியை போலீஸார் கைது செய்து வெளியே கொண்டு வேனில் ஏற்றினர்.
இதையடுத்து திமுகவினர் வேனை முற்றுகையிட்டு நகர விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இறுதியில் திமுகவினரை அப்புறப்படுத்தி விட்டு போலீஸார் வேனை கிளப்பிச் சென்றனர்.
ஏன் கைது?
விழுப்புரத்தில் அரசு ஊழியர் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான தந்தை பெரியார் நகர் என்ற இடம் உள்ளது. அங்குள்ள நிலத்தின் ஒரு பகுதியை கடந்த 2007ம் ஆண்டு பொன்முடி விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சங்கத்தின் அப்போதைய தலைவர் நாராயணசாமி ஒரு புகாரை போலீஸில் கொடுத்தார். அதில் சங்கத்திற்குச் சொந்தமான பூங்கா உள்ளிட்ட இடங்களை பொன்முடி சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.

இதன் பேரிலேயே தற்போது பொன்முடி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொய் வழக்கை-பொன்முடி

கைது செய்யப்பட்ட பொன்முடி செய்தியாளர்களிடம் பேசுகையில், இது முற்றிலும் பொய்யான வழக்கு. வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்குடன் என்னைக் கைது செய்து கதை புனைகின்றனர். இதை சட்டப்படி சந்தித்து வெளியே வருவேன் என்றார்.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட பொன்முடியை போலீஸார் திண்டிவனம் கொண்டு சென்று மாஜிஸ்திரேட் சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறைக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறைக்கு பொன்முடியை போலீஸார் கொண்டு சென்றனர்.
4வது முன்னாள் அமைச்சர்
தற்போதைய ஆட்சியில் கைதாகியுள்ள 4வது திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி. இதற்கு முன்பு வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, என்கேகேபி ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: