செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

இளங்கோவன்:ராஜிவ் உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை குறைக்கலாம்:

ஈரோடு: ராஜிவ் காந்தியும் அவருடன் கொல்லப்பட்ட அத்தனை பேரும் திரும்ப உயிரோடு திரும்ப வந்தால் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டி:

கேள்வி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் தண்டனையை குறைக்க வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதே?

இளங்கோவன்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். தலைவர் ராஜீவ் காந்தியும், தியாகி லீக் முனுசாமியும் அவர்களுடன் கொல்லப்பட்ட அத்தனை பேரும் திரும்ப உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம்.

கேள்வி: தூக்கு தண்டனை விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று கொடுத்த விளக்கம் பற்றி?

இளங்கோவன்: இந்தப் பிரச்சனையில் ஜெயலலிதா சரியான தகவலை தந்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு 3 பேரையும் தூக்கில் போடலாம் என்று சொல்லி விட்டு இப்போது கூடாது என சொல்வது கருணாநிதியின் அரசியல் நாடகம்.

கேள்வி: 3 பேரையும் தூக்கிலிட்டால் தமிழகத்தில் காங்கிரசின் எதிர்காலம் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறதே?

இளங்கோவன்: கொலை செய்தவனுக்கு என்ன தண்டனை என்று கோர்ட்டு சொல்லியிருக்கிறது. அதை நிறைவேற்றுவதால் காங்கிரசின் எதிர்காலம் எந்த விதத்திலும் பாதிக்காது என்றார்.

கருத்துகள் இல்லை: