செவ்வாய், 14 ஜூன், 2011

ஜெயலலிதா தாக்கு:ப.சிதம்பரம் தேர்தலில் மோசடியாக வென்று நாட்டை ஏமாற்றியவர்

டெல்லி: எனது ஆதரவு தேவையென்றால் அதை அவர்கள் தான் கேட்க வேண்டும். திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று வரை தொடர்ந்து வருவதால் தான் சோனியா காந்தியை நான் சந்திக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

முதல்வராகப் பொறுப்பேற்ற பின் இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்ற ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சி்க்கியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும். அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

திமுக செய்த சாதனையெல்லாம், நாட்டின் பணத்தை கொள்ளையடித்தது தான். தான் செய்த தவறுகளுக்கான விலையை திமுக இப்போது கொடுத்துக் கொண்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தலில் வெல்லவே இல்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அவரை அதிமுக வேட்பாளர் தோற்கடித்தார். ஆனால், மோசடி செய்து தான் அவர் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் நாட்டையே ஏமாற்றியுள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இன்றைய தேதி வரை திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து கொண்டுள்ளது. இதனால் நான் சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் தான் சந்திக்கவில்லை.

எனது ஆதரவு தேவையென்றால் அவர்கள் தான் வந்து கேட்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

தி்முக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து கொண்டிருப்பதற்கு ப.சிதம்பரம் தான் முக்கியக் காரணம் என்று ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது. மேலும் டெல்லி வந்த ஜெயலலிதாவை சோனியா சந்திக்காமல் தவிர்த்ததற்கும் சிதம்பரம் தான் காரணம் என்று ஜெயலலிதா கருதுகிறார்.

இதனால் தான் அவர் மீது ஜெயலலிதா பாய்ச்சல் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
P.Chidambaram has played fraud on the nation, said Tamil Nadu chief minister Jayalalithaa after meeting PM in Delhi

கருத்துகள் இல்லை: