சனி, 18 ஜூன், 2011

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம்

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்
1. ஏன் இதை எழுதுகிறேன்?
அன்பான ‘தேனீ’ வாசகர்களுக்கு,
நான் ஏன் இந்தத் தொடரை எழுதுகிறேன் என்பதை முதலில் உங்களுக்கு சொல்லி விடுவது அவசியமானது.
அதற்கு முன்னதாக எனது புலி வதை முகாம் பற்றிய அனுபவங்களை எழுதுவதற்கு ‘தேனீ’ இணையத்தளத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதை விளக்கி விடுவதும் முக்கியமானது.
ஏறத்தாழ 10 ஆண்டுகளாக நான் தேனீ இணையத்தளத்தின் ஓரு வாசகனாக இருந்து வருகின்றேன். அத்துடன் அவ்வப்போது முக்கியமான சில விடயங்களில் எனது கருத்தை அதன் ஊடாக வெளிப்படுத்தியும் வந்திருக்கிறேன். இவற்றுக்காக நான் தேனீயைத் தேர்ந்தெடுத்ததிற்குக் காரணம், அது எந்தவொரு கட்சியையோ, இயக்கத்தையோ அல்லது குழுவையோ சாராத சுதந்திரமான ஒர் ஊடகம் என்பதனாலாகும்.
அத்துடன் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் பின்பற்றும் தமிழ் தேசியவாத சேற்றுக்குள் அமிழ்ந்துவிடாமல், தேனீ தமிழ் மக்கள் பயணிக்க வேண்டிய திசைமார்க்கமான ஏகாதிபத்திய எதிர்ப்பு, பிற்போக்கு எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியுடன் ஊன்றி நின்றதுமாகும். குறிப்பாக பாசிசப் புலிகளை அழித்தொழிப்பதற்கான பொதுப் போராட்டத்தில் தேனீ ஆரம்பம் முதல் இறுதிவரை எவ்வித ஊசலாட்டமுமின்றி நிலை தழும்பாது நின்று வந்துள்ளதுமாகும்.
இதுதவிர இன்று தமிழில் செயற்படுகின்ற இணையத்தளங்களில் தேனீ மட்டுமே மிக அதிக எண்ணிக்கையான வாசகர்களால் பார்வையிடப்படுவது என்பதும், இலங்கையில் வெளிவருகின்ற பிரதான தமிழ் தினசரிகளின் வாசகர்களுக்கு இணையான வாசகர்கள் தினசரி தேனீயைப் பார்வையிடுகிறார்கள் என்பதும் இன்னொரு காரணமாகும். அத்துடன் தேனீ எனது இந்தத்தொடரை எவ்வித நிபந்தனைகளுமின்றி வெளியிட வந்ததிற்காக, அதன் நிர்வாகிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சரி, இனி விடயத்துக்கு வருவோம்.
2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போருடன் புலிகளுடனான அரசாங்கத்தின் 30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த முடிவுடன் புலிகளால் இலங்கையில் - குறிப்பாக தமிழ் சமூகத்தில் உருவாக்கி வைத்திருந்த மனித நேயம், நாகரீகம் என்பனவற்றுக்கு அப்பால் உருவாக்கி வைத்திருந்த கொடூரமான பாசிச கட்டமைப்பு முற்றுமுழுதாக நொருங்கி விழுந்து மக்களுக்கு ஓரளவு நிம்மதியும் ஏற்பட்டது உண்மைதான்.
ஆனால் அதை அறுதியும் இறுதியுமான வெற்றியாக மக்கள் கருதிவிடக்கூடாது. தமிழ் தேசியவாதத்தின் பெயரால் தமிழ் பிற்போக்கு உருவாக்கி வைத்திருந்த ஒரு கட்டமைப்பு மட்டுமே, புலிகளின் அழிவுடன் அழிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். அந்த கட்டமைப்பை உருவாக்கிய பிற்போக்கு தமிழ் தேசியவாதம் (அதற்குரிய சரியான பதம் ‘யாழ்ப்பாணியம்’ என்பதே. நாசிசம், பாசிசம், சியோனிசம், பார்ப்பனியம் என்ற சொற்கள் மனித விரோத செயற்பாடுகளை விளிக்க எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றனவோ, அவ்வாறான அர்த்தத்தில் ‘யாழ்ப்பாணியம்’ என்ற சொல்லையும் நாம் பயன்படுத்த முடியும்) மீண்டும் மீண்டும் தமிழ் சமூகத்தில் பாசிச சக்திகளை உருவாக்க முயன்று வருகிறது. அது தனது இறுதி மூச்சுவரை அதைச் செய்து கொண்டே இருக்கும். இதில் இன்னொரு  விசேட அம்சம் என்னவெனில், தற்போது தமிழ் பாசிசம் சர்வதேசிய ரீதியாக நன்கு வேரூன்றியுள்ளதுடன், அது முன்னெப்போதையையும்விட நெருக்கமான ஏகாதிபத்தியத் தொடர்புகளையும் கொண்டுமுள்ளது என்பதாகும்.
எனவே இன்று இலங்கையில் மட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மேட்டுக்குடி சக்திகளால் உருவாக்கி பாதுகாக்கப்படுகின்ற பிற்போக்கு தமிழ் தேசியவாத பாசிச சக்திகளை முறியடிக்கும் போராட்டம் இன்னமும் முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்வதுடன்,  அதை இல்லாதொழிக்காமல் தமிழ் மக்களின் உண்மையான தேசிய ஐக்கியத்தையோ, விடுதலையையோ நாம் அடைய முடியாது என்பதையும், அச்சமூகத்தின் எதிர்காலத்தில் அக்கறையுள்ளவர்கள் புரிந்து கொள்வது அவசியமானது. அதுவே நான் இத்தொடரை எழுதுவதற்கு தீர்மானித்ததின் அடிப்படைக் காரணமாகும்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் புலிகளை தமது ‘மீட்பர்கள்’ என்றும், ;விடுதலை வீரர்கள்’ என்றும், ஏன் ‘கடவுளர்கள்’ என்றும் கருதிய ஒரு காலம் இருந்தது. இன்றும்கூட அவ்வாறான ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்க சில சக்திகள் முயன்று வருகின்றனர். ஆனால் அவர்களது நிஜமுகம் என்ன என்பதை எனது இந்த அனுபவத்தொடர் ஓரளவு தன்னும் மக்களுக்கு விளக்கும் என நான் நம்புகின்றேன். நான் அவர்களது கைதியாக இருந்த காலத்தில் நான் அனுபவித்த உடல் - உள வேதனைகளை மட்டுமின்றி, அவர்களால் அந்தக் காலகட்டத்தில் என்னுடன் வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகள் அனுபவித்த  வேதனைகளையும் இங்கு பதிவு செய்வது அவசியம் என்று கருதுகின்றேன். இதில் அவர்களது இயக்க உறுப்பினர்களாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ‘சீவன்களின்’ துன்பங்களையும் உள்ளடக்குவது அவசியமானது.
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் மட்டுமின்றி, அவர்களது சிந்தனைகள், செயற்பாடுகள், பழக்க வழக்கங்கள் என்பன பற்றியும், அவர்கள் தமிழ் சமூகத்தின் மீது கட்டமைத்து வந்த பாசிச நிர்வாக இயந்திரத்தின் தன்மை பற்றியும் நான் அவதானித்தவை, அவர்கள் சிலருடன் மேற்கொண்ட உரையாடல்கள் மூலம் பெறப்பட்டவை என்பனவற்றையும் நான் இங்கு தெரிவிப்பது அவசியமானது என்று கருதுகிறேன்.

புலிகளால் நான் 1991 டிசம்பர் மாதம் 26ம் திகதி கைதுசெய்யப்பட்டு, 1994 ஜூன் 06ம் திகதி வரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களது வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டேன். அவர்கள் ‘மனமிரங்கி’ என்னை விடுதலை செய்திராவிட்டால், இன்று நான் உங்களுடன் எனது கருத்துகளைப் பகிர்வதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. அவர்கள் என்னை விடுதலை செய்ததை எனது இரண்டாவது பிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

எனது புலிகள் பற்றிய அனுபவங்கள் அவர்களின் கொடூரமான உருவத்தின் ஒரு வெட்டுமுகம் மட்டுமே. அதாவது ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல. அவர்களுடைய உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்த இது போதுமானதல்ல. அதனை முழுமையாகக் கொண்டுவருவதாக இருந்தால், அவர்களால் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு, ஏதோ சில காரணங்களால் தப்பிப் பிழைத்து வெளியே வந்து, தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இன்னமும் பயத்துடன் முகம் காட்டாது வாழும் நூற்றுக்கணக்கான முன்னாள் கைதிகள் முன்வர வேண்டும். அது அவர்கள் தமிழ் சமூகத்துக்கும், மனித குலத்திற்கும் செய்யும் வரலாற்றுக் கடமையாகும்.

எனது புலி வதை முகாம் அனுபவங்கள், அது ஏற்பட்டு 18 வருடங்கள் தாமதமாக வெளிவருவதற்கு காரணங்கள் உண்டு. நான் விடுதலையாகி வெளியே வந்ததும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வந்த எனது ஆத்ம தோழர்களும், நண்பர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வேறு பல சமூக ஆர்வலர்களும், நான் புலிகளின் இரும்புப் பிடியின் கீழ் இருந்த போது பட்ட அவலங்களின் துன்பங்களின் அனுபவங்களை எழுத்தில் கொண்டு வந்து, உலகின் முன் வெளிச்சத்தில் வைக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். ஆனால் 1995ல் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்படும் வரை, நான் அவர்களது தீவிர கண்காணிப்புக்குள் இருந்ததினால், அந்தச் சூழ்நிலையில் எனது சுண்டு விரலைக்கூட அவர்களுக்குத் தெரியாமல் அசைக்க முடியவில்லை.

1999ல் நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு சென்ற பின்னரும்கூட, அவர்களது வேவுக்கண்கள் என்னைப் பின்தொடர்ந்த வண்ணமே இருந்தன. மீண்டும் நான் அவர்களது தீவிர கண்காணிப்பு  வட்டத்துக்குள் படிப்படியாகக் கொண்டுவரப்படுகிறேன் என்று உணர்ந்த நிலையில், தவிர்க்க முடியாமலும், மனம் விரும்பாத நிலையிலும், எனதும் எனது குடும்பத்தினதும் பாதுகாப்புக் கருதி நான் நாட்டை விட்டு 2004 டிசம்பர் 04ம் திகதி வெளியேறினேன். நான் புலம்பெயர்ந்து குடியேறிய நாட்டிலும்கூட புலிகளின் மரண நிழல் என் போன்றவர்கள் மீது படிந்து கொண்டே இருந்தது. அதனால் வெளிநாட்டுக்குத் தப்பி வந்தும்கூட, கடந்த 6 வருடங்களாக ஓரளவு ஒதுங்கி மறைந்து வாழ வேண்டியே இருந்தது. இப்பொழுது புலிகள் தாயகத்தில் பெரும்பாலும் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையிலும்கூட, இன்றும்கூட அவர்கள் வைத்திருக்கும் பலமான சர்வதேச வலைப்பின்னல் காரணமாக, அந்தப்  பாசிஸ்ட்டுகளுக்கு எதிரானவர்களுக்கு உலகின் எந்த மூலையிலாவது பூரண பாதுகாப்பு உள்ளது என்று சொல்ல முடியாது.

இருப்பினும் எமக்குள்ள வரலாற்றுக் கடமையை ஏதாவதொரு சந்தர்ப்பத்திலாவது நாம் நிறைவேற்றியே தீர வேண்டும். இது வரலாறு எமக்கு இடும் கட்டளையாகும். தவறுவோமாக இருந்தால், அது எமது மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். அதற்காக சில துன்பங்கள் ஏற்படினினும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். அந்த உணர்வின் காரணமாகவே நான் இத்தொடரை எழுத எண்ணினேன்.

நான் இதை எழுதும் போது உண்மையுடனும் சத்தியத்துடனும் அணிவகுத்துச் செல்லவே எப்பொழுதும் விரும்புகின்றேன். புலிகள் என்னைக் கைது செய்ததால்தான் நான் அவர்கள் மீது கோபம் கொண்டு இதை எழுதுகிறேன் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால் மறுபக்கமாகப் பார்த்தால் நான் ஏதோவொரு வகையில் அவர்களது தீய செயற்பாடுகளை எதிர்த்ததாலேயே, அவர்கள் என்னைக் கைதுசெய்து சித்திரவதைக்குட்படுத்தினர் என்பதே உண்மையாகும். அந்த வகையில் பார்த்தால் மனிதகுல விரோதிகளான புலிகள் எனக்கு மாபெரும் கௌரவத்தை வழங்கியுள்ளனர் என்றே கூற வேண்டும். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

மனிதர்கள் எல்லோரும் பிறக்கின்றனர் வாழ்கின்றனர். இனப்பெருக்கம் செய்கின்றனர். தமது சந்ததிகளுக்காக சொத்துக்களைத் தேடி வைத்துவிட்டு மரணிக்கின்றனர். சொத்துத் தேடுவதைத் தவிர ஏனைய அனைத்தையும் மிருகங்ளும் கூடச் செய்கின்றன. எவன் ஒருவன் தான் வாழும் காலத்தில் தனது சக மனிதனுக்கு எதிராகவும், தன்னுடைய இன்றியமையாத சுற்றுச்சூழல் நண்பர்களான விலங்குகள், தாவரங்கள் என்பனவற்றுக்கு எதிராகவும் உருவாகும் அநீதிகளை எதிர்த்துப் போராடுகிறானோ, அவன்தான் உண்மையான மனிதன் ஆவான். இது நமது முன்னோடிகளால் எமக்கு தொடர்ந்து போதிக்கப்பட்டு வரும் பேருண்மையாகும

இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கும் நேரத்தில், என்னுடன் புலிகளின் வதை முகாம்களில் சக கைதிகளாக இருந்து, எம்மில் சிலருக்கு கிடைத்த மீண்டும் வாழும் சந்தர்ப்பம் கிடைக்காமல், புலிகளின் கொலைக்களங்களில் பலியிடப்பட்டவர்களுக்கும், எமக்குத் தெரியாமல் அவர்களால் மரணிக்க வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும், எனது கண்ணீராலும், இதயத்தில் கசியும் செந்நீராலும் அஞ்சலி செய்கின்றேன். அவர்களது துன்பப்படும் ஆத்மாக்கள் சாந்தி பெற மனதார பிரார்த்திக்கிறேன்.

அதேநேரத்தில், இடதுசாரித்துவம் பேசியவர்கள் சிலரும், மாற்றுக்கருத்துக் கதைத்தவர்களும், மனித உரிமைக் கோசம் போட்டவர்களும் சந்தர்ப்பவாதிகளாகவும், பதவி வேட்டைக்காரர்களாகவும், ஓடுகாலிகளாகவும் மாறிப் புலிகளின் காலடியில் சரணாகதி அடைந்துவிட்ட நிலையிலும்கூட, உயிராபத்துகள், பல இடர்ப்பாடுகள் வந்தபோதிலும் நிலை தழும்பாது நின்று, புலிகளின் பாசிசச் செயற்பாடுகளை இறுதிவரை நம்பிக்கையுடன் எதிர்த்துப்  போராடிய இன்றும் போராடுகின்ற உண்மையான முற்போக்கு – ஜனநாயக சக்திகளுக்கும் சிரம் தாழ்த்துகின்றேன்

நன்றி.

அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்

கருத்துகள் இல்லை: