வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

விஜய் படங்களுக்கு ‌தடை!இறுதி கெடு, திரையரங்க உரிமையாளர்கள்


கடந்த ஆண்டில்  தமிழ்ப்படம், அங்காடித்தெரு, பையா ஆகிய படங்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது

விஜய் படங்களுக்கு ‌தடை போடுவது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு விதித்துள்ளனர். திரையரங்க உரிமையாளர்கள் விஜய்க்கு தடை போட கூட்டம் போட இருக்கிறார்கள் எனும் செய்தி கடந்த வாரம் காட்டுத்தீ போல் கோடம்பாக்கத்தில் பரவியது. விஜய்யின் சமீபகால படங்கள் தந்த நஷ்டத்தை விஜய் அடுத்த படத்தில் ஈடுகட்ட வேண்டும் எனும் ஒப்பந்தத்திற்கு அவர் வர வேண்டும், அப்படி வராவிட்டால் அவருக்கு தடை எனும் முடிவில் கடந்த சனிக்கிழமை கூடவிருந்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தை புதன்கிழமைக்கு தள்ளி வைத்தனர். ஆனால் புதன்கிழமையும் கூட்டம் நடக்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பும் கேன்சல் செய்யப்பட்டது. இதற்கு காரணம், திரையரங்க உரிமையாளர்களுடன் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சமாதானத்திற்கு ரெடியாகி வருவதாக வந்த தகவல்தானாம். அதே நேரம் சமாதான பேச்சு நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. விஜய் படங்களால் சமீப காலமாக தியேட்டர் அதிபர்களுக்கு சுமார் 30 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் ரோஹினி ஆர்.பன்னீர்செல்வம், செயற்குழு உறுப்பினர் திருச்சி ஆர்.ஸ்ரீ‌தர் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, விஜய் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியுள்ளன. அடுத்தடுத்து 6 படங்களால் தியேட்டர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனை நடிகர் விஜய் ஈடுகட்ட வேண்டும். குறைந்தபட்சம் நஷ்டத்தொகையில் 30 சதவீதத்தையாவது திருப்பித் தர வேண்டும். நஷ்டத்தை ஈடுகட்ட படம் நடித்துக் கொடுக்க வேண்டும். அப்படி தராவிட்டால் சங்கத்தில் செயற்குழுவை கூட்டி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினர்.

கடந்த ஆண்டில் வெளியான படங்களில் பல படங்களை வெற்றிப்படம் என்று தயாரிப்பாளர்கள் விளம்பரப் படுத்தினாலும், தமிழ்ப்படம், அங்காடித்தெரு, பையா ஆகிய படங்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது என்றும் தியேட்டர் அதிபர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை: