வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

கலைஞருக்கு பயம்: நான் பெரிய குத்தூசி: விஜயகாந்த் பேச்சு

என்னை கண்டு கலைஞருக்கு பயம் என்றும், நான் பெரிய குத்தூசி என்றும் விஜயகாந்த் பேசினார்.

திண்டிவனத்தில் நடந்த தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்,

நடந்து முடிந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் விழுப்புரம் மாவட்டத்தில் தே.மு.தி.க. அதிக வாக்குகள் பெற்றது. அதற்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் தொண்டர்களை தெய்வமாக மதிக்கிறேன்.

குடும்பத்தில் ஆண் தவறு செய்தால் பெண் விட்டுக்கொடுக்க வேண்டும். ஈகோவை விட்டுகொடுக்க வேண்டும். மனஸ்தாபம் இருக்க கூடாது. நானும் எனது மனைவியும் சந்தோசமாக இருப்பதற்கு விட்டு கொடுப்பதுதான் காரணம்.

விருத்தகிரி படபிடிப்பு முடியும் தருவாயில் அரசியல்வாதிகள் என்னை பற்றி ஏதேதோ பேசி வம்புக்கு இழுக்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்லும் வாய்ப்பாக இந்த திருமண விழா அமைந்துவிட்டது.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பின் வந்தவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் எந்த வகையில் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள்?

ஓட்டுக்காக இலவச டி.வி., இலவச கியாஸ் அடுப்பு, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கி உள்ளோம் என்றும் தற்போது விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் என்றும் கலைஞர் கூறுகிறார். மின்சாரம் இல்லை அதனால்தான் கொடுக்கிறார்.

தமிழ்நாட்டில் 62 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் கலைஞர் 4 1/2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்ததாக கூறுகிறார். இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதற்காக எந்த திட்டத்தையாவது கலைஞர் கொண்டு வந்துள்ளாரா?

என்னை கண்டு கலைஞருக்கு பயம். நான் பெரிய குத்தூசி. நான் உங்களிடம் கூட்டணிக்காக என்றைக்காவது தூது விட்டேனா? நான் கூட்டணி குறித்து இதுவரை பேசவில்லையே?
வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் நல்ல கட்சிகளுடன் நான் கூட்டணி அமைப்பேன். எக்காரணம் கொண்டும் இனி தி.மு.க. ஆட்சிக்கு வராது.

நான் தனியாக ஆட்சி அமைக்கமுடியாதா? நான் இருக்கிறேன். உங்களை நான் கைவிடமாட்டேன். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.

10 எம்.எல்.ஏ., 10 எம்.பி.க்களாக நான் கட்சி நடத்தவில்லை. ஏழைகளுக்காக கட்சி நடத்துகிறேன். 2 கட்சிகளும் ஊழல் செய்துள்ளது. தே.மு.தி.க.வுடன் ஆட்சியை ஒப்படைத்து பாருங்கள் நல்ல ஆட்சியை தருவேன் என்றார்.

கருத்துகள் இல்லை: