திங்கள், 29 நவம்பர், 2021

ஒமிக்ரான் வைரஸ் - .விளைவுகள் கடுமையாக இருக்கலாம்" -உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கரோனா, இதுவரை 13 நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் இந்த கரோனா பரவலால் பல்வேறு நாடுகள், தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதேபோல் இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டினர் வருவதை தடை செய்துள்ளனர்.


இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனம், ஒமிக்ரான் மேலும் பலநாடுகளுக்கு பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும்  ஒமிக்ரானால் ஏற்படும் உலகளாவிய ஆபத்து மிகவும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஒமிக்ரானால், கரோனா பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்றும், அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கலாம் எனவும் உலகசுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒமிக்ரானால் இதுவரை எந்த இறப்பும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசிகள் மற்றும் முந்தைய நோய்த்தொற்றுகளால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி தரும் பாதுகாப்பிலிருந்து ஒமிக்ரானின் தப்பிக்கும் திறனை மதிப்பிடுவதற்கு மேலும் ஆராய்ச்சி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளதாகவும், ஓமிக்ரான் குறித்த முக்கிய தரவுகள் வரும் வாரங்களில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோல் சிறிய எண்ணிக்கையிலான தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் இந்த ஒமிக்ரான் தொற்று ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்தல், கரோனா பாதிப்புகளை கண்காணித்தல் மற்றும் மரபணு வரிசைமுறை சோதனையை மேம்படுத்துதல் உள்ளிட்ட சில நடவடிக்கைகளையும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

 

கருத்துகள் இல்லை: