ஞாயிறு, 28 நவம்பர், 2021

கோவாவுக்கு பின் மேகாலயாவில் காங். கதையை முடித்த மமதா- பிரதான எதிர்க்கட்சியானது திரிணாமுல்!

 Mathivanan Maran -  e Oneindia Tamil :  ஷில்லாங்: கோவா மாநிலத்தைத் தொடர்ந்து மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதி இருக்கிறார் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி.
காங்கிரஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவியதால் இப்போது மேகாலயா மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.
மேற்கு வங்க மாநிலத்தில் 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட மமதா பானர்ஜி, காங்கிரஸ் செல்வாக்கு இழந்த, பலவீனமான மாநிலங்களை குறிவைத்து அடுத்தடுத்து காய் நகர்த்துகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தியாளர்களாக இருக்கும் மாநிலங்களை குறிவைக்கிறார்.
இந்த வியூகத்தின் முதல் கட்டமாக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கப்பட்டது.

காங்கிரஸில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தவர்களையும் திரிணாமுல் காங்கிரஸ் ஜோதியில் இணைத்தார் மமதா. அவரே கோவா சென்று நிர்வாகிகளை சந்தித்தும் பேசினார்.

இதனைத் தொடர்ந்து ஹரியானா, பீகார், டெல்லிக்கு குறிவைக்கும் வகையில் கீர்த்தி ஆசாத், பவன்குமார் வர்மா, அசோக் தன்வார் ஆகியோரை திரிணாமுல் காங்கிரஸில் இணைத்தார். காங். தலைவர்கள் டார்கெட் காங். தலைவர்கள் டார்கெட் இதன்மூலமாக திரிணாமுல் காங்கிரஸுக்கும் காங்கிரஸுக்கும் இருந்த குறைந்தபட்ச இணக்கமானது வேட்டு வைக்கப்பட்டது.
இப்போது இதன் உச்சமாக மேகாலயா மாநிலத்தில் ஆகப் பெரும் அதிரடியை மமதா பானர்ஜி வெளிப்படுத்தி இருக்கிறார். மமதா பானர்ஜியைப் பொறுத்தவரையில் வடகிழக்கு மாநிலங்களில் வலுவாக காலூன்றுவதில் கவனமாக இருக்கிறார். குறிப்பாக வங்க மொழி பேசும் மக்கள் செறிவாக வாழும் மாநிலங்களில் நிலைபெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். வடகிழக்கில் வியூகம் வடகிழக்கில் வியூகம் திரிபுரா, அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா என ஒவ்வொரு மாநிலத்திலும் கால் பதித்துக் கொண்டிருக்கிறது மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

திரிபுராவில் ஆளும் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது மமதாவின் திரிணாமுல்தான். திரிபுராவை கோட்டை போல் கட்டி ஆண்ட இடதுசாரிகள் இருக்கிற இடமே தெரியாமல் போய்விட்டது.
இதற்கு அடுத்ததாக மேகாலயா மாநிலத்தில் வலுவாக காலூன்றி இருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ். மேகாலயாவில் காங்.க்கு முடிவுரை மேகாலயாவில் காங்.க்கு முடிவுரை அம்மாநிலத்தில் மாஜி முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர்.
மேகாலயா சட்டசபையில் காங்கிரஸுக்கு மொத்தம் 18 எம்.ஏல்.ஏக்கள் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துவிட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இப்போது மேகாலயா மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாகி இருக்கிறது திரிணாமுல். மமதா பானர்ஜியின் இத்தகைய காங்கிரஸுக்கு எதிரான வலுவான வியூகம் அக்கட்சி மேலிடத்தை கடும் அதிருப்தி அடைய வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: