ஞாயிறு, 11 ஜூலை, 2021

போயஸ்கார்டனில் ஜெயலலிதா ஏன் மயங்கி விழுந்தார்? அப்பல்லோவில் நடந்தது என்ன? ... சசிகலா!

ibc tamil :அதிமுகவில் அம்மா என்று ஜெயலலிதாவை அழைத்ததற்கு அடுத்தபடியாக சின்னம்மா என்று அழைக்கப்பட்டவர்தான் சசிகலா. அந்த அளவிற்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் உடன்பிறவா சகோதரிகளாக இருவரும் இணைந்து இருந்து வந்தார்கள். ஜெயலலிதா இருக்கும் வரை அக்கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. எந்த சலசலப்பும் இல்லை.ஆனால், ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகுதான் அதிமுகவில் பெரும் சர்ச்சையும், சலசலப்பும் பூகம்பமாக வெடித்தது. இந்த குளறுபடிகளால்தான் சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு தலைமை ஏற்க போவதாக அதிமுகவினரிடையே ஆடியோவில் பேசிக் கொண்டு வருகிறார். இந்நிலையில், சசிகலா ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா பேசியுள்ள அந்த பேட்டியில், சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையிலான உறவு குறித்தும், ஜெயலலிதாவுடன் இருந்து வந்த அரசியல் அனுபவங்கள் குறித்தும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த இறுதி நாட்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஜெயலலிதா இறந்து இவ்வளவு நாட்கள் ஆகியும், மக்கள் அனைவருக்கும் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் இருந்துக்கொண்டு வந்தது. அது குறித்து முதல்முறையாக மனம் திறந்து சசிகலா பேசியதாவது –

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்வதற்கு முன்பு, ஜெயலிதாவின் நினைவிடம் சென்று அவரின் சமாதியில் மூன்று முறை ஓங்கி அடித்து சத்தியம் செய்தேன்.

நான் திரும்பி வருவேன். துரோகிகள் அனைவரையும் தோற்கடித்து கட்சியை கைப்பற்றுவேன். அன்றைக்கு அக்காவின் சமாதியில் அடித்து சத்தியம் செய்தேன்.

 

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் இறுதி ஊர்வலத்தில், அவரது உடல் வைக்கப்பட்ட ராணுவ வண்டியில் ஜெயலலிதா ஏற முயற்சி செய்த போது, அவர் கீழே தள்ளிவிடப்பட்டார்.

ராணுவ ஊர்தியில் இருந்து தள்ளி விடப்பட்டபோது காயமடைந்தார் அக்கா. உடனே வீட்டிற்கு வந்த ஜெயலலிதா, தன் அம்மாவின் படத்திற்கு முன்னால் நின்று ‘நான் தோற்று விட்டேன்’ என்று கதறி அழுதார்.

பார்க்கும்போது என் கண் கலங்கின. எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. அதன் பின்னர்தான் நான் எப்போதும், அக்காவுடன் இருந்து அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஜானகி அணி – ஜெயலலிதா அணி என்று இரண்டு அணிகள் உருவெடுத்தது. பின்னர் இரண்டும் ஒன்றிணைந்தது.

நான் கணவருடன் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று விட்டேன். அங்கு சென்று ஜானகி அம்மாவை சந்தித்துப் பேசினேன்.

கட்சியை ஒருங்கிணைக்கப் போகிறேன் என்று அக்காவிடம் சொன்னேன். அதற்கு அக்கா, நீ போக வேண்டாம் சசி… நீ போய் சந்தித்தால் எதுவும் நடக்கப்போவதும் கிடையாது என்றார். இல்லை… நான் ஜானகி அம்மாவைச் சந்தித்துப் பேசத்தான் போகிறேன் என்று சென்னேன். அதற்கு அக்கா, உன் விருப்பம் சசி… நீ செய் என்று சொன்னார்.

சொன்னபடியே நானும், என் கணவரும் மாலையில் ராமாவரம் தோட்டம் சென்று ஜானகி அம்மாவை சந்தித்துப் பேசினோம். அந்தச் சந்திப்புக்குப் பின்னர் அவர், தான் பின்வாங்குவதாக தெரிவித்தார்.

அக்காவுடன் போயஸ்கார்டனில் 33 ஆண்டுகளாக இருந்தேன். ஒரு நாள் கூட ஜெயலலிதா சம்மதம் இல்லாமல் நான் வெளியே போனதில்லை. அப்படி இருந்தும் இரண்டு முறை வெளியேற்றப்பட்டுவிட்டேன்.அதற்கு காரணம் அரசியல் தான்.

1997ம் ஆண்டு நான் வெளியேற்றப்பட்ட போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் நான் சேர்க்கப்பட்டேன். நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளேன் என்று கேள்விப்பட்டவுடன் ஜெயலலிதா, என் உடல்நிலை சரியான பின்னர் போயஸ் கார்டனுக்கு மீண்டும் அழைத்துச் சென்றார்.

அதன் பின்னர் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். அக்காவின் அறிவுறுத்தலின் பேரில்தான் தி.நகர் இல்லத்தில் தங்கினேன். எனக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்று வெளியுலகத்தில் பேச்சு வந்தது. ஆனால் இரவு 8 மணிக்கு தொடங்கும் எங்களது செல்போன் உரையாடல் நள்ளிரவு வரை நீடிக்கும்.

இவை அனைத்தும் நாங்கள் இருவரும் திட்டமிட்டுத்தான் செய்தோம். மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு மீண்டும் போயஸ் கார்டனுக்கு சென்றேன். இதுவும் ஜெயலலிதா அக்கா சொல்லித்தான் செய்தேன். இதற்கும் அரசியல் பிரமுகர்கள்தான் காரணம்.

அரசியல் பிரமுகரும், பத்திரிகையாளருமான சோ மற்றும் அவருக்கு நெருக்கமான சில அதிகாரிகளின் எண்ணங்களை பற்றி அறிந்து கொள்வதற்காகவே அப்படி ஒரு நாடகத்தை நானும், ஜெயலலிதா அக்காவும் நடத்தினோம்.

2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியன்று போயஸ்கார்டன் வீட்டுக்குள் என்ன நடந்தது? ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு ஏன் அழைத்துச் செல்லப்பட்டார் என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, சசிகலா கூறியதாவது –

செப்டம்பர் 22ம் தேதி அன்று இரவு நாங்கள் நன்றாக தான் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக எழுந்த அக்கா, திடீரென மயங்கி என் மேல் விழுந்தார். உடனே நான் பதறிப்போனேன்.ஒரு கையால் அக்காவை பிடித்துக் கொண்டேன்.

மருத்துவர்களையும், பாதுகாவலர்களையும் அழைத்து கத்தினேன். அவர்கள் ஓடி வந்தார்கள். உடனே, அவர்களின் உதவியுடன் அக்காவை மருத்துவமனையில் அனுமதித்தேன்.

ஜெயலலிதா அக்கா மருத்துவமனையில் நன்றாகத்தான் இருந்தார். டிசம்பர் 4ம் தேதி அவர் தயிர் சாதம் கொடுப்பது நிறுத்தப்பட்டது. இரண்டு பன் – காபி அவருக்கு மருத்துவர்கள் கொடுத்தனர். இன்னும் கொஞ்சம் காபி ஸ்ட்ராங்காக வேண்டும் என்று கேட்டார். நானே அக்காவிற்கு என் கையால் காபி போட்டு கொடுத்தேன்.

 

டிசம்பர் 19ம் தேதி அன்று கூட அக்காவை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடலாம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அக்கா கொடநாடு சென்று ஓய்வு எடுக்கப்போகிறேன் என்று மருத்துவரிடம் சொன்னார். ஆனால் நான், அக்காவிடம் முதலில் நாம் வீட்டிற்கு செல்லலாம். அதன் பின்னர், கொட நாடு செல்லலாம் என்று கூறினேன். அக்காவும், சரின்னு சொன்னார்.

ஆனால், டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென அக்கா கீழே விழுந்தார். நான்… அக்கா… அக்கா.. கத்தி கத்தினேன். ஓடிச் சென்று அவரை தூக்கினேன். அப்போது அங்கிருந்த டாக்டர் ஓடி வந்தார்கள். நான் அக்காவை தூக்கி பிடித்தேன். மருத்துவர் அக்காவின் கண்களை திறக்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை . உடனே அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவர்கள் எத்தனையோ சிகிச்சை அளித்தார்கள். ஆனால், எந்த பிரயோசனமில்லாமல் போயிடுச்சு. கடவுளிடம் வேண்டினேன். ஆனால், கடைசியில் எங்கள் வேண்டுதல் எதுவும் அவரை காப்பாற்றவில்லை. என்னை விட்டு என் அக்கா பிரிந்துவிடுவார் என்று நான் கனவிலும் நினைவிக்கவில்லை. ஒரு நாளும் நினைத்துப் பார்த்தது இல்லை’ என்று கண் கலங்க உருக்கமாக கூறினார்.

கருத்துகள் இல்லை: