வெள்ளி, 16 ஜூலை, 2021

ஆப்கானில் தாலிபான் காட்டுமிராண்டி ஆட்சி ஆரம்பம்.. பெண்கள் கடைக்கு போக, ஆண்கள் ஷேவ் செய்ய தடை.. ஷரியா சட்டமே இனி ...

Veerakumar  -  Oneindia Tamil News: காபூல்: இரண்டு தசாப்த கால யுத்தத்தைத் தொடர்ந்து,
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்ளாக அமெரிக்க படைகள் மொத்தமாக ஆப்கானிஸ்தானிலிருந்து,  வெளியேற தயாராகி வரும் நிலையில்,
தாலிபான்கள் நாடு முழுவதும் பல பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்துள்ளனர்.
ஈரான், பாகிஸ்தான் என பல நாட்டு எல்லைகளிலுள்ள முக்கிய பிராந்தியங்கள் அடுத்தடுத்து தாலிபான்கள் வசம் வீழ்ந்து கொண்டு இருக்கின்றன.
தாலிபான்கள் ஆப்கானிய அரசை மீண்டும் கைப்பற்றி இப்போதுள்ள அரசை தூக்கியெறிவார்கள் என்ற கவலை அங்கு ஏற்பட்டுள்ளது.
அப்படி தாலிபான்களில் எழுச்சி ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்குச் சென்றால், ஆப்கானியர்களிடையே, மீண்டும் பழைய கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தாலிபான்கள் அமல்படுத்துவார்கள் என்பது உறுதி என்கிறார்கள்.
உதாரணத்திற்கு, அண்மையில் வடக்கு ஆப்கானிஸ்தானில் ஒரு மாவட்டம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து,
தாலிபான்கள் தங்களது முதல் உத்தரவுகளை மாவட்டத்தின் இஸ்லாமிய இமாமுக்கு கடிதம் வடிவில் வெளியிட்டனர்.
அந்தக் கடிதத்தில் பெண்கள், தங்கள் வீட்டு ஆண்கள் துணையில்லாமல், தனியாக பஜார் செல்ல கூடாது என்றும், 

ஆண்கள் தாடியை ஷேவ் செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. புகைபிடிக்க அனுமதி கிடையாது என்றும் விதிகளை மீறும் எவரும் "தீவிரமாக கையாளப்படுவார்கள்" என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



கடந்த ஜூன் மாதத்தில், பஞ்ச் ஆற்றின் குறுக்கே, அமெரிக்க நிதியுதவியுடன், கட்டப்பட்ட பாலத்தையே பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானை தஜிகிஸ்தானுடன் இணைத்த வடக்கு ஷிர்கான் பந்தரை தாலிபான்கள் கைப்பற்றினர். தங்கள் ஆளுகைக்கு உள்ளே அந்த பகுதி வந்ததும், அங்குள்ள பெண்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என்று கட்டளையிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தாலிபான் என்ற சொல்லுக்கு பாஷ்டோ மொழியில் ‘மாணவர்கள்' என்று பொருள். 1990 களின் முற்பகுதியில் சோவியத் ரஷ்யா படைகளை விலக்கிக் கொண்ட பிறகு, இந்த குழு பெரிய அளவுக்கு உருவெடுத்தது. அவர்களுக்கு, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ரகசியமாக ஆதரவளித்தன. இந்த இயக்கம் இஸ்லாமின் சன்னி மார்க்கத்தை முன்னெடுக்கிறது. அதுவும் கடுமையாக முன்னெடுக்கிறது. இஸ்லாமிய ஷரியத் சட்டங்களை அமலாக்குவோம் என்பது இவர்கள் வாக்குறுதியாக இருந்தது.

சோவியத் ரஷ்ய படைகள் திரும்ப போன பிறகு (1992-1996) தங்களின் போட்டியாளரான முஜாஹிதீன் குழுக்களுக்கு இடையே நான்கு ஆண்டுகாலம் உள்நாட்டு யுத்தத்தில் தாலிபான்கள் ஈடுபட்டனர். அந்த காலகட்டத்தில் நாடு முழுக்க பரவலான ஆதரவைப் பெற்றது தாலிபான் அமைப்பு. தென்மேற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபான்கள் தங்கள் செல்வாக்கை விரைவாக விரிவுபடுத்தினர்.

1994ம் ஆண்டு, நவம்பர் மாதம், அவர்கள் தெற்கு நகரமான காந்தஹாரைக் கைப்பற்றினர். 1995 செப்டம்பரில், ஈரானின் எல்லையிலுள்ள ஹெராத் மாகாணம் கைப்பற்றப்பட்டது. சரியாக ஒரு வருடம் கழித்து, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலைக் கைப்பற்றி, அப்போதைய ஆப்கானிஸ்தான் அதிபர் புர்ஹானுதீன் ரப்பானியின் ஆட்சியைக் கவிழ்த்தனர். சோவியத் ரஷ்யா ஆக்கிரமிப்பை எதிர்த்த ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களின் நிறுவனர்களில் ஒருவர் புர்ஹானுதீன் ரப்பானி என்பது குறிப்பிடத்தக்கது.

1996ல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை, "இஸ்லாமிய எமிரேட்" என்று அறிவித்தனர். 1998 வாக்கில், ஆப்கானிஸ்தானில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். சோவியத் வெளியேறிய பிறகு, முஜாஹிதீன்களின் சண்டையால் ஆப்கானியர்கள் சோர்வடைந்தனர். இதன் விளைவாக, அவர்கள் தலிபான்களை வரவேற்றனர். ஊழலை வெற்றிகரமாக களையெடுத்து, சட்டவிரோதத்தைத் தடுத்தபோது இந்தக் குழு முக்கியத்துவம் பெற்றது.

தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டை பலப்படுத்திய பிறகு கடுமையான நீதி பரிபாலனத்தை நடைமுறைப்படுத்தினர். கொலைகாரர்கள் மற்றும் விபச்சாரம் செய்வோர் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டனர். திருட்டு குற்றங்களுக்காக, கை கால்கள் அகற்றப்பட்டன. ஆண்கள் தாடி வளர்ப்பது கட்டாயமாக்கப்பட்டது, பெண்கள் தலை முதல் கால் வரை உடல் பாகங்களை மூடும் வகையில் புர்கா அணிய உத்தரவிடப்பட்டது. பெண்களுக்கும் வேலை செய்யும் உரிமை மறுக்கப்பட்டது.

ஆண்களுக்கு சற்றே அதிக சுதந்திரம் இருந்தபோதிலும், அவர்கள் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளவும், பாரம்பரிய ஆடைகளை மட்டுமே அணியவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும், தலிபான்கள் இசையை ரசிக்க கூடாது என உத்தரவிட்டனர். தொலைக்காட்சி மற்றும் சினிமாவை தடைசெய்ததுடன், 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளின் கல்வியைத் தடைசெய்தனர்.

பல்வேறு கலாச்சார மற்றும் மனித உரிமை மீறல்கள் அவர்களால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு மோசமான உதாரணம் 2001 ல் மத்திய ஆப்கானிஸ்தானில் பமியன் புத்தர் சிலைகளை தலிபான்கள் அழித்தது. அப்போது உலகம் முழுவதும் இருந்து தாலிபான்களுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன.
தலிபான் ஆட்சி 2001 ல் அமெரிக்கத் தலைமையிலான படைகளால் ஆதரவுக்காக அகற்றப்பட்டது. ஒரு புதிய ஆப்கானிய அரசாங்கம் உருவானது. 1996 முதல் 2001 வரை ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி இருந்தது. தாலிபான்கள் மீண்டும் ஆப்கனை கைப் பற்றினால், பழைய மாதிரி சட்டங்கள் மீண்டும் அங்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: