சனி, 17 ஜூலை, 2021

ம.பி.யில் குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த மக்கள் - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

 மாலைமலர் : கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
ம.பி.யில் குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த மக்கள் - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
போபால்:  மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்தக் குழந்தையை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்தனர்.
அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்தது. இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.


உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. முதல் கட்டமாக 2 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், கிணற்றில் இருந்து 19 பேர் காயங்களுடன்  மீட்கப்பட்டுள்ளனர். 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.

மேலும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும், உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை: