ஞாயிறு, 11 ஜூலை, 2021

ஈழ ஏதிலியர்களின் உரிமைகளுக்காக யார் பேசுவது? அவர்களின் குரல் கேட்கப்படுவதில்லை ?

ந. சரவணன்  : ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் (ORGANIZATION FOR EZHAM REFUGEES REHABILITATION - OFERR) எனும் அமைப்பு தமிழக வாழ் இலங்கை  அகதி மக்களுக்கு செய்த பணிகள் அளப்பறியது.
பல்வேறு பன்னாட்டு தொண்டு நிறுவனகளுடன் இணைந்து மருத்துவம், சுகாதாரம், கல்வி போன்ற அடைப்படை தேவைகளை  மிகுந்த அக்கரையோடு  கணிவுடன் நிவர்த்தி செய்தமை பாராட்டுக்குறியது.ஆனால்.....
தமிழக வாழ் இலங்கை அகதி மக்களின்  சார்பாக ஒரு  தலைமைக்கான  எந்த ஒரு தேர்தலும் நடக்கவில்லை, யாரும் தலைமையேற்கவுமில்லை,
எந்த ஒரு சூழ் நிலையிலும் அகதி மக்கள் ஒன்றிணைந்து, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் எனும்  நிறுவனம் எங்களது பிரதி நிதியாக இருந்து எங்கள் சார்பாக எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யலாம் எனவோ, தேவைகளினடைப்படைகளில்  எங்களுக்காக மற்றவர்களிடம் எங்கள் அனுமதியின்றி இந்நிறுவனம்  வாக்குறுதிகளை வழங்கலாம் என்றோ,
நாங்கள் இங்கு அகதியாகவே இருப்பது, அல்லது நாங்கள் தாயகம் திரும்புவது தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்பதுப போன்றோ,
எந்தவித உத்திரவாதத்தையும் யாரும் வழங்கி விட வில்லை.


ஆனால் அகதி மக்களுக்காக தொண்டு செய்யும் ஒரே காரணத்தின்பொருட்டோ, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழகம் எனும் பெயரின் பொருட்டோ, அல்லது ஈழத்தின் தந்தை திரு.செல்வ நாயகம் அவர்களின் பின் புலத்தின் பொருட்டோ   அல்லது தங்களுக்கு சாதகமான கருத்துகளை ஏற்றுகொள்ளும் வெளிப்பதிவில் முகாம் சூழல் அல்லாத இடத்தில் வசிக்கும் நபர்களை,
பல்வேறு சலுகைகளுடன்,களப்பணியாளர்களை விடவும் பன்மடங்கு அதிக ஊதியம் (ஊக்கத்தொகை ) வழங்கி முக்கிய பொறுப்புகளில் அமர்த்திக்கொண்டு ,
மாற்று கருத்தாளர்களுக்கு இடமளிக்காமல் செயற்படும் காரணத்தின் பொருட்டோ  
தமிழக வாழ் இலங்கை அகதிகளின்  பிரதிநிதியாக தம்மை தாமே முன்னிறுத்தி அகதி மக்கள் சார்பாக ஊடகங்களுக்கும், இந்திய,தமிழக அரசுகளுக்கும் கருத்து தெரிவிப்பதை , அகதி மக்கள் யாரும் விரும்ப வில்லை.

மேலும் அரசும் சரி,ஊடகங்களும் சரி அகதிகள் பிரச்சினை என்றால் இந்த நிறுவனத்தையே அனுகின்றனர்.இவர்கள் கூறும் கருத்துக்களே ஒட்டு மொத்த அகதிகளின் கருத்தாக வெளியிடுகின்றனர்.
அவர்கள் கூறும் கருத்துக்கள் அகதி மக்களின் கருத்துக்கள்தான் என்பதை எதனடிப்படையில் முடிவு செய்கிறார்கள் என்பதுவும் தெரியவில்லை.
மேலும் தங்கள் நிறுவனத்தில் களப்பணியாளர்களாக பணியாற்றுபவர்களின் மூலமே கருத்து சேகரிக்கின்றனர்,
கூட்டங்களுக்கும்,கலந்துறையாடல்களுக்கும் முகாம் அளவில் தங்கள் நிறுவனத்துடன் இனக்கம் காட்டதவர்களை, அழைப்பதில்லை,
தங்கள் நிறுவனத்தின் மூலம்  யாரெல்லாம் சலுகைகளை பெறுகின்றனரோ அவர்களையும்,ஊழியர்களையும்  அழைத்து தாங்கள் கூறும் கருத்துகளை முன்மொழிய வைத்து , அதையே தீர்மானமாக நிறைவேற்றி பின் ஒட்டுமொத்த அகதிகளின் கருத்தும் இதுதான் என ஊடகங்களுக்கும், அரசுகளுக்கு தெரிவிக்கின்றனர்.

பொதுப்படையாக, வெளிப்படையாக எந்த ஒரு கருத்து கணிப்பும் நடைப்பெறுவதில்லை,
இதில் ஒட்டு மொத்த அகதி மக்களின் எதிர்காலமும் இருக்கிறது,
இதை எப்படி சரிசெய்வது, எப்படி அனுகுவது,யார் மூலம் இதற்கு தீர்வு காண்பது, அவர்கள் கருத்து கூறக்கூடாது என்றால் வேறு யார் அகதி மக்களின் சார்பாக அகதி மக்களின் தேவைகளை,வேண்டுகோள்களை அரசுக்கோ , ஊடகங்களுக்கோ தெரிவிப்பது என்பதற்கு பதில் இல்லாததாலேயே மௌனம் காக்கவேண்டியிருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , பா.ஜ.க வின் திரு.இல கனேசன் அவர்கள் இலங்கை அகதிகள் தாயகம் திருபுவது தொடர்பாக இந்நிறுவனத்திற்கே சென்று  விவாதிதிருக்கிறார்,
இலங்கை செல்வதற்கு 4000 நபர்கள் செல்ல ஆயத்தமாக இருப்பதாகவும், அவர்களுக்காக கப்பல் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்து சென்றிருக்கிறார்.
இது எந்த ஊடகத்திலும் செய்தியாகவில்லை,
அல்லது இப்படியானதொரு நிகழ்வு நடக்க இருப்பதாக அகதி மக்களுக்கு தெரிவிக்கபடவில்லை,

ஆனால் அந்நிறுவனதின் மேல்மட்ட உறுப்பினர்களனைவரும் மண்டல வாரியாக கலந்து கொண்டனர்.107 முகாம்களில் வசிக்கும் சுமார் 70000 அகதிகளின் எதிர்காலத்தை ஒரு தொண்டு நிறுவனமும், அதன் உறுப்பினர்களுமே முடிவு செய்வார்களெனில் இதில் பாதிக்கப்டுவது யார் ?,அப்படி விடுக்கப்பட்ட கோரிக்கை
தற்போது இது செயல்வடிவம் பெறுகிறது
 ஊழியர்களனைவரும் அகதிகள் என்றும்,அவர்களை கொண்டே இந்நிறுவனத்தினை நடத்துகிறோம், எனவே அவர்கள் கருத்துகளே அகதி மக்களின் கருத்து என தங்கள் தரப்பு வாதத்தை முன் வைப்பார்களாயின்,
படித்துவிட்டு ஆள் கணக்கெடுப்பிற்கு முகங்கொடுக்க இயலாமல்,தாங்கள் படித்ததற்கேற்ப வேலை கிடைக்காமல் ,
எவ்வித பணி உத்தரவாதமில்லாத ,ஊதியமாக மாதம் 10000 க்கும் குறைவாக பெறும் களப்பணி ஊழியர்களால் (சாதகமாகன,உயர் மட்ட  பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும், சலுகைகளும் மலைப்பிற்குறியது ) நிறுவனத்திற்கு விசுவாசமாக , சாதகமான கருத்துகளை கூற முடியுமே தவிர,

மக்களின் மன நிலைக்கு ஏற்ற வாறு கருத்துகளை முன் வைத்துவிட இயலாது.அப்படி முன் வைக்க முற்பட்டால் ,எவ்வித அறிவிப்புமின்றி, இழப்பீடும்மின்றி அன்றிலிருந்தே பணி நீக்கம் செய்யப்படலாம்.நடந்திருக்கின்றன இம்மாதிரியான சூழலில் ...... கூறப்படும் கருத்துகளின் நம்பகதன்மை எம்மதிரியிருக்கும் என்பதை நாமே யூகிக்கலாம்.
இலங்கையில் தற்போது போர் முடிந்த சூழலில், இழந்த தங்களது நிலங்ளை மீட்டுதரகோரி போராட்டம்  நடைப்பெறுகிறது,
தங்கள் சொந்த நிலங்களில் சென்று வாழ ஏற்பாடு செய்து தர கோரிக்கை வைக்கப்படுகிறது.
படித்தவர்கள் வேலை வாய்ப்பை உறுவாக்கிதரக்கோரி போராடுகின்றனர்,புணரமைப்பு பணி  இன்னுமும் முழுமையடையவில்லையென்கின்றனர்,
வீடிழந்தவர்களுக்கு இந்திய இலங்கை கூடு ஒப்பந்ததில் கட்டி கொடுக்கப்படும் வீடுகள் இன்னும் முழுமையாக கையளிக்கப்படவில்லை,இலங்கையில் வீடு, காணி இருப்பவர்களே வாழ்வாதாரத்திற்கு  மிகவும் சிரமப் படுகின்றனர் என உறவினர்கள் மூலம் அறிய முடிகிறது.
இப்படியான சூழலில் தாயகம் திரும்பும் அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாமல் கப்பல் ஏற்பாடு செய்ய சொல்வதின் பின் புலம் நம்பிக்கை தருவதாகவில்லை.
தாயகம் திரும்ப வேண்டும் என்பதி யாருக்கும் மாற்று கருத்தில்லை,
ஆனால் அகதிகள் விடயத்தில் , சர்வதேச செஞ்சுலுவை சங்கம், ஐ.நா அகதிகள் சபை, இந்திய இலங்கை அரசுகள் மூலம் ஒரு , தற்காலிக வாழ்வாதார நிவாரணம்,

இதுவரை சிறுக சிறுக சேர்த்து வைத்திருக்கும் உடைமகளை கொண்டு செல்ல ஏற்பாடு, கல்வியை அப்படியே தொடர்வதற்கு ஏற்ற உடன்படிக்கை, வேலை வாய்ப்பில் பகுபாடு இல்லாமை,

இலங்கையில் தேவைப்படும் ஆவணங்களை கொண்டு செல்வதற்கான வழிவகை,இங்கு பயன்படுத்தும் இரு சக்கர வாகனகளுக்கு சிறப்பு அனுமதி, தொழில் பயிற்சி, தொழில் தொடங்க ஊக்கத்தொகை வழங்குதல்,
28 வருடங்களாக இங்கேயே வாழ்ந்து பழகிய, தனது சொந்த நாட்டில் காணி நிலம், உதவக்கூடிய அளவிலான சொந்தங்கள் என எதுவுமற்று, தாயகம் திரும்ப  விரும்பாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு (இந்திய குடியுரிமை) ,
என எம்முன் இருக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பத்தத்தை ஏற்படுத்தி செல்வதே அகதிகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்,

அதை விடுத்து விரும்புவர்களை உதிரியாக அனுப்பி வத்துவிட்டு அங்கு சென்று என்ன பாடுபட்டாலும்  கவலையில்லை எனும் நிலையில் அகதிகள் பிரச்சினையை அனுக கூடாது என்பதே தமிழகத்தில் வாழும் ஒட்டு மொத்த அகதிகளின் விருப்பமாக இருக்கிறது...

சில மாதங்களுக்கு முகாம்களுக்கு அவசர அவசரமாக பல்வேறு முகாம்களுக்கு விஜயம் செய்த மத்திய மாநில அரசு அதிகாரிகளிடம் மக்கள் சார்பாக தாயகம் திரும்புவது தொடர்பான கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது,
அதிலிருந்த கோரிக்கைகளும், தற்போது ஏற்பாடு செய்யப்படும் தாயகம் திரும்புதல் தொடர்பான அரசின் முயற்சிக்கும் இடையே மிகுந்த இடைவெளி இருப்பதை உணர முடிகிறது.

மத்திய மாநில அரசுகள் அகதிகள் மத்தியில் வெளிப்படையான கருத்துக்கேட்பை நடத்த வேண்டும், ஏற்கனவே இருக்கும் நீதிமன்ற தீர்ப்பான '' தமிழகத்தில் உள்ள அகதிகள் விருப்பமின்றி அவர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப கூடாது '' என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதுவே தற்போதைய எதிர்பாரப்பாய் இருக்கிறதேயொழிய, அவசரகதியான கப்பல் ஏற்பாடு அல்ல.

கருத்துகள் இல்லை: