செவ்வாய், 13 ஜூலை, 2021

நடிகர் விஜய்க்கு நீதிமன்ற அபராதம்! ! ரீல் ஹீரோவாக இருக்காமல் ரியல் ஹீரோவாக இருங்கள்! நீதிமன்றம் அறிவுரை!

ரியல் ஹீரோவாக இருங்கள் : விஜய்க்கு நீதிமன்றம் அறிவுரை!

மின்னம்பலம் : நடிகர் விஜய் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் ரஜினிகாந்த்துக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருப்பவர். நடிகர் விஜய் இயல்பாகவே புதிய மாடல் கார்களை வாங்கி குவிப்பது அவரது வழக்கம்.
இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பதைக் கௌரவமாகக் கருதுகிற மனோநிலை வசதி படைத்தவர்கள் மத்தியில் நிலவுகிறது. அந்த காரை ஓட்டி செல்வதற்கான தரம் மிக்க சாலைகள் இந்தியாவில் இருக்கிறதா என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பது கிடையாது. வெளிநாடுகளுக்கு கார்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும் நிலையில் 2018ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார்.



அதற்கான இறக்குமதி மற்றும் பிற வரிகள் அனைத்தும் செலுத்திய பின் வண்டி எண் பதிவுக்குச் செல்லும் போது, வருமான வரித்துறை ஆணையரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று சொல்கிறார் வடசென்னை ஆர் டி ஓ. அப்போது நுழைவு வரி கட்ட வேண்டும் என்று ஒரு பக்கம் சொல்ல, இன்னொரு பக்கமோ அது தேவையில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த குழப்பத்தில் நுழைவு வரி கட்டத் தேவையில்லை என நீதிமன்றம் சென்றிருக்கிறார் விஜய்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று (ஜூலை 13( விசாரணைக்கு வந்தது. இந்த மனுவைச் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

மேலும் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த ஐகோர்ட் அபராத தொகையை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க உத்தரவிட்டது.

நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது.வரி என்பது நன்கொடையல்ல; நாட்டிற்குக் குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு.

சமூக நீதிக்குப் பாடுபடுவதாகப் பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனால் வழக்கம் போல் அஜித்குமார் ரசிகர்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாகவும் விஜய்க்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் விஜய் ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாகப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இராமானுஜம்

கருத்துகள் இல்லை: