வியாழன், 15 ஜூலை, 2021

நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது: துரைமுருகன் அறிவிப்பு

 மாலைமலர் :r :சென்னை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்படவேண்டும்?
என்பது குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 16-ந்தேதி (நாளை) மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் வளாக கூட்ட அரங்கில் நடைபெறும்.
அப்போது தி.மு.க. மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவது, 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்துவது, மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட அம்சங்களையும், தமிழக நலன் சார்ந்த விவகாரங்களை வலியுறுத்துவதிலும் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: