வெள்ளி, 2 ஏப்ரல், 2021

மம்தாவின் நந்திகிராம் தொகுதியில் பதற்றம் மக்களை வாக்களிக்க விடாமல் பாஜக குண்டர்கள் அடாவடி .. ஆளுநரை தொடர்பு கொண்ட மம்தா

தினகரன் : மேற்கு வங்கத்தில் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும், இக்கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்த சுவேந்து அதிகாரியும் நந்திகிராம் தொகுதியில் மோதுகின்றனர். இதனால், இந்த தொகுதி நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தொகுதியிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இங்கு நேற்று காலை வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்தே பதற்றம் நிலவியது. வாக்குப் பதிவு மையங்களில் திரிணாமுல் ஏஜென்ட்டுக்களை அனுமதிக்கவில்லை என பல புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து, நந்திகிராம் தொகுதியில் தங்கியிருந்த மம்தா பானர்ஜி, தனது படையுடன் பல்வேறு கிராம வாக்குப்பதிவு மையங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். போயல் பகுதிக்கு மம்தா சென்றபோது பாஜ ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர். பல இடங்களில் இதுபோல் மோதல் நிலவியது.



ஒரு கட்டத்தில் ஆளுநர் தன்காரை செல்போனில் தொடர்பு கொண்ட மம்தா, ‘வாக்குபதிவு மையங்களில் திரிணாமுல் தொண்டர்களை வாக்களிக்க விடாமல், பாஜ தொண்டர்கள் தடுக்கின்றனர்,’ என்று புகார் தெரிவித்தார். பின்னர், மம்தா அளித்த பேட்டியில், ‘‘நந்திகிராமல் நடக்கும் முறைகேடுகள் குறித்து காலையில் இருந்து 63 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது வரையில் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம். பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குண்டர்கள் அழைத்து வரப்பட்டு கலவரம் ஏற்படுத்தப்படுகிறது,” என்றார். பாஜ வேட்பாளர் சுவேந்து அதிகாரியும் நேற்று தொகுதி முழுவதும் சுற்றி வந்து, வாக்குப்பதிவை பார்வையிட்டார். அப்போது, அவர்களின் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. திரிணாமுல் தொண்டர்கள் அவரை வழிமறித்து கோஷமிட்டனர்.

* இரண்டு பேர் கொலை
மேற்கு வங்கத்தில் மெதினிப்பூர் மாவட்டம், பஸ்சிம் பகுதியில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த உத்தம் தோலய் (48) என்பவரை 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் கூர்மையான ஆயுதங்களால் நேற்று தாக்கியது. இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதேபோல், பேகுடியா பகதியை சேர்ந்த உதய் துபே என்பவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். பாஜ வேட்பாளர் சுவேந்து அதிகாரிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டதால் திரிணாமுல் தொண்டர்கள் அவரை கொலை செய்து விட்டதாக பாஜ குற்றம்சாட்டியது

கருத்துகள் இல்லை: