திங்கள், 29 மார்ச், 2021

கந்தன் கருணை படுகொலைகள் 34 வது ஆண்டு நினைவு அஞ்சலி! 63 சகோதர போராளிகள் புலிகளால் படுகொலை! வெலிக்கடை படுகொலைகளை விட கொடூரமானது

Sugan Paris : ஆரியகுளத்தடி மதகின்கீழ் கொஞ்சம் தண்ணீர் *** கந்தன் கருணை இல்லம் சூழ்ந்து 63 போராளிகள் புலிகளால் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டபோது  சில போராளிகள் தப்பியோடும் வழியில் ஆரியகுளத்தடி மதகிற்குள் இறங்கி ஒளித்தபோது மதகினுள் ஒளித்ததைக் கண்ட கொலைஞர்கள் சிறிது நேரம் அம்மதகினுள் தீருமட்டும் சுட்டு இறுதியில் கிறெனைட்டையும் எறிந்துவிட்டுப் போனார்கள்.

Eela Mani   : கந்தன் கருணைப் படுகொலைகள் நினைவு தினம் - 29.3.1987
கந்தன் கருணை படுகொலை நினைவுத் தகவல்கள்!
கடந்த கால வரலாற்றை ஆவணப்படுத்துவது மிக மிக அவசியமானது. அதைவிட அவசியமானது கடந்த கால தவறான நடைமுறைகளை ஆவணப் படுத்துவதுமாகும்.
புதிய தலைமுறைக்கும், எதிர்கால தலைமைகளுக்கும், இவை பயனுள்ளதாக அமையும்.
கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றால் தான் சரியான எதிர்காலத்தை அமைக்க முடியும்.
கடந்த கால ஆயுதக்கலாச்சார சூழல், கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட,


இருண்ட காலமாக இருந்தது. மக்கள் நடந்த உண்மைகளை அறிய முடியாத, பேச முடியாத,பயங்கரமான  நிலைமைகளுக்குத்  தள்ளப்பட்டிருந்தார்கள்.
இதனால் பல ஆவணங்கள் முழுமைப்படுத்தப்படாமலும், சிறு தவறுகள் திருத்தப்படாமலும் இருந்து வந்துள்ளன.
இப்போதுள்ள தகவல் தொழில் நுட்ப வசதிகள், சாதாரண மக்களும் கருத்துக்களையும், ஆவணங்களையும் பகிர கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
எனவே இந்த சாதகமான சூழலை பயன் படுத்தி ஆவணங்களை முழுமைப் படுத்த நாம் முன்வரவேண்டும். (முகப்புத்தகத்தில் கருத்திடுபவர்கள் தீர விசாரித்த பின் பொறுப்புணர்வுடன் கருத்திட முன்வரவேண்டும்)
அளவுகளில் வேறு பட்டாலும், சகல ஆயுதப்போராட்ட இயக்கங்களும் தவறிழைத்திருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே உண்மைகளை கண்டறிவதும், பொறுப்புக்கூறலும் எல்லோர் பக்கத்திலும் நேர்மையாக நடைபெற வேண்டும்.

கந்தன் கருணை படுகொலை என்பது, விடுதலைப் போராட்டத்தின் பெயரால் நடத்தப்பட்ட, இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலை குனியவேண்டிய, ஓர் மனித உரிமை மீறலாகும்.
கந்தன் கருணை படுகொலை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர் மட்டத் தலைவர்களில் ஒருவனான அருணாவின் (கோணேசன்/செல்வக்குமார்) தலைமையில் நடாத்தப்பட்டது.

அருணா, விடுதலைப் புலிகளின், ஆரம்பகால மூத்த உறுப்பினர், பிரபாகரனால் பயிற்றுவிக்கப்பட்டவன், கிட்டுவுக்கு பயிற்சியளித்தவன்.
தீர விசாரித்து தண்டனை வழங்குவது, ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதியாவது தண் டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது ஓர் நாகரீக சமூகத்தின் நடைமுறை.
அதிலும் மரண தண்டனை என்பது பலமுறை தீர விசாரித்து கொடுக்கப்பட வேண்டியது.
இவையெல்லாம் இங்கு மீறப்பட்டதுமல்லாமல், முழுப்பூசணிக் காயை சோற்றுக்குள் மறைப்பதைப் போல் கந்தன் கருணைப் படுகொலைகளை மறைக்க புலிகளின் தலைமை முயற்ச்சியும் செய்திருக்கின்றது.

18 சிறைக் கைதிகள் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், என பத்திரிகை அறிக்கை வெளியிட்டார்கள்.
இந்த அறிக்கையை புலிகளின் பேச்சாளர் அன்டன் பாலசிங்கமே பத்திரிகைகளுக்கு தெரிவித்தார்.
இந்தப் பொய்ச் செய்தியை அன்று யாழ்பணத்தில். வெளிவந்துகொண்டிருந்த முரசொலி (ஆசிரியர் திருச்செல்வம்) போன்ற பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக பிரசுரித்து உண்மைகளை மூடி மறைக்க, முட்டுக் கொடுத்தன.

எமது சமூகத்தின் பின்னடைவுகளிற்கு இது போன்ற முதுகெலும்பற்ற பத்திரிகைகளின் செயற்பாடுகளும் ஓர் காரணமென்றால் அது மிகையாகாது  
1987 தை மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர், பாரதத்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார். கிட்டுவை மன்னார் தளபதியாக்கி, பொன்னம்மானை யாழ்ப்பாண தளபதியாக்க முடிவும் செய்திருந்தார். நாவற்குழி பவுசர் வெடிப்பு சம்பவத்தினால் நிலைமைகள் அங்கு மாற்றமடைந்தன.

புலிகளின் தலைவர் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்த வேளையிலேயே கந்தன் கருணை சம்பவம் நடைபெற்றிருக்கின்றது.
இந்த கொலை தவறான ஓர் முன்னுதாரணம் என அவரோ, அல்லது புலிகளோ   கருத்தியிருந்திருந்தால், அன்றே மக்கள் மத்தியில் பொது மன்னிப்பு கோரியிருந்திருக்க வேண்டும்.
மாறாக பல சாட்டுப் போக்குகள் கூறி புலிகளின் இந்த படுகொலைகளை நியாயப்படுத்த இன்று வரை பலர் முயற்சிக்கின்றனர்.
அருணாவை பதவியிறக்கம் செய்தோம், சம்மந்தப்பட்டவர்களை பதவியிறக்கம் செய்தோம் எனக் கூறுகின்றனர்.
விடுதலை போராடத்திற்கு தமது பிள்ளைகளை அனுப்பிய பெற்றார்களின்   மனது எப்படித் துடிக்கும், என நீங்கள் எண்ணிப்பார்திருக்க வேண்டாமா?
அருணாவை பதவியிறக்கம் செய்தோம், சம்மந்தப்பட்டவர்களை பதவியிறக்கம் செய்தோம் எனக் கூறுகின்றனர்.
விடுதலை போராடத்திற்கு தமது பிள்ளைகளை அனுப்பிய பெற்றார்களின் மனது எப்படித் துடிக்கும், என நீங்கள் எண்ணிப்பார்திருக்க வேண்டாமா?
குறைந்த பட்சம், தவறு நிகழ்ந்து விட்டது "மன்னித்து விடுங்கள்" என்றாவது நீங்கள் கேட்டிருந்திருக்கலாமல்லவா?
மாறாக வெந்த புண்ணில் வேல் பாச்சுவதுபோல் அவர்களின் அழும் உரிமையை கூட மறுத்து, பொது வெளியில் இதுபற்றி பேசக்கூடாது என அவர்களை எச்சரித்து,மிரட்டினீர்களல்லவா?

முன்னேறிய நாடுகளில் ஓர் அரசியல் திணைக்களத்தில் உள்ள ஒருவர் தவறு செய்துவிட்டால் அந்த திணைக்களத்தின் பொறுப்பான பதவியிலுள்ளவர், தார்மீக பொறுப்பேற்று பொறுப்பிலிருந்து விலகுவார், அல்லது விலகுமாறு நிர்பந்திக்கப்படுவார்.
ஆனால் எமது நாட்டிலோ, ஏதாவது நல்லது நடந்துவிட்டால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தலைவர், ஜூம் (ZOOM) இல் நெறிப்படுத்தினார், திட்டமிட்டார், ஆலோசனை கூறினார், என்பார்கள்.

ஏதாவது தவறு நடந்துவிட்டால், தலைவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் எனக்கூறி, கீழ் மட்டத்தின் தலையில் பழியை போட்டுவிடுவார்கள்.
இல்லை என்றால் அவர்களை கீழ்மட்டம் ஆக்கிவிடுவார்கள்.
உலகத் தரம் வாய்ந்த உளவுப் படை என்றார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய உறுப்பினர்களை கொண்ட தீப்பொறி என்ற சிறு குழு தான், கிட்டு மீதான குண்டெறிதலுக்கு (1987 மார்ச் மாதம் 29 ம் திகதி) காரணம் எனக் கண்டறிய தவறி, 60 பதிற்கும் மேற்பட்டோரை அநியாயமாக கொன்றார்கள்.

25 வருடத்திற்க்கு பின்னர் தீப்பொறி அமைப்பினர் தாமாக, இந்த உண்மையை சொல்லியிருக்காது விட்டிருந்திருந்தால், இந்த உண்மை ஒருபோதும் வெளிவந்திருக்க முடியாததாக இருந்திருக்கும்.

கந்தன் கருணை படுகொலை என்பது, விடுதலைப் போராட்டத்தின் பெயரால் நடத்தப்பட்ட, இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலை குனியவேண்டிய, ஓர் மனித உரிமை மீறலாகும்.

வெலிக்கடை படுகொலைகள், காடையர்களை தூண்டிவிட்டு நடாத்தப்பட்ட ஓர் சிறைப் படுகொலையாகும். வெலிக்கடை படுகொலைகளில் இறந்தவர்களை விட மேலதிகமான எண்ணிக்கையில் கந்தன் கருணை படுகொலைகளில் போராளிகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு ஆண்டும்,வெலிக்கடை சிறப்படுகொலைகளை கண்டிப்பதோடல்லாமல் நினைவுகூர்ந்தும் வரும் எம்மில் பலர், இந்த கந்தன் கருணைப் படுகொலைகளிற்கு கண்டனம் தெரிவிக்கவோ, நினைவு கூருவதிற்கோ ஏனோ பின்னிற்கின்றார்கள். கந்தன் கருணை படுகொலைகளை கண்ணடிப்பதற்கோ, நினைவுகூருவதற்கோ பின் நிற்கும் எவருக்கும், வெலிக்கடை படுகொலைகளை நினைவு கூருவதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று தான் கூறவேண்டும்.

கந்தன் கருணை படுகொலை நினைவுகளை மீண்டும் நினைவு படுத்தி, மக்களுக்காக போராடப் புறப்பட்டு, அநியாயமாக கொல்லப்பட்ட போராளிகளுக்கு, பொது மக்களுக்கும், ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி மரியாதை செலுத்துவோம்.
29 03 1987
கந்தன் கருணைப் படுகொலைகள் இடம்பெற்ற காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் புலிகளின் தளபதியாக விளங்கியவர் கிட்டு என்று அழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார்.

இவரது காதலி சிந்தியாவின் வீடு, யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவில் இருந்தது. ஒவ்வொரு நாள் மாலையிலும் கிட்டு தனது காதலியைச் சந்திப்பதற்கு சிந்தியாவின் இரண்டாம் குறுக்குத் தெரு வீட்டுக்குச் செல்வது வழக்கம்.
ஆயுதம் தரித்த மெய்ப் பாதுகாவலர்கள் சகிதமே கிட்டு வாகனத்தில் பயணிப்பார். 29.3.1987 அன்று, காதலியைச் சந்திக்கச் சென்ற கிட்டுவின் வாகனத்தின் மீது கிரனைட் வீசப்பட்டது. மயக்கமுற்ற நிலையில் கிட்டு யாழ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இருந்தாலும் அவர் உயிர் பிழைத்துக்கொண்டார்.

அப்போது புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பொன்றில் இருந்தவன் அருணா.
இந்தப் படுகொலையின் பிரதான சூத்திரதாரி இவன் தான்.
அருணா, விடுதலைப் புலிகளின், ஆரம்பகால மூத்த உறுப்பினர், பிரபாகரனால் பயிற்றுவிக்கப்பட்டவன், கிட்டுவுக்கு பயிற்சியளித்தவன்.
கிட்டு தாக்குதலுக்குள்ளாகி மயக்கமுற்று இருக்கும் செய்தி கேள்விப்பட்டதும் அவன் கொதித்தெழுந்தான். கல்லூரி வீதிப் புலிகள் இயக்கப் பணிமனைக்குள் புகுந்த அருணா, தனது மெய்ப்பாதுகாவலரின் கிரனைட் லோஞ்சர் பூட்டப்பட்ட M16னை வேண்டி Hip positionனைப் பயன்படுத்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது சரமாரியாகச் சுட்டான்.

நேரம் சுமார் இரவு எட்டு மணியைத் தாண்டியிருக்கும். அதே வேகத்துடன் கோவில் வீதி, சிவப்பிரகாசம் வீதியிலுள்ள (3) முகாம்களுக்கும் சென்று மாற்று இயக்கப் போராளிகளை சுட்டுக் கொன்றான்.

அரை மணித்தியாலத்தில் 63 பேர் வரை கொல்லப்பட்டார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்களே கிட்டு மீது தாக்குதல் நடத்தியிருக்க வேண்டுமென்பது அருணாவின் சந்தேகம். எனவே ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு சென்று அருணா சரமாரியாக சுட்டான்.

விடுதலைப் புலிகளின் மன்னர் மாவட்ட தளபதிகள் விக்டர், ராதா ஆகியோருக்கு மெய்ப்பாதுகாவலராகச் செயட்பட்டவர் தலைமன்னாரைச் சேர்ந்த ஜஸ்டின் (புலிகளின் மாவீரர் பட்டியலிலுள்ளவர்) இவரை எப்போதும் ஓர் ராக்கெட் லோஞ்சருடன் காணமுடியம். இவரின் ராக்கெட் லோஞ்சரை பயன்படுத்தி அருணா சுட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அருணா ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவன்.
இவனைப் படையினரின் பிடியிலிருந்து விடுவிப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் கிட்டு.
1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி இரு சிப்பாய்களை விடுவிப்பதற்காக இரு புலி இயக்க உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவன்தான் அருணா (கோணேசன்/செல்வக்குமார்).

விடுவிக்கப்பட்ட மற்றைய புலி உறுப்பினரின் இயக்கப் பெயர் காமினி. இந்தப் படுகொலை இடம்பெற்றுச் சரியாக நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் ஜூலை இறுதியில்,இலங்கையின் வடக்கு – கிழக்கில். இந்தியப் படை நிலை கொண்டது. அதே வருடம் ஒக்டோபர் பத்தாம் திகதி இந்தியப் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் மோதல் வெடித்தது.
இந்திய இராணுவத்துடனான சண்டையில் குருசோ வீதி , சுண்டுக்குளி , யாழ்ப்பாணத்தில் அருணா மதிலால் பாய்ந்து தப்ப முயன்றபோது இந்திய படை, இராணுவ சிப்பாய் ஒருவரால் கொல்லப்பட்டான்.

படையினர் கைது செய்யும் நிலை வரும்போது சயனைட் அடித்து மரணத்தை தழுவி இரகசியங்களை பாதுகாக்க வேண்டும் என்பது தலைமையின் கட்டளை, உயர் மட்ட தலைவர்களுக்கு இதில் ஏதும் விதி விலக்கு உண்டா??,
அருணாவுடன் படகில் சென்ற அனைவரும் சயனை அடிக்க இவர் மட்டும் பிடிபட்டு, பின்னர் இவரை கைதிகள் பரிமாற்றத்தில் விடுவித்தார்கள் .
சயனைட் அடிக்காத பல போராளிகள் தண்டிக்கப்படடார்கள் அல்லது இயக்கத்தில் இருந்து நீக்கப்படடார்கள்.அருணாவுக்கு ஏன் இந்தச் சலுகை ?

கந்தன் கருணைப் படுகொலை தாக்குதலின் போது தப்பியோட முனைந்த தடுப்புக்காவல் கைதிகள் சிலர், அந்த முகாமில் சென்றிக்கு நின்ற புலி இயக்க உறுப்பினர்களாலும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அக்காலகட்டத்தில் கிட்டுவின் விசுவாசியாக செயல்பட்டவன் சீவல் சத்தியா என அழைக்கப்பட்ட மானிப்பாய் சிவபரன்.

1980 களில் ஈழ மாணவர் பொது மன்றத்தின் GUES அரசியல் வகுப்புகளிற்கு சமூகமளித்தவன். உடனடியாக ஆயுத பயிற்சி வேண்டும், ஆயுதம் வேண்டும் என்று தனது ஆயுத மோகத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தான்.
மக்கள் மத்தியில் அரசியல் வேலைகள் செய்த, குறிப்பிட்ட ஓர் காலத்தின் பின்பு தான், ஆயுதப் பயிற்சிக்கு அனுப்ப முடியும் என அவனுக்கு பொறுப்பாளர்களால் கூறப்பட்டது பொறுமையிழந்த அவன் பின்னர் ரெலி என்ற ஒரு தமிழ் ஆயுதக் குழுவில் இணைந்து பணியாற்றினான். அந்த இயக்கம் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதையடுத்து. சந்தியா வெளிநாடொன்றிற்குச் சென்றிருந்தான். வெளிநாட்டில் இருக்கும்போதே புலிகள் இயக்கத்துடன் இவன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான்.

இலங்கைக்குத் திரும்பிய பின் யாழ்ப்பாணத்தில் புலிகளின் உளவுப் பிரிவில் இணைந்து செயற்பட்டான். நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருந்த சில முகாம்களுக்கும் அவனே பொறுப்பாளர். சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென அந்த முகாமுக்கு வந்த சத்தியா அரைகுறையாய் உயிரோடிருந்தவர்களைச் சுட்டுக் கொன்றான். பின்னர் அறைகளுக்குள் ஒளித்திருந்தவர்களையெல்லாம் தேடித் தேடி தனது பிஸ்டலால் சுட்டான்.
இந்திய இராணுவம் வட கிழக்கில் நிலை கொண்ட பின்னர், இந்தியாவிற்கு தப்பியோடிய சீவல் சத்தியா, தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றான். .
தப்பி வந்தவர்களின் சாட்சிங்களின் அடிப்படையில் இந்த படுகொலையில் அங்கு கடமையில் இருந்த பாலா அமுதன் போன்றவர்களும் AK, SMG பிஸ்டல் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி எஞ்சி இருந்தவர்களையும் குற்றுயிராயிருந்தவர்களையும் சுட்டிருக்கின்றார்கள்..

இவர்களுடன் இப்படுகொலையில் ராசா (நல்லூர்) சின்ன காந்தி (உரும்பிராய்) ஊத்தை ரவி (யாழ்ப்பாணம்) மற் றும் சில புலி உறுப்பினர்களுக்கும் சம்மந்தம் இருப்பதாக பேசப் படுகின்றது.
சடலங்கள் இரவோடிரவாக செம்மணி சுடலையிலும், நவாலி கல்லுண்டாய் சுடலையிலும் எரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது புதைக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

கந்தன் கருணை சம்பவத்திற்கு முன்னரும், பின்னரும்,ஒவ்வொரு நாளும் சிறு சிறு குழுவாக மாற்று இயக்க போராளிகள் கொல்லப்பட்டு வந்திருக்கின்றார்கள். சில பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றும் போது கைதிகள் தப்பியோடிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
கைதிகளை பராமரிப்பதில் பெரும் நெருக்கடிகளை புலிகள் சந்தித்துக்கொண்டிருந்தனர்.
மார்ச் மாதக் கடைசி வாரத்தில் கந்தன் கருணை படு கொலை முகாமில் பெரிய கிடங்கு ஒன்றை வெட்டுமாறு கைதிகளை பணித்திருக்கின்றார்கள். மல சல கூடம் கட்ட எனக் காரணம் கூறப்பட்டது, இதிலும் சில மர்மங்கள் இருந்திருக்குமா? என கேள்விகள் எழுப்பபடுகின்றன.

கந்தன் கருணை படுகொலையில் இருந்து சிலர் தப்பியிருக்கலாம் என சந்தேகித்த புலிகள் தடயங்களை அழிக்க இரவோடிரவாக கடுமையாக உழைத்தனர் , சுதுமலை வரதராஜசர்மா (புதைத்து வைத்த ,புலிகளின் பணத்துடன் இந்திய படைகளிடம் சரணடைந்தவர் ,தற்போது ஜெர்மனியில் வாழ்கின்றார் ) பாரத் (மானிப்பாய்) மதி (மல்லாகம் ) போன்றோர் தப்பிய போராளிகளை மீண்டும் கைது செய்ய வீடு வீடாக தேடுதல் நடத்தினர்.

கந்தன் கருணை படுகொலைகள் பற்றிய பல உண்மை சம்பவங்கள், பல வருடங்களாக முழுமையாக வெளிவர முடியாதவாறு ஆயுத அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமிருந்தன.
ஆரம்பத்தில் மனித உரிமைகளுக்கான பல்கலை கழக ஆசிரியர் சங்கத்தினர் ஓரளவுக்கு உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருந்தனர் .மறைந்த போராளி, தைரி (தைரியராசா நாகேஸ் அவர்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள சவளக்கடையை பிறப்பிடமாகக்கொண்டவர் ) உட்பட ஒன்றுக்கு மேற்பட்ட, மாற்று இயக்கப் போராளிகள் இப் படுகொலை சம்பவத்திலிருந்து தப்பித்திருந்தாலும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை இருந்தது.

இதனால் கந்தன் கருணை படுகொலைகளில் போராளி தைரி (11.08.1987 அன்று மட்டகிளப்பில்,புலிகளால் சகோதர படுகொலையில் கொல்லப்பட்டவர் )
என்ற ஒரு போராளி தப்பித்ததாகவும், தப்பித்த அனைவரினதும் நினைவுகளை அவர் ஒருவரது நினைவாக, அவர் கூறுவது போலவும் , அமுது சஞ்சிகையின் சித்திரை 2000 ஆண்டு இதழில் இயன்ற அளவு விரிவான தகவல்கள் வெளிவந்தன . பின்பு முகப் புத்தகங்கள் வாயிலாகவும் பலர் தமக்கு தெரிந்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
உண்மைகளை கண்டறிவதற்கு நெருக்கடியான காலங்களில் பங்களித்த அனைவரும் வரலாற்றில் நன்றியுடன் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டியவர்கள்.!
ஏற்கனவே வெளிவந்த தகவல்களுடன் புதிய தகவல்களையும் இணைத்து ஆவணப்படுதுவதுடன் படுகொலை செய்யப்பட்ட போராளிகளையும் நினைவு கூர்வது எமது தலையாய கடைமையாகும்.
நினைவு தினத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது.
கிட்டுவுக்கு தீப்பொறி குழுவினரால் குண்டு எறியப்பட்ட தினம் மார்ச் 29 1987. படு கொலை சம்பவத்தில் உயிர் தப்பியவர்களின் தகவல்களின் அடிப்படையில் படுகொலை சம்பவங்கள் மார்ச் 29, 1987 நள்ளிரவுக்கு முன்னரே நிகழ்ந்து விட்டன.
எனவே இந்த வருடம் முதல் கந்தன் கருணை படுகொலையை, மார்ச் 29 இல் நினைவு கூர்வது தான் முறையானதாக இருக்கும்.
கந்தன்கருணை படுகொலையில் கொல்லப்பட்ட போராளிகள், மற்றும் பொதுமக்களின் தகவல்கள், இயன்றவரை திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
கந்தன் கருணை படுகொலை தினமான மார்ச் 29, 1987 அன்று கொல்லப்படடவர்களின் விபரங்களையும், புகைப்படங்களையும் ஆவணப்படுத்த உதவ விரும்புவோர் தயவு செய்து உள்பெட்டியில் தகவல்களை தந்து உதவுமாறு தயவாக வேண்டுகின்றோம்..
கந்தன்கருணை படுகொலையில் மக்களுக்காக மரணித்து, எம்நினைவுகளில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னதமான போராளிகளே! வரலாறு உங்களை மீண்டும் மீண்டும் விடுவித்துக்கொண்டேயிருக்கின்றது.
கந்தன் கருணை படுகொலை நினைவுத் தகவல்கள் அடுத்த வாரமும் தொடரும்..............
63 சகோதர போராளிகள் கொலையுண்ட கந்தன் கருணை 

அமெரிக்கா - சிவா :கந்தன் கருணைப் படு கொலை 34 ஆவது நினைவு தினத்தை கனடாவில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது 

 இந்தச்சம்பவம் கிட்டு தன் காதலியை பார்க்கச் சென்ற சமையம் இனந்தெரியாத நபர்களினால் வீசப்பட்ட குண்டு கிட்டுவின் ஒரு காலைத் துண்டித்து விட்டது இதனால் ஆத்திரம் கொண்ட புலிகள் நல்லூர் பின் விதியில் உள்ள கந்தன் கருணை என்று பெயர் இடப்பட்ட வீட்டில் மாற்று இயக்கப் போரளிகள் EPRLF TELO POLT ஆகிய 70 பேர் வரையில் புலிகளினால் சிறைப் பிடித்து வைத்திருந்தனர் அவர்களை அருணா தலைமையில் வந்தவர்கள் படு மோசமாகச் சுட்டுக் கொன்றார்கள் அதில் 63 பேர் கொல்லப்பட்டு சிலர் உயிர் தப்பி யேர்மன் பிரான்ஸ் நாட்டில் வாழ்கின்றார்கள் பின்னர்தான் இந்தக் குண்டு மாத்தையாவினால்தான் வீசப்பட்டது என்று புலிகள் அறிந்து கொண்டார்கள் பின்னர் புலிகளின் உள் முரண்பாட்டினால் சில காலம் கடந்து மாத்தையாவையும் அவருடன் இருந்த 700 ம் மேற்ப்பட்டவர்களை புலிகள் கொன்று விட்டதாதக அறிந்து கொண்டோம் .

கருத்துகள் இல்லை: