புதன், 31 மார்ச், 2021

இலங்கை தமிழ் அரசியலில் சொல்லின் செல்வர் மட்டக்களப்பு செ.இராசதுரை முன்னாள் அமைச்சர்

May be an image of 1 person and text that says 'கலாநிதி செல்லையா இராசதுரை'
Ruban Mariarajan : இரா.சாணக்கியன் எம்.பிக்கு கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் ஆதரவு அதிகரித்துவருகிறது.
அதேபோலவே 1956 முதல் 1977 வரையும் தமிழர்கள் இதயங்களில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்துக்கொண்டவர்தான்
மட்டுநகர் முதல்வர் சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை.
1961 சிறிமாவோ ஆட்சியில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப்போராட்டத்தில் கைதாகி 6 மாதங்கள் அவசர காலச்சட்டத்தின் கீழ் பனாகொடை இராணுவ முகாமில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர். மட்டக்களப்பு கச்சேரியின் முன்பாக இப்போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்.சத்தியாக்கிரகம் இடம்பெற்று இவ்வாண்டுடன் 60 வது ஆண்டு.
தமிழரசுக்கட்சிக்கு சட்டத்தரணிகள் எம்.பிக்களாக வரும்போது மட்டக்களப்புக்கு சிறந்த தலைவன் இளைஞனான இராசதுரையே என்று தந்தை செல்வநாயகம் தெரிந்தெடுத்து 1956 தேர்தலில் போட்டியிட வைத்தவர்.தந்தை செல்வா இராசதுரை மீது அன்பும்,நம்பிக்கையும் கொண்டிருந்தார்.அதேபோலவே இராசதுரையும் தமிழரசுக்கட்சியிலும் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டார்.தந்தை செல்வா அடிக்கடி மட்டக்களப்புக்கு சென்று இராசதுரையை சந்திப்பார்.இன்றைய தமிழரசுக்கட்சியினர் தலைவர்,செயலாளர்,வேட்பாளர்,ஊடகப்பேச்சாளர் பதவிக்கு சண்டை பிடிக்கிறார்கள்.மட்டக்களப்பான்,யாழ்ப்பாணத்தான் என்று பிரச்சினைப்படுகின்றனர்.இராசதுரையை அன்று விலக்காவிட்டால் தமிழரசுக்கட்சியின் ஒரு தலைவனாக இன்றும் செயற்பட்டிருப்பார்.
மட்டக்களப்பு தொகுதியில் 1956,1960 மார்ச்,ஜூலை,1965,1970 தேர்தல்களில் தமிழரசுக்கட்சியிலும்,1977 தமிழர் விடுதலைக்கூட்டணியிலும் களமிறங்கி 1 வது பாராளுமன்ற உறுப்பினரானார்.1956 ஜூன் 5 பிரதமர் பண்டாரநாயக்கா தனிச்சிங்களம் அரச கரும மொழியாக
சட்டமாக்கியதை எதிர்த்து காலி முகத்திடலில் தமிழரசுக்கட்சி எம்.பிகள்,தொண்டர்களுடன் இராசதுரை சத்தியாக்கிரகம் இருந்தபோது காடையர்களினால் தாக்கப்பட்டவர்.1958 ஜூன் நாட்டில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் போதும் தமிழரசுக்கட்சி எம்.பிக்களுடன, கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.1957 ஶ்ரீ எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தவர்.தமிழரசுக்கட்சியின் கறுப்புக்கொடி போராட்டத்திலும் பங்கெடுத்தவர்.1957 மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அழிவுகளை பார்வையிட வந்த பிரதமர் பண்டாரநாயக்காவை தனது தமிழ் "ஶ்ரீ" எழுத்து பொறித்த "பேர்ஜோ" காரில் அழைத்துச்சென்றவர்.
கிழக்கில் மட்டுமல்ல வடக்கில் அவர் பேசும் தமிழரசுக்கூட்டங்களுக்கு திரண்ட மக்களையும்,.அவரது கன்னித்தமிழ்ப்பேச்சையும் இன்றும் மறக்கமுடியாது.தமிழரசுக்கட்சி தனது வேட்பாளர்களை விட உத்வேகமாக பேசக்கூடிய பல மேடைப்பேச்சாளர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியது.தலைவர்களின் கருத்துக்களை கேட்க திரண்ட கூட்டம் இளம் பேச்சாளர்களின் பேச்சை கேட்கவும் ஏங்கித்தவிக்கும் நிலை உருவானது.சில இடங்களில் மக்களை திரட்டவேண்டுமானால் சொல்லின் செல்வர் இராசதுரை வரவேண்டும்.அந்தளவுக்கு அவருக்கு மவுசு ஏற்பட்டது.யாழ்ப்பாணத்தில் கொட்டடியில் அவர் பேசிவிட்டு,அடுத்த கூட்டத்துக்கு குருநகருக்கு,அரியாலைக்கு,நல்லூருக்கு என்று பேசுவதற்கு போனால் இளைஞர்கள் மட்டுமல்ல முதியவர்களும் ஒரு கூட்டத்தில் இருந்துவிட்டு அந்த கூட்டங்களுக்கும் இராசதுரையின் பேச்சைக்கேட்பதற்கு ஓடோடிப்போனார்கள்.தீவுப்பகுதி உட்பட யாழ்.குடாநாட்டில் இராசதுரையின் கால்கள் படாத இடமே இல்லை.அவர் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார்.
கூட்டங்களில் "கடைசியாக இராசதுரை பேசட்டும்,முதலில் முக்கியமானவர்கள் பேசுங்கள்" என்று தந்தை செல்வநாயகம் மேடையில் இருப்பவர்களிடம் கூறுவார்.ஆனால் அமிர்தலிங்கம்,"முதலில் இராசதுரை பேசட்டும்,அதன் பின்னர் நான் பேசுகிறேன்," எனது பேச்சை கேட்கவே மக்கள் விருப்பம் என்றார்.செல்வநாயகமும் அதனை ஏற்றார்.ஆனால்,இராசதுரை பேசியபின்னர் மக்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறத்தொடங்கினர்.இதனை அவதானித்த செல்வநாயகம்,அடுத்த கூட்டங்களில் கடைசி பேச்சாளராக இராசதுரையே என்று முடிவு செய்து,சகல கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.இதன்படி இராசதுரையே கூட்டங்களில், கடைசி பேச்சாளர்
இதனால் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் இராசதுரைக்கு மக்களின் ஆதரவும்,புகழும் அதிகரித்து வந்தது.இது அமிர்தலிங்கத்துக்கும்,சிலருக்கும் பிடிக்கவில்லை.இராசதுரை ஒரு காலம் தமிழரசு தலைவராகிவிடுவாரோ என்ற அச்சமும் ஏற்பட்டது.தந்தை செல்வா 1977 தேர்தலுக்கு முன்னரே இறந்துவிட்டார்.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைமை அமிர்தலிங்கத்திடம் வந்தது.1977 தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் இராசதுரையை கூட்டணியின் "உதயசூரியன்" சின்னத்திலும்,காசி ஆனந்தனை தமிழரசுக்கட்சியின் "வீடு" சின்னத்திலும் களமிறக்கினார்கள்.இனிமேல் தமிழரசுக்கட்சி இல்லை!தமிழர் விடுதலைக்கூட்டணியே!நாம் ஒன்றுபட்டவிட்டோம் என்றனர்.தமிழரசுக்கட்சியின் "வீடு! " சின்னத்தை மட்டக்களப்பு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்பி காசி ஆனந்தனை அச்சின்னத்தில் களமிறக்கினர்.ஆனால்,மக்கள் இராசதுரையை மறக்கவில்லை.
'உதய சூரியன்' மக்களுக்கு நினைவுக்கு வராது,அதனால் 'வீடு' சின்னத்தில் காசி ஆனந்தன் வெல்லுவார்,இராசதுரை அவுட்.இராசதுரையை அரசியிலில் இருந்து ஒதுக்கிவிடலாம் என அமிர்தலிங்கம் கற்பனை .காசி ஆனந்தன் வேட்பு மனுத்தாக்கலுக்கு கூட்டணித்தலைவர்கள் சென்றனர்.இராசதுரைக்கு கூடச்செல்லவில்லை.காசி ஆனந்தனுக்காக பிரசாரம் செய்தனர்.அமிர்தலிங்கம் புலிகளால் படுகொலை செய்யப்பட்டபோது காசி ஆனந்தன் அனுதாபம் தெரிவிக்கவில்லை.அவர் புலிகளின் ஆதரவாளர்.ஆனால் இராசதுரை கவலைப்பட்டார்.அமிர்தலிங்கம் இறந்த பின்னரும் தேசிய பட்டியலில் அடுத்து மட்டக்களப்பைச்சேர்ந்தவரே இருக்கும்போது மாவையை எம்.பியாக்கினர்.கடந்த தேர்தலிலும் தேசிய
பட்டியலில் கிழக்கைச்சேரந்தவருக்கு வழங்க இழுபறிப்பட்டனர்.
முஸ்லிம்களும் ஒரு எம்.பியாக வரவேண்டும் என்றே மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதி.இதனால் இராசதுரைக்கு போட்டி வேண்டாம் என்றும் பலர் கூட்டணித்தலைமையிடம் கூறினார்கள்,கவிஞர் காசி ஆனந்தன் அப்போது தமிழ் ஈழமே! என்று வீரவசனம் பேசி இளைஞர்களை உசுப்பேத்தியவர்.சிறை சென்று வந்தவர்.அவர் பின்னால் இளைஞர்கள் உள்ளனர்.அவரே வெல்லுவார் என்றனர் கூட்டணித்தலைமை.
இராசதுரை செய்த குற்றம் என்ன? 1978 மட்டக்களப்பில் பெரும் அழிவுகளை தந்த சூறாவளி.நிலைமைகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பிரதமர் பிரேமதாச, அமைச்சர்கள் மட்டக்களப்புக்கு வந்தபோது,ஏனைய கிழக்கு எம்.பிக்களுடன் சென்று
அவர்களை வரவேற்று அழிவான இடங்களை காட்டினார் இராசதுரை." சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்த அமிர்தலிங்கம், கட்சி கொள்கைக்கு மாறாக அமைச்சர்களை வரவேற்றதும், அனுமதியின்றி போனதும் குற்றம்! என்றனர்.கட்சியில் இருந்து நீக்கவேண்டும்! விளக்கம் கேட்டார்.இராசதுரை நிலைமையை கூறினார்.முடியாது! குற்றம்,குற்றமே! என்று கட்சியை விட்டு நீக்கினார்கள்.அதன் பின்னரே ஐ.தே.கட்சியில்இணைந்து அமைச்சரானார்.ஒரு எம்.பி.கட்சிமாறக்கூடாது என ஜே.ஆர்.முதலில் அரசியலமைப்பில் குறிப்பிட்டிருந்தார்.இராசதுரை பிரச்சினையுடன் அதனை மாற்றிவிட்டார்.
மட்டக்களப்பில் அமிர்தலிங்கம் 1989 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைய இதுவும் ஒரு காரணம்.இராசதுரையை நீக்கியது அந்த மக்களுக்கு கோபம்.யாழ்ப்பாணத்தான் இங்கு வந்து எமக்கு எம்.பியாவதா.இன்று பிள்ளையான் எம்.பியும் இந்த பிரதேசவாதத்தையே கூறுகிறார்.யாழ்ப்பாணத்தலைமை எமக்கு வேண்டாம் என்கிறார்.1978 சூறாவளி நிவாரணம் வடக்கில் இருந்து மட்டக்களப்புக்கு வந்தபோது அமைச்சர் தேவநாயகம் ( கல்குடா) யாழ்.நிவாரணம் வேண்டாம் என்றார்.யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இவற்றை சேகரித்திருந்தனர்.
1977 இல் வர்த்தக அமைச்சர் லலித் அத்துலத் முதலி யாழ்.காப்புறுதிக்கூட்டுத்தாபன அலுவலகத்தை திறக்க வந்தபோது,யோகேஸ்வரன் எம்.பி கலந்துகொண்டார்.போகவேண்டாம்! என இளைஞர்கள் தடுத்து அவரது வீட்டில் மறியல் செய்தனர்."முடியாது! நான் வருவதாக அத்துலத் முதலிக்கு வாக்கு கூறிவிட்டேன்." என்று போய்விட்டார்.யோகேஸ்வரன் மீது தமிழரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
அமைச்சர்களை வரவேற்ற இராசதுரையை துரோகி என்றவர்கள்,கடந்த நல்லாட்சியில் ஐ.தே.க.அமைச்சர்களை,பிரதமரை வடக்கு,கிழக்கில் மாலை அணிவித்து வரவேற்றனர்.அன்று இராசதுரை மட்டக்களப்பு மக்களின் துன்பங்களை எடுத்துக்காட்ட சென்றார்.இன்றும் அபிவிருத்தி கூட்டங்களுக்கு சென்று அமைச்சர்களின் முன்பாக அமர்ந்து பிரச்சினைகளை கூறுகின்றனர்.இது துரோகம் இல்லை.இராசதுரை செய்தது துரோகமா
- Ruban Mariarajan

கருத்துகள் இல்லை: