திங்கள், 29 மார்ச், 2021

தேங்காய் எண்ணெய் புற்று நோயினை உண்டாக்குமா?

May be an image of coconut
Farm to Table : தேங்காய் எண்ணெய் புற்று நோயினை உண்டாக்குமா? By Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS, Post Graduate Diploma in Legal Medicine (DLM ), MD (Forensic Medicine)
கடந்த சில தினங்களாக இலங்கையில் சகல பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் அடிபடும் விடயமே புற்று நோயினை உருவாக்கும் பதார்த்தங்களினை கொண்டுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு அதன் அவற்றின் தகுதி சான்றிதழ் வெளியாகும் முன்னரே சுங்கத்தில் இருந்து அவை விடுவிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது என்பதே. இவ்வாறு எல்லோரும் பயப்பட காரணம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணையில் aflatoxin என்ற புற்று நோயினை உருவாக்கும் பதார்த்தம் இருந்தமையே ஆகும். இவ்வாறே இரு வருடங்களுக்கு முன்னர் aflatoxin அடங்கிய செத்தல் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
இயற்கையாகவே தேங்காயின் கொப்பராவில் aflatoxin இணை உற்பத்தி செய்யும் Aspergillus flavus, Aspergillus parasiticus , Aspergillus nomius போன்ற பங்கசுக்கள் வளரும் தன்மை கொண்டவை. இதன் காரணமாக இயற்கையாகவே தேங்காய் எண்ணையில் aflatoxin காணப்படும். எனவே இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயிலும் aflatoxin காணப்படலாம். கொப்பரா உற்பத்தியின் பொழுது உரிய சுகாதார முறைகளை கைக்கொள்ள தவறுவதால் இவ்வாறு alfatoxin தேங்காய் எண்ணையில் சேர்வடைகின்றது. ஒவ்வொரு உணவு கட்டுப்பாட்டு நிறுவனங்களும் தமக்கு உரிய தரக்கட்டுப்பாடு அளவினை கொண்டுள்ளன உதாரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அனுமதிக்கப்படும் அதி அளவு மொத்த aflatoxin 4 μg/kg மற்றும் aflatoxin B1 2 μg/kg ஆகும்.
Aflatoxin மட்டும் 18 வகையான உப வகைகள் உண்டு. இதில் aflatoxin b1 என்பதே மிகவும் ஆபத்தானது, இது class 1 என்ற carcinogen (புற்று நோயினை உருவாக்கும் காரணி ) ஆக வகைப் படுத்தப்பட்டுள்ளது. அதாவது class 1 என்றால் இந்த பதார்த்தம் அடங்கிய உணவு பொருட்களை உட்கொண்டால் நிச்சயமாக புற்று நோய் உண்டாகும் சாத்தியம் உள்ளது. முக்கியமாக ஈரல் புற்று நோய் உருவாகும். இந்த aflatoxin ஆனது வெப்பத்தினால் அழிவடையாது அதன்காரணமாக சமைத்த பின்னரும் இரசாயன ரீதியில் உயிர்ப்பாக காணப்படும். மேலும் இவ்வாறு aflatoxin இனால் பழுதடைந்த உணவுகளை உட்கொண்ட பசுக்களின் பாலில் aflatoxin b1 இன் பக்க விளைபொருள் ஆகிய aflatoxin m1 கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து aflatoxin எவ்வளவு ஆபத்தானது என்பதை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.
முக்கியமாக Aspergillus flavus என்ற பங்கசு தானியங்களான சோளம், கச்சான், கொப்பரா , அரிசி, மிளகு, செத்தல் மிளகாய் போன்றவற்றில் இயற்கையாக வளரும். முக்கியமாக மேற்குறித்த தானியங்களினை வெப்பமான ஈரலிப்பான இடங்களில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் பொழுதும், மழை நாட்களில் அறுவடை செய்யும் பொழுதும் இந்த பங்கசு தொற்றி கொள்ளும்.
இவ்வகையான தொற்றுதல் அடைந்த உணவுகளை உண்பதினால் என்ன சுகாதார சீர்கேடுகள் உண்டாகும்? Aflatoxin இருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால் உண்டாகும் நிலை aflatoxicosis என்றழைக்கப்படும். இந்நிலையினால் ஈரல் புற்று நோய், ஈரல் அழற்சி (cirrhosis and Reye’s syndrome), உணவுகள் சமிபாடு அடையாத்தனமை, போன்றன ஏற்படும்.
இவ்வாறு இந்த பங்கசு பாதித்த உணவுகளை அடையாளம் காணுவது? மிளகாயில் கறுப்பு நிறத்தில் இருக்கும் விதைகள் , கச்சானில் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் பருப்புகள், சோளத்தில் கறுப்பு நிறத்தில் இருக்கும் பகுதி, தேங்காய் கொப்பராவின் பழுதடைந்த கறுப்பு நிறமாக பகுதி, வெங்காயம் மற்றும் உள்ளியில் கறுப்பு நிறத்தில் இருக்கும் பகுதி ஆகியன பங்கசினால் பாதிக்கபட்ட பகுதிகள் ஆகும் இவற்றினை மக்கள் உண்பதினை தவிர்ப்பது நல்லது.
எவ்வாறு இந்த பங்கசு தொற்றினை தவிர்ப்பது? நாம் மேற்குறித்த உணவுகளை களஞ்சிய படுத்தும் பொழுது உலர்ந்த, இரலிப்பற்ற இடங்களில் களஞ்சிய படுத்த வேண்டும். இலங்கை மக்களுக்கு இது பற்றிய போதிய அறிவு இல்லை. எம்மில் எத்தனை பேர் சமைக்கும் பொழுது பங்கசு தோற்றிய உணவு பகுதிகளை அகற்றி விட்டு சமைக்கின்றோம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
முற்றும்

கருத்துகள் இல்லை: