புதன், 31 மார்ச், 2021

ஆத்திரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது சாணம் வீசிய அ.தி.மு.க தொண்டர்! 10 வருஷமா என்ன செஞ்சீங்க?”

kalaignarseithigal.com தேனி மாவட்டம், போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம், '10 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை, இப்போது வாக்கு கேட்டு வந்துட்டீங்களா... அ.தி.மு.க ஒழிக, ஓ.பி.எஸ் ஒழிக' எனக் கூறி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய முடியாமல் பாதியிலேயே வீடுதிரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், போடி தொகுதிக்கு உட்பட்ட நாகலாபுரத்தில், வாக்கு சேகரிக்க நேற்று முன்தினம் இரவு ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது பொதுமக்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென '10 ஆண்டாக எதுவும் செய்யவில்லை' எனக் கூச்சலிட்டவாறே, கையில் வைத்திருந்த சாணத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் மீது திடீரென வீசினார். ஆனால், சாணம் ஓபிஎஸ் மீது விழாமல், அவருக்கு பாதுகாப்பாக நின்ற போலிஸார் மீது விழுந்தது.

இந்த திடீர் தாக்குதலை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஓ.பன்னீர்செல்வம், அதிர்ச்சியடைந்து பிரசாரத்தை பாதியில் முடித்துவிட்டு கிளம்பினார். ஓ.பி.எஸ் மீது சாணம் வீசியவர் கெஞ்சம்பட்டியை சேர்ந்த முருகன். இவர் அ.தி.மு.க தொண்டர் ஆவார். இவரது உறவினர் காளிதாஸ்தான் நாகலாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

போடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ஓ.பி.எஸ் 10 ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்தும், நாகலாபுரத்திற்கு எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தியில் அ.தி.மு.க தொண்டரே சாணத்தை வீசியுள்ளார். போடி தொகுதியில் செல்லும் இடமெல்லாம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், அ.தி.மு.கவை சேர்ந்தவரே சாணம் வீசியது கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: