ஞாயிறு, 13 டிசம்பர், 2020

நட்டாவுக்கு கொரோனா.. பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா கொரோனா வைரஸ் தொற்றால்...

minnambalam :பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
   நட்டாவுக்கு கொரோனா

இன்று (டிசம்பர் 13) அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்தேன். பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது உடல்நிலை நன்றாக உள்ளது" என்று நட்டா இன்று மாலை ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.  மேலும் அவர், "எனது வேண்டுகோள் என்னவென்றால், கடந்த சில நாட்களில் என்னுடன் யார் தொடர்பு கொண்டிருந்தாலும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை உடனே கொரோனா சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்” என்று வேண்டியுள்ளார். கடந்த டிசம்பர் 2 ஆம் தேதியோடு நட்டாவுக்கு அறுபது வயது பூர்த்தியாகியுள்ளது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருக்கிறார்.

சில நாட்கள் முன்புதான் நட்டா மேற்கு வங்காள மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் செய்து, இரு நாட்கள் அங்கே நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். எனவே மேற்கு வங்காள பாஜக தலைவர்கள் உடனடியாக தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஜேபி நட்டா விரைவில் நலம் பெற்றுவருமாறு பாஜகவினரும், பிற கட்சியினரும் தங்கள் விருப்பத்தை சமூக தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: