செவ்வாய், 15 டிசம்பர், 2020

கோவையின் பிரபல சென்னை மருத்துவமனையை ரவுடிகளை ஏவி காவல் துறை உதவியுடன் அபகரிக்க முயற்சி. காவல் துறையே முன்னின்று நடத்திய அராஜகம்.

Sergio Marquina : · குற்றம் நடப்பது என்ன ? Part – 6 சட்டத்துக்கு புறம்பாக ஒரு மருத்துவமனையை காலி செய்ய ராமச்சந்திரனால் ஏவப்பட்டது 10 தொழில்முறை ரவுடிகள் துணைக்கு ஒரு 30 இளைஞர்களை நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் கூலிக்கு அழைத்து வந்திருக்கின்றனர். பெரும்பாலும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் எல்லோரும் யார் என்று பார்த்தால் தற்போது கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள். அவர்களிடம் நீங்கள் எல்லோரும் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஒருவன் BE இறுதியாண்டு, இன்னொருவன் M Tech படிப்பதாகவும் இன்னும் சில இளைஞர்கள் எல்லோரும் கல்லூரியில் இளநிலை அல்லது முதுநிலை கல்வி பயின்று வரும் மாணவர்கள் என்றும் சொல்கிறார்கள். அவர்களை இப்படியான குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவது குற்றச் செயல்களுக்குத் துணை போவது என்று சமூக விரோத சக்திகள் பயன்படுத்திக் கொண்டிருப்பது வேதனை அடையச் செய்கிறது.
குற்றச்செயல்களில் மாணவர்களை பயன் படுத்துவது வளரிளம் சமூகத்தை ஒரு குற்றப் பரம்பரையாக்குவதற்குச் சமம் சமூகத்துக்கு எவ்வளவு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றிய அக்கறை பணக்காரர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஒரு நாளும் இருக்கப்போவதில்லை.
டாக்டர் உமாசங்கர் ஒரு நேர்மையான மனிதர் என்பதால் திருப்பி அந்த ரவுடிகளை தாக்குவதற்கோ சட்டத்தை கையில் எடுக்கவோ இல்லை. இதுவே அறநெறிகள் குறித்த எந்த கவலையும் இல்லாத மனிதன் எதிர் தரப்பில் செயல்பட்டால் அந்த இளைஞர்களின் கதி. அவர்கள் கைது செய்யப்பட்டாலோ சண்டையில் அவர்கள் படுகாயம் அடைந்தாலோ மோதலில் செத்துப் போனாலோ அவர்களை கூட்டி வந்தவர்களால் எப்படி அவர்களின் இழப்புகளை ஈடு செய்து விட முடியும்.
அவர்களின் ஒரு இளைஞன் “எங்களுக்கு ஒரு இடத்தை காலி செய்ய வேண்டும் என்று சொல்லிதான் அழைத்து வந்தார்கள் இப்படி மருத்துவ மனையை அதுவும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளை வெளியேற்ற வேண்டும் என்றால் நாங்கள் இங்கே வந்து இருக்கவே மாட்டோம்” என்று சொன்னது முதல் தலைமுறை குற்றவாளிகளை எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் உருவாக்கிக் கொண்டிருக் கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்வை எனக்குள் விதைத்தது.
மாலை மருத்துவர் உமாசங்கரின் அறையில் அமர்ந்து கொண்டு தொழில் முறை ரவுடிகள் அருகில் இருக்கும் டாஸ்மாக்கில் வாங்கி வந்த சரக்குகளை அடிக்க ஆரம்பித்து விட அந்த இளைஞர்கள் பெண்களையும் நோயாளிகளையும் தயவு செய்து பாதுகாப்பான இடங்களுக்கு போய் விடுங்கள் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.
அதுவரை “எங்கள் மருத்துவர் வந்து சொன்னால் தான் நாங்கள் வெளியே போவோம்” என்று சொல்லி ஒற்றுமையாக இருந்த செவிலியர்களும் மருத்துவர்களும் நோயாளிகளின் நலன் கருதி ஒவ்வொருவராக வேறு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸை வரவழைத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் போடவேண்டும் என்றால் மருத்துவர் உமாசங்கர் வெளியே வரவேண்டும் பல லட்சங்கள் மருத்துவக் காப்பீட்டு பில்கள் மருத்துவமனையில் இருந்து காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பபடாமல் இருக்கிறது என்பது மருத்துவ மனை நிர்வாகத்துக்கு இருக்கும் முதல் சவால்.
நான்கு கோடி ரூபாய் செலவு செய்து நிறுவப்பட்ட கேத் லேப் மற்றும் சிடி ஸ்கேனர்கள் எல்லாமும் தொடர்ந்து ஒரு குறிப்பட்ட தட்ப வெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும். நோயாளிகளே இல்லை என்றாலும் தினமும் ஏசி போட்டு வைத்திருப்பார்கள். தற்போது அந்த சொத்துக்கள் என்னவாகும் ஒவ்வொன்றாய் செயல் இழக்க ஆரம்பிக்கும் என்பதும் மருத்துவ மனைக்குள் வைத்திருந்த பத்து லட்ச ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள மருந்துகளின் நிலை என்ன அங்கே இருக்கிறதா அல்லது அதை வந்தவர்கள் கையோடு எடுத்து சென்று விட்டார்களா ? போன்ற கேள்விகளுக்கு உடனடியாக விடை கிடைத்துவிட போவதில்லை.
ஒரு மனிதரை கைது செய்தால் உடனடியாக அவரை என்ன காரணங்களுக்காக கைது செய்கிறோம் என்பதை அவருடைய உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மறுநாள் அதை ஒரு செய்தியாக செய்தி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும். டாக்டர் உமாசங்கர் கைது குறித்த செய்திகள் ரகசியமாக வைக்கப்படுகின்றன.
பத்திரிக்கைகளுக்கு செய்தி கடத்தப்படவே இல்லை. பத்திரிகை துறையில் இருக்கும் நண்பர்களிடம் கேட்டபோது அப்படி செய்தி ஒன்றும் இல்லையே என்று சொல்லிவிட்டார்கள். வெள்ளிக்கிழமை கைது செய்தாயிற்று செவ்வாய்கிழமை வரை எந்த ஊடகத்திலும் செய்தி வரவில்லை. நான்கு நாட்கள் ஒரு மருத்துவமனை தாக்கப்பட்டிருக்கிறதே என்ற உணர்வு இல்லாமல் கோவை அமைதியாகவே கடந்து சென்றது.
இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்று திங்கட்கிழமை நானும் எனது குழுவினரும் மருத்துவமனை ஊழியர்களிடம் ரவுடிகள் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோக்களின் பதிவுகளை ஊழியர்கள் செல்போனில் படம் எடுத்து அனுப்பி வைத்ததை வைத்து ஒரு காணொலி உருவாக்கி யூ டியூபில் அப்லோடு செய்தோம். சொந்தங்கள் நட்புக்களுக்கு அந்த காணொலிக்கான லிங்க் அனுப்பி எல்லோரையும் பகிரச் செய்து அதை வைரலாக்குவது என்று முடிவு செய்தோம். வாட்சப் குழுக்களின் உதவியால் அந்த வீடியோ வைரலானது.
ஒரே நாளில் எல்லாத்தரப்பு மக்களையும் அந்த வீடியோ எட்டியதோடு இல்லாமல் எதிர்பாராத தரப்புகளில் இருந்து எல்லாம் உதவிக்கரம் நீட்டி இந்த போராட்டத்தில் டாக்டரை காப்பாற்றவும் போலீஸ் தரப்பு செய்த சட்டத்துக்கு புறம்பான செயலை சரி செய்யவும் தோளோடு தோள் நின்றது நெகிழ்வாக இருக்கிறது.
மருத்துவர் உமாசங்கரின் மருத்துவ சிகிச்சையால் பலனடைந்த ஏராளமான மனிதர்கள் மனித நேயம் மிக்கவர்கள் நேர்மையான விசயங்களுக்கு துணை நிற்பவர்கள் இப்போது எங்களோடு தோளோடு தோள் நின்று சட்டப் போராட்டங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள்.
எங்கள் வீடியோ வெளியான இரண்டு நாட்கள் கழித்து வக்கீல் ராஜேந்திரன் News 18 Tamil Nadu தொலைக் காட்சி நிறுவனத்தை அழைத்து காசு கொடுத்து செய்தி வெளியிடுகிறார். எங்கள் காணொளி வெளியான மறுநாள் தினமலர் அந்த செய்தியை நடந்ததை நடந்தவாறு எந்த திரிபும் இல்லாமல் முதல் பக்கத்தில் முகப்பு செய்தியாக வெளியிட்டு விட்டது ராமச்சந்திரனை நிலைகுலையச் செய்திருக்க வேண்டும். உடனடியாக உமாசங்கருக்கு எதிராக மாவட்ட குற்றவியல் காவல் துறையை உசுப்பி விட்டு மறுநாள் செய்தி கொடுக்கச் செய்கிறார்கள்.
க்ரைம் டைம் நிகழ்ச்சியில் நூறு கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்த சென்னை மருத்துவர் போலீசாரால் கைது என்று அவதூறு செய்தியை வெளியிட்டு சென்னை மருத்துவமனையை ஒழித்துக் கட்டும் வேலையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
நாங்கள் வெளியிட்ட வீடியோவின் கீழே ஏராளமானவர்கள் டாக்டர் உமாசங்கர் எப்படிப்பட்டவர் என்று கமன்டுகள் எழுதியிருப்பதும் நியூஸ் 18 செய்தி நிறுவனத்தின் கானொளியில் இது ஒரு அவதூறான செய்தி இதில் சிறிதும் உண்மையில்லை என்று எல்லோரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ததற்காக அந்த வீடியோவை நீக்கி விட்டு மறுநாள் மீண்டும் புதியதாக அதே வீடியோவை பதிவேற்றியது அடுத்தவர்கள் உரிமையில் மீடியா எப்படி மூக்கை நுழைக்கிறது என்பதை சாமானியர்களால் புரிந்து கொள்ளவே முடியாது பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் தான் தெரியும் உண்மையாக நடப்பது என்ன என்று.
தமிழ் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொலைகாட்சி ஊடகங்களுக்கு வெளியிடப்படும் செய்திகள் அவரவர் வருமானம் சார்ந்ததாகவே இருக்கிறது. தங்களுக்கு காசு கிடைக்கிறது என்றால் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் மட்டும் இல்லை என்றால் அரசாங்கமும் அரசுத்துறைகளும் அதிகாரமட்டமும் நம்மை காலில் போட்டு மிதித்துவிடும். நீதி மன்றங்களில் மட்டும் கொஞ்சம் நீதி இன்னமும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எங்களுடைய காணொளி காட்சி தமிழில் முதல் கமன்ட்டில். ஆங்கிலத்தில் இரண்டாவது கமண்டில்.
நியூஸ் 18 தமிழ் நாடு வெளியிட்ட க்ரைம் டைம் காணொளி மூன்றாவது கமன்ட்டில். மறக்காமல் இரண்டிலும் இருக்கும் கமண்டுகளையும் படித்துப் பாருங்க.
படம் தினமலர் செய்தியும் கல்லூரி மாணவர்களை குற்றச்செயலில் ஈடுபடுத்தியதற்க்கான ஆதாரமும்.
செர்ஜியோ மர்கினா

கருத்துகள் இல்லை: