சனி, 10 ஆகஸ்ட், 2019

சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக மீண்டும் பதவி ஏற்கிறார் .. பிந்திய செய்தி விஈடியோ


விகடன் : காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடந்துவருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்திக்குப் பிறகு, ஒரு இடைவேளைக்குப் பின்னர் சோனியா காந்தி அந்தப் பதவியில் இருந்தார். சமீபத்தில் அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அடுத்த தலைவராக அதே குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், காங்கிரஸின் புதிய தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற பிறகு, காங்கிரஸ் சந்தித்த முதல் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது . கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் அறிவித்தார். ஆனால், அவரின் ராஜினாமாவை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. இருந்தும் தன் நிலைப்பாட்டிலிருந்து சற்றும் விலகாமலிருந்தார். அவரை சமாதானப்படுத்த பல முயற்சிகள் நடந்தன.



அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். எதற்கும் அசையாத ராகுல், தான் ராஜினாமா செய்துவிட்டதாகவும் காங்கிரஸுக்குத் தேவையான இளம் மற்றும் திறமையான தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள் என்றும், தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கூறிவிட்டார்.

இதையடுத்து, கர்நாடகா மற்றும் கோவாவில் பல காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர். கர்நாடகாவில் நடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது. காங்கிரஸுக்கு சரியான தலைமை இல்லாததால்தான் இதுபோன்று நடப்பதாகவும், உடனடியாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.







இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில், காங்கிரஸின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனை நடந்துவருகிறது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.











நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், மாநிலங்கள் வாரியாக ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். காரிய கமிட்டி நிர்வாகிகள் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்து, காங்கிரஸின் அடுத்த தலைவர் பற்றிய கருத்தைக் கேட்டனர். இதையடுத்து, அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தினர். கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் பாதியில் வெளியேறினர்.
” காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றுவருகிறது. புதிய காங்கிரஸ் தலைவர் தேர்வில் நானும் ராகுலும் கலந்துகொள்வது சரியாக இருக்காது” என சோனியா காந்தி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்வில் தங்களின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்பதற்காக, இருவரும் வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இன்றைக்குள் காங்கிரஸின் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: