சனி, 10 ஆகஸ்ட், 2019

இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம்: முதல்வர்!.. ரொம்ப அலையறாங்க...

இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம்: முதல்வர்!மின்னம்பலம் : ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய அழைத்து வரலாம் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு விலக்கியதிலிருந்து, காஷ்மீர் பெண்களை திருமணம் செய்வது குறித்து பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஹரியானா மாநில பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார், ஹரியானாவின் மோசமான பாலின விகிதம் குறித்து நேற்று (ஆக.9) ஃபதேஹாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
பேட்டி பச்சோ பேட்டி பாடாவோ(பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) போன்ற பல திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். மோசமான பாலின விகிதம், பெண் கருக்கொலை ஆகியவற்றைக் கொண்ட மாநிலம் ஹரியானா. ஆனால் எங்களது திட்டத்தால் பாலின விகிதத்தை 850 முதல் 933 வரை உயர்த்தியுள்ளோம். இது ஒரு சமூக மாற்றத்திற்கான பெரிய வேலை” எனக் கூறியுள்ளார். மேலும், அவர் இத்திட்டத்தின் வெற்றி குறித்தும் பேசினார்.

“இந்த மோசமான பாலின விகிதம் எதிர்காலத்தில் எவ்வாறான சிக்கலை உருவாக்கும் என்பதை இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் எவரும் புரிந்து கொள்ளலாம். விகிதப்படி பார்க்கும் போது, குறைவான பெண்கள் மற்றும் அதிகமான ஆண்கள் இருக்கிறார்கள். எனவே பீகாரில் இருந்து பெண்களை திருமணத்திற்காக அழைத்து வர வேண்டும் என்று நமது அமைச்சர் ஓ.பி.தன்கர் அடிக்கடி கூறுவது வழக்கம். தற்போது காஷ்மீர் பெண்களை திருமணம் செய்வதற்கான தடை நீங்கியுள்ளதால், காஷ்மீர் மாநில பெண்களை திருமணத்திற்கு அழைத்து வரலாம்” எனக் கூறியுள்ளார்.
மேலும், “பாலின விகிதம் நன்றாக இருந்தால் தான், சமுதாயத்தில் சமநிலை இருக்கும்” என அந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார் மனோகர் லால் கட்டார்.
முன்னதாக, உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ விக்ரம் சைனி, கட்சி தொண்டர்களிடம் பேசும் போது, “சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் தற்போது அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம். பாஜகவில் உள்ள இளைஞர்கள் காஷ்மீருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம், நிலம் வாங்கலாம்” என சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார்.
விக்ரம் சைனி பேசிய வீடியோ காட்சி வைரலானதைத் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த சைனி, சர்சைக்குரிய வகையில் தான் எதையும் பேசவில்லை எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஹரியாணா முதல்வர் கருத்துக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் " காஷ்மீர் பெண்கள் குறித்து ஹரியாணா முதல்வர் கட்டார் இழிவான கருத்துகளைப் பேசியுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆண்டுக்கணக்கில் பயிற்சி அளித்தாலும் கட்டார் போன்ற பலவீனமான, பாதுகாப்பற்ற, பரிதாபத்துகுரிய மனிதர்களைத்தான் உருவாக்குகிறது. ஆண்கள் சொந்தம் கொண்டாடப் பெண்கள் ஒன்றும் சொத்துகள் அல்ல" என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: