புதன், 7 ஆகஸ்ட், 2019

காஷ்மீருக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம்: திமுக

காஷ்மீருக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம்: திமுக
மின்னம்பலம்:    காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வரும்
10ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
காஷ்மீர் இரண்டாகப் பிரிப்பு மற்றும் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவற்றை நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு திமுக உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தற்போது காஷ்மீரை இரண்டாகப் பிரித்தவர்கள் நாளை தமிழகத்தைப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்று திமுக எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். ஜம்மு காஷ்மீர் பிரிப்புக்கு எதிராக அம்மாநிலத்துக்கு வெளியே தமிழகத்தில் மட்டும்தான் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இருப்பினும் இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.

இந்தச் சூழ்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக நடத்தவுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்றிரவு (ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காஷ்மீர் பிரச்சினை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 10ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளது.
அதில் அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது குறித்தும், மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என்றும் கூட்டத்தின் முடிவில் மத்திய அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: