செவ்வாய், 21 மே, 2019

கோவை, ராமநாதபுரம், கரூர், தேனி தொகுதிகளில் வாக்கு இயந்திர மோசடிகள் நடக்கிறதா?

நான்கு தொகுதிகளில் கவனம் தேவை: ஸ்டாலின் மின்னம்பலம்:   மக்களவைத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் மே 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பிருப்பதாகவும், அன்றைய தினம் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது திமுக கூட்டணியின் வெற்றியை அபகரிக்க ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிட்டுவருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக திமுகவினருக்கு நேற்று (மே 20) கடிதம் எழுதியுள்ள ஸ்டாலின், “மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் திமுக முகவர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே மையங்களில் இருக்க வேண்டும். காலதாமதம் என்பதே கூடாது. வாக்கு எண்ணிக்கைக்காக மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் முறைப்படி அமைந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப் பதிவுக்குப் பிறகு, இயந்திரங்களுக்கு வைக்கப்பட்ட சீல் முறையாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.
பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் உள்ள வாக்குகளும் சரியான அளவில் உள்ளனவா என்பதை ஒப்பீடு செய்ய வேண்டும். எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பின், மாதிரி வாக்குப்பதிவுக்கு வலியுறுத்தி, வாக்கு இயந்திரத்தின் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கு எதிரான மிகக் கொந்தளிப்பான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தும், என்னவெல்லாம் செய்து திமுக வெற்றியைத் தடுக்க முடியும் எனத் திட்டமிட்டு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகள், 22 சட்டப்பேரவை இடைத் தேர்தல் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் அவர்கள் கவனம் செலுத்தும் நிலையில் மிகக் குறிப்பாக, கோவை, ராமநாதபுரம், கரூர், தேனி இந்த நான்கு தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிபெற எந்த எல்லைக்கும் செல்லும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கின்றன” என்று எச்சரித்துள்ளார்.
“ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் மிகவும் விழிப்புடன் இருந்து, வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை, ஆளுந்தரப்பு மற்றும் அதிகாரிகளின் மோசடித்தனங்கள் நடைபெறாத வகையில் கவனம் செலுத்த வேண்டும்” என்று முகவர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ள ஸ்டாலின், நொடிப் பொழுதில் வெற்றியைக் களவாடிச் செல்ல அதிகாரத்தில் இருப்போர் தயாராக இருக்கிறார்கள். எனவே, வெற்றியை அறுவடை செய்யும் நாளான மே 23 அன்று வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள முகவர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: